செவ்வாய், 19 ஏப்ரல், 2011

முத்தங்கள்


எந்த மருத்துவரிடமும்
இதுவரை
நான் சொன்னதே இல்லை.
என் சர்க்கரைவியாதிக்கு
காரணம்
நீ தந்த
முத்தங்கள் என்பதை

மீன்பிடிக்க தடை
கருத்தரிக்கிறது
கடலில் மீன்குட்டிகள்
வீட்டில் சவப்பெட்டிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011


தேசத்திற்கு வெள்ளையடிக்க
சுண்ணாம்பு துகள்கள்
இங்கு சிந்தப்படுகின்றன

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பூட்டப்பட்ட வீடு



தாளிக்கும் நறுமணத்தை

சுவாசித்திராத

நுரையீரல்



வெளிச்சம் பூசி

அலங்கரித்துக்கொல்லாத

மின்விளக்குகள்



சூடுதணிந்து

குளிர்ந்துபோயிருக்கும்

அடுப்படி



கைமாறாட்டத்தில்

வதைபடாத

ரிமோட்



நீர்த்தெளித்து

முகம் கழுவாத

முன்றில்



கோலப்புள்ளி இடாமல்

விதவையாக காட்சிதரும்

வாசல்



போர்நிறுத்தத்தை கைவிட்டு

படையெடுக்கும்

எறும்புகள்



வீட்டிற்குள் வீட்டை

நெய்துமுடித்த

சிலந்திகள்



இறக்கையை

அசைத்துப்பார்க்காத

மின்விசிறிகள்



கிழிபடாததால்

வருத்தம் தெரிவிக்கும்

நாள்காட்டிகள்



தங்களைத் தாங்களே

வாசித்துக்கொள்ளும்

புத்தகங்கள்



களைப்பு நீங்கி

இறைவன் ஓய்வெடுக்கும்

பூஜையறை



திறவுகோலின்

கலவிக்காக எங்கும்

கதவின் துவாரம்



கர்ப்பம் தரித்த

வீட்டின்

தபால்பெட்டி



தீவிர

மெளனவிரதம் இருக்கும்

இல்லம்



மலர்ந்திருந்தும்

கிள்ளப்படாமல் இருக்கும்

பூக்கள்


கலகலப்பாய்

பேசமறந்த பாத்திரங்கள்






இப்படியாய் பலவும்...

யாருமற்ற வீடு
எனக்குப் பேச்சுத்துணையாய்
சுவர்க்கடிகாரம்

சனி, 16 ஏப்ரல், 2011


இது வரையில் பல லட்சம் தாள்களைத் தின்றிருக்கிறேன்.
நான் ஒரு கவிதைக்கழுதை

காலத்தின் ரத்தம்


உறையாமல்
காலத்தின் ரத்தம்
பெருக்கெடுத்துக்கொண்டே இருக்கிறது
கடிகார முள் கிழித்து