செவ்வாய், 5 ஜூலை, 2011
கட்டிப்புடி வைத்தியம்
அவள் கருங்கூந்தல் காட்டுக்குள்
என்விரல்கள் நுழைந்து
அலைந்து களைத்து களிக்கின்றன....
கருத்த பூமியாய் சுழலும்
கண்மணியை
பார்த்ததால் பரவசப்பட்டதால் வேர்த்ததால்
இமைகள் கவறிகள் வீசுகின்றன...
மதுக்கோப்பைகளாய்
செக்கச்சிவந்த உதடுகள் நான்கும்
இதழ்மாறி பரிமாறி தேனூறி தளும்புகின்றன...
பத்துப்பத்தாய் கொத்துக்கொத்தாய்
இருபதுவிரல்கள் பின்னிய புள்ளியில்
மின்சாரம் பாய்கின்றன...
பேசியவார்த்தையில் நாசியில்
பாலைவன வெப்பம் தகிக்கிறது...
எது உடல்? எது உயிர்? என்றறியாமல்
ஆன்மா தவிக்கிறது...
வரம்பையும் மீறி நரம்பின் நாளங்களில்
குருதியும் நிறைகிறது ...
எண்ணையும் ஊற்றவில்லை
தீக்குச்சி கிழிக்கவில்லை
எப்படியோ என்னுடல்
பனியிலும் எரிகிறது ...
அணைக்கிறேன் அணைக்கிறேன்
அணைக்க அணைக்க
இன்னும் கொழுந்துவிடுகிறது...
அவள் மொழி
காற்றில் மிதந்து காதில் நுழைந்து
உயிர்எல்லாம் இனிக்கிறது...
மயிர்
கூச்செறிய
காமன் பூச்சொரிய
உடலெல்லாம் மலர்கிறது...
தாள்களா? தோள்களா?
என்றறியாமல் அதில்
கவிதை நிறைகிறது ...
தூக்கத்தை தகர்த்து
ஏக்கத்தை உதிர்த்து
நிகழ்வில் நிலைக்கிறது...
எல்லா நிலங்களையும்
எனது ஜீவநதி
ஓடி நனைக்கிறது..
.
காமமும் கடவுளும்
ஒன்றுதான் என்றுதான்
இயற்கை சொல்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக