ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அவன் தோழன்/அவள் தோழி.


கண்களை நனைத்த கண்ணீர்

என் கன்னம் நனைப்பதற்கு முன்

சுட்டுவிரல் தந்து தொட்டுத்துடைத்தாய் ...



க'வலை'யில் மூழ்கி நான்

முடிந்து போகும் முன்

அன்பின் வலைவிரித்து இதயக்கரை ஏற்றினாய்...



வருத்தங்களால் வாடிப்போயிருந்த

என் வதனபூங்காவில்

உன் புன்னகை விதைதூவி பூக்களை மலர்த்தினாய் ....



கோபங்களால் உன்னை காயப்படுத்தி

நான் காயப்பட்ட போதெல்லாம்

நீ மெளனங்களால் மருந்துபூசினாய்...



களைத்து சோர்ந்துவிட்ட பொழுதுகளில்

களிக்கும் சொல்லிசையால் உற்சாகம் ஊட்டினாய்...



நான் தேம்பித்துவண்ட நிமிடங்களில்

மார்பினில் சாய்த்து தோள்களைத் தட்டினாய்...



எதிர்ப்பார்த்திராத வேளைகளில்

தரிசனம் தந்து கரிசனம் காட்டினாய்...



கேட்டதும் தந்தாய் கேட்காததும் தந்தாய்

என் பசியறிந்து இறைபோட்டாய்.....



உன்னை நிறைக்கமறக்காமல் மறக்கநினைக்காமல்

ஒவ்வொரு வினாடியும் நினைவில் இருந்தாய்...



தூக்கம் தொலைத்து துவண்ட நிமிடங்களில்

உன் வார்த்தைதாலாட்டில் இமைமூடவைத்தாய்...



நான் புரிந்திராத என்னை

நீ நன்கு புரிந்திருந்து புரியவைத்தாய்...



என் துன்பங்களை வாங்கிக்கொண்டு

இன்பங்களை பரிசாக்கி மகிழ்ந்தாய்...



தகிக்கும் என் சகார இதயத்தை

உன் டார்ஜிலிங் சிரிப்புக்களால் சில்லிடவைத்தாய்....



கண்களை மூடி ஒருமித்த வேளைகளில்

நெற்றியின் நடுவில்நின்று தியானப் பொருளானாய்...



இவைகளில்

ஏதேனும் ஒன்றாய் இருந்தால் போதும்.

உங்களைக்கொண்டாடும்

அவன் தோழன்/அவள் தோழி.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

தகிதா பதிப்பகத்தின் நூல் வெளியீடுகள் - 2011



தகிதா பதிப்பகத்தின் 2011 ஆண்டு நூல் வெளியீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.அதன் முதல் கட்டமாக வே. விநாயக மூர்த்தி என்னும் கவிதை சகோதரரின் கவிதை நூலான "கற்கள் எறியாத குளம்" வாசகர்களின் இதயங்களை நனைக்க வருகிறது.இது இந்த கவிஞரின் முதல் படைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையோடு தன்னை இணைத்திருக்கும் புத்திலக்கிய பிரியர் இவர்.பல்வேறு காலங்களில் இவர் ரசித்து சுகித்து எழுதியதை பிரசுரித்ததை கோர்த்து இந்த கவிதை குளத்தில் நிரப்பி இருக்கிறார். அந்தியூரை சார்ந்த இந்த படைப்பாளர் நிறைய விருதுகளை தன் படைப்புக்காய் பல களங்களில் வென்றிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.தகிதாவின் இந்த படைப்பாளியை நீங்களும் வாழ்த்தி வரவேற்கலாமே!

சனி, 23 ஜூலை, 2011

"தெய்வத்திருமகள்,மகன்" - திரைவிமர்சனம்


.23 ஜூலை 2011, 22:04 க்கு Mani Vannanஆல்.தாயுமானவனுக்கும் தந்தையானவளுக்கும் இடையேயான மெல்லிய உறவின் உணர்வே 'தெய்வத்திருமகள்'.நிலாவும் கிருஷ்ணாவும் நிஜத்தில் நமக்கு நெருக்கமானவர்கள் ஆகிவிட்டார்கள்.உடல் மொழி பாவனை அசட்டு மொழிநடை புதுமாதிரியான மெளனம் போன்ற பலவற்றால் கிருஷ்ணா தொடக்க காட்சி முதலே உன்னிப்பாக கவனிக்க வைக்கிறார்.தித்திப்பான சாக்லேட் கூடத்தில் உவர்ப்பான சோகத்தின் கலவை சரிவிகிதம்.



தனக்கு மனைவி இல்லையே இன்று ஏங்குவதை விட தன் நிலாவிற்கு தாய் இல்லையே என்று ஏங்கும் ஏக்கம் கிருஷ்ணாவின் தூய ஆன்மாவின் அடையாளம். 'அம்மா எங்கப்பா' என்று மகள் கேட்கும் கேள்விக்கு 'சாமிகிட்டே போயிட்டாங்க' என்று சம்மளிக்கும் கிருஷ்ணாவை 'ஏன் சாமிகிட்டே போனாங்க' என்று கிளர்ந்தெழும் நிலாவின் இரண்டாவது கேள்வி 'நல்லவங்களை எப்போதும் சாமி தன் கூடவே வச்சிக்கும்'என்ற பதிலை கிரிஷ்ணாவிடமிருந்து கொண்டுவருகிறது. 'அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா?' என்ற எதிர்வினா ஒவ்வொரு பார்வையாளனின் தொண்டைப்பகுதியை கனக்கவைத்து விழிகள் இரண்டையும் பனிக்கவைக்கவே செய்கிறது.இப்படி ஒரு கேள்வியை கிருஷ்ணாவும் எதிர்ப்பார்க்கவே இல்லை.சிறார்களின் சில வினாக்களுக்கு பெரியவர்களாலும் பதிலளிக்க முடியாது எனபது நிதர்சனம்



ஒரு சமூக சேவகியாக இருந்து நிஜமாகவே மனநிலை பாதிக்கப்பட்டவரான கிருஷ்ணாவை மணந்து ஒரு குழந்தைக்கு தாயாகி தெய்வமான நிலாவின் தாயும், தன் மகளின் அன்பிற்கு கட்டுப்பட்டு தன் செல்வாக்கு அந்தஸ்த்து இவைகளைப்பற்றி கவலைப்படாமல் தன் மகளின் விருப்பமே தன் விருப்பம் என்று நெகிழ்ந்துகொடுத்த நிலாவின் தாத்தாவும்,கிருஷ்ணாவின் குழந்தைக்கு கள்ளம்கபடமில்லா நிழல் தாயாக வாழ்ந்த கிருஷ்ணாவின் நண்பரின் மனைவியும்,கிருஷ்ணாவிற்கு எந்த ஒரு சூழலிலும் தினையளவேனும் துரோகம் நினைக்காத தன்னொத்த தூய தோழமைகளும்,தன் சகோதரியின் மகளான நிலாவிற்காக தன் காதலையும் கூட தூக்கி எரியத் துணிந்த நிலாவின் சித்தியும்,சிக்கல்களோடு நீதிமன்றத்தில் படி ஏறுகிறவர்களை வலிந்து அணுகும் வழக்கு இளவல் வினுவும் ,தெளிவும் துணிவும் கனிவும் இரக்கமும் கொண்ட வினுவின் வழக்கு தலைவியாக வந்து வழக்கறிஞர் என்பதையும் தாண்டி நல்ல சமூக அக்கறைகொண்ட மனுசியாகவரும் அனுராதாவும், சாக்லேட் நிறுவத்தில் பணியாற்றும் கிருஷ்ணாவின் ஒவ்வொரு நகர்விலும் அக்கறை எடுத்து உறுதுணையாக இருக்கும் உற்ற நண்பராக வாழ்ந்திருக்கும் அந்த முதலாளியும் என்று படம் முழுக்க இப்படியான நல்ல கதாபாத்திரங்களால் 'தெய்வத் திருமகள்' பின்னப்பட்டிருக்கிறது.





தன் மனைவியின் மரணத்திற்கு பிறகு திருமணம் என்பதைப் பற்றியே சிந்தனை இல்லாமல் தன் நிலாவையே உலகமாக பார்த்து பரவசப்பட்டு சுகிக்கும் ஒரு நல்ல தந்தையின் முத்திரை கிருஷ்ணாவின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது.உள்ளங்கைகளை மடக்கி அதற்கு உதட்டுச்சாயம் பூசி கிருஷ்ணாவும் நிலாவும் கைகளால் பேசிக்கொள்ளும் காட்சிகள் பாசத்தின் பரவசச் சாரல்.கண்களிலிருந்தும் விரல்களிளிருந்தும் முகபாவனைகளிளிருந்தும் இத்தனை அடத்தியான நேசத்தின் பாசைகளை ஒரு நிலாவால் வெளிப்படுத்த முடிந்ததற்கு

நிலாவிற்கு பாராட்டு,அந்த மழலையிடமிருந்து மகத்தான அந்த வெளிப்பாட்டினை வெளிக்கொண்டு வந்தமைக்கு இயக்குஞர் விஜய் அவர்களுக்கு கைத்தட்டல்கள்.





நீதிமன்ற காட்சிகளை தமிழ் சினிமாக்கள் தள்ளிவைத்து பத்துவருடங்களுக்கு மேலாகும் சூழலில் ஒரு பாதி திரைப்படத்தை நீதிமன்றத்திற்குள் நகத்தி பார்வையாளர்களை கூர்ந்து கவனிக்கவும், மெளனமாக அழவும்,ரகசியமாய் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளவும்,மனது இளகவும் செய்திருந்தது அற்புதம்.மேலும் தேவையான இடத்தில் இசை,பளிச்சென்ற எதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் வசனங்கள் இயல்பான காட்சியமைப்புகள் இவை அனைத்துமே தெய்வத்திருமகளுக்கு சூட்டப்பட்ட கிரீடங்கள்.நகைச்சுவைக்கு தனியாக தடம் அமைக்காமல் கதையின் ஓட்டத்தில் நகைச்சுவை உணர்வை குபீரென்று வெடிக்கச் செய்திருப்பது திரைக்கதையின் புத்திசாலித்தனத்திற்கு சிறந்த உதாரணமாகிறது



பசுமையான வனங்கள்,உயரமான மலைகள், செழிப்பான தேயிலைத் தோட்டங்கள்,வளைந்து நெளிந்த சாலைகள்,மரவீடுகள், ஜில்லென்ற மேகங்கள் மற்றும் குறிப்பாக கள்ளம்கபடமில்லாத மனிதர்கள் என்று அத்தனை அழகின் சிரிப்புக்களையும் நீலகிரிமாவட்டத்தின் பின்னணியோடு இணைத்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.ஜில்லென்ற தேசத்தில் வாழ்ந்த கிருஷ்ணாவின் தகிக்கும் வாழ்க்கை பாடுகள் வெப்பம் தணியாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன . நல்ல களம் நல்ல கதை நல்ல கதாபாத்திரங்கள் நல்ல படிப்பினை என்று பல்ல நல்லவைகளை அடுக்கிக்கொண்டே போகமால்.



உண்மையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட கிருஷ்ணா அளவிற்கு எதார்த்தமான உடல்மொழி வெளிப்பாடுகளை தரமுடியும்என்பது சந்தேகம்.மேனி இளைத்து ,கன்னம் வற்றி, உடல் கோணி,மொழி குழறி, மழலையாய் வாழ்ந்திருக்கும் கிருஷ்ணாவிற்கு பாராட்டுக்களை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பிசகாமல் அந்த அசட்டுத்தனமான மழலை உணர்வை பரிமாறி இருப்பது கிருஷ்ணாவை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது.தெய்வத்திருமகளாக நிலாவும் தெய்வத்திருமகனாக கிருஷ்ணாவும் தேவ பாசை பேசுகிறார்கள்.நல்ல அன்மாக்களால் மட்டுமே அந்த பரி பாசைகளை செவிமடுக்கமுடியும்.



படம் முடிந்ததும் படித்தவர்கள் நிறைந்த ஒரு கருத்தரங்க அறையில் ஒரு நல்ல நிகழ்வு நடந்துமுடிந்த பிறகு ஆரவாரமில்லாமல் மனது நிறைந்து ஒரே சீராக தட்டிய கைத்தட்டல் இன்னமும் ஏன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அந்த கைத்தட்டல் இயக்குஞர் விஜய்க்கு உரியது என்பது ஏன் கருத்து.உங்கள் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்





இயக்குஞரிடம் சில கேள்விகள்

1 . பிறந்ததிலிருந்து ஐந்து வயதுவரை சீரோடும் சிறப்போடும் நிலாவை வளர்க்கத் தெரிந்த கிருஷ்ணாவிற்கு அதற்குமேல் வளர்க்கமுடியாது என்ற உணர்வு ஏற்பட்டு நிலாவின் சித்தியிடம் அவளை ஒப்படைப்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை.

2 . நிலாவின் சித்தி தன் வருங்கால துணியை கரம்பிடித்தாளா? இல்லையா?

3 .கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கலந்த உணர்வை ஒரு கட்டத்தில் காதல் கொள்ளத் தொடங்கும் அனுராதாவின் முடிவுதான் என்ன?

4 .மதுவிற்கும் மாதுவிற்கும் தன் சட்டத்தை அடகுவைக்க தயாராக இருக்கும் வழக்கறிஞர்களை குத்திக்காட்டி இன்னொரு வழக்கறிஞரை கண்ணியமாகக் காட்டி இருப்பது சப்பைக்கட்டுதானே.

5 .சாக்லேட் நிறுவனம் அமைக்கப்பட்டது செயற்கையாக தெரிகிறது.குறிப்பாக மரவிசிரி கண்களை உறுத்துகிறது.இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

6 .'விழிகளில் ஒரு வானவில்' என்ற பாடல் கதையின் ஓட்டத்தில் மிகப்பெரிய வேகத்தடையாகவே இருக்கிறது.நேரத்தை நிரப்புவதற்காக இந்த முயற்சியா? அந்த ஐந்து நிமிடங்களில் நிலாவை காட்டி இருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருப்போம்

7 .வழக்கில் வெற்றிபெற வேறு விதமான வியூகங்களை இளைய வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற உங்களின் வழிகாட்டல் நியாயம்தானா?

.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்புதேனம்மை லெக்ஷ்மணன்

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.

விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.

மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் செய்துகொள்வதில் தொடங்கும் ஆச்சர்யம் நூல் முழுமைக்கும் வியாபித்தது. கலைக்கப்படாத வீடு சிந்தனையைத் தூண்டியது. எதற்கு சம்பாதிக்கிறோம் என.

சிபாரிசு என்னை மிகவும் கவர்ந்தது அதன் எளிமையான அர்த்தத்தால். எவனோ தொரட்டி பிடித்து என் வாய்ப்பைப் பறித்டுச் செல்வது போல உணர்ந்தேன். தீண்டாமை பற்றிய தீவிரமான கவிதைகள் சிலவும் உண்டு. வர்ணமும்., சந்தர்ப்பவாதமும்., பஞ்சபூதங்களும் சில.

வர்ணங்களுக்காக
தன் வக்கிரச் சுவடுகளைப்
பதிய வைத்தபடி
எரிகின்றது வேள்வித்தீ.

கருப்புக் காய்கள் இரண்டாம் நகர்த்தலுக்கே தள்ளிவைக்கபடுதலும.. இன்னுமா இதெல்லாம் என வருந்த வைக்கிறது. அதே சமயம் திணிப்பை எதிர்த்துக் கடிக்கும் செருப்புக் கவிதை பலே.

காக்கையி்ன் கூட்டை சங்கீதக்குயில்கள் பயன்படுத்துவது பற்றி நல்ல சாடல். என்றும் வலியோன் ., தந்திரமிக்கவன் அடுத்தவனை ஏய்த்துப் பிழைப்பதான உருவம் கிடைக்கிறது இக்கவிதையில்.

கடவுளையே சாத்தானாக்குவது கவிஞனுக்கு வசப்படுமோ.. உண்மைதான். தோற்ற சாத்தானுக்கு பதிலாக கடவுளோடு சமரிட்டால் கடவுளே சாத்தானாகிறார். ஆண்டானே சூதுக்கு வசப்படுதல் இருக்கலாம். ரகசியங்களை வெளியிடும் நண்பர்களின் துரோகம்வலித்தது.

பலிகளுக்குப் பின் தாமதமாய் வரும் சமாதானம் வெண்புறாக்களாய் உருவகப்படுத்தப்பட்ட விதம்.. வதம்.

அவன் இவன் அடிக்கடி நினைவோட்டத்தில் சிக்கி என் மனரேகை படிந்த கவிதை..

அவனைப்பற்றிய
அபிப்ராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்.
சற்றும்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாயிருந்தான்.

என எண்ணவோட்டத்தின் மாற்றத்தை படம் பிடித்தது துல்லியம். யுத்தத்தில் ஒற்றைச் சொல்லைக் கேடயமாக்கவா ., வாளாக்கவா.. என கவிதைகள் பல முன்னிருப்பவரிடம் கேட்பது போலும் நடந்தது பகிர்வது போலும் உள்ளன.

ஏழையின்., அந்தகனின்., பிச்சைகாரனின். ரோட்டோர ஓவியனின் காதுகள் அலுமினியத்தட்டில் விழும் காசுச் சத்தத்துக்காக பசித்திருப்பதுமான கவிதைகள் தவிக்க வைத்தன..

குளத்தில் கல்லெறிந்து உடைந்த நிலாவும். பானைச் சில்லாய் கிணற்றுள் பயணப்படுவதும்., ரேணுகையின் உலோகக்குடமும்., நாய்க்கு உணவள்ளி வைக்கும் பிச்சைக்காரியும்., அழகு.

பருவமும்., ஒப்பனையும் பொறிக்கும் வாய்ப்பற்ற முட்டையுடைய பறவை விட்டுச் சென்ற இறகும் ., அற்றகுளமும். சாதிகளால் ஆன தேசமும் சிற்றிலும் கொஞ்சம் அதிர வைத்த கவிதைகள். தாகம் என்னுடைய தாகத்துக்காக நான் சேமிப்பதை அடுத்தவர் எடுத்துச் செல்வதும் ., நான் நானாக இருப்பதும் ., காதல் ஏக்கமும்., கசிய வைத்தது.

தூக்கத்தின் வண்ணம்
நிறம் இழக்கிறது
ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப்படுகிறது
இருள்..

இருளைக் கழுவேற்றும் இந்தக் கவிதை ரொம்ப வித்யாசம். யாழியின் கைரேகை படிந்த கற்களை என் கைகளில் வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் என் கையிலும் ரேகைகளைப் படிய வைத்த கற்கள் இவை.. கவிதைகள் இவை..

டாக்டர் அப்துல்கலாம் வடக்கு வாசலில் குறிப்பிட்ட இவர் கவிதையை முடிவில் குறிப்பிடுகிறேன்.

நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரி்யாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்..

தொடரட்டும் .. அந்தப் பக்கங்களிலும் உங்கள் கைரேகை படிந்த கவிதைகள்.. வாழ்த்துக்கள் யாழி. அருமையான தொகுதியைக் கொடுத்தமைக்கு.. தகிதாவுக்கும் மணிவண்ணனுக்கும் கூட.

இல்லைகளில்தான் இருக்கிறது

சிறகுகளால் வரையும் பறவைகள்

வானப்புத்தகத்தில் முகவரிகளை குறித்துவைப்பதில்லை.

ஓய்வெடுத்துச் செல்லும் வண்டுகள்

பூவின்பக்கங்களில் விலாசங்களை எழுதிவைப்பதில்லை

அலைப்படகுகளில் பயணிக்கும் முத்துக்கள்

பயணக்குறிப்புகளை கடல்நீரில் வரைந்துவைப்பதில்லை.

கடந்து செல்லும் காற்று

நடந்துவரும் தடங்களை நினைவில்வைப்பதில்லை

குளிர்ந்து ஒளிரும் நிலா

வெளிச்சங்களை நிரந்தரமாய் எழுதிவைப்பதில்லை

நிமிர்ந்து நிற்கும் மரம்

குனியும் நிழல்களுக்காய் கோபம்கொள்வதில்லை

குலைந்து உருகும் பனி

அடையாளம் தொலைவதற்காய் அழுதுவைப்பதில்லை

பொழிந்து தள்ளும் மழை

வானம் தொலைத்ததற்காய் வருத்தம்கொள்வதில்லை....

திங்கள், 11 ஜூலை, 2011

பேருந்தில் அழுத வீணை( சிறுகதை )


பயணத்தின் ஒரு சாலையில் எனக்கு லேசாக விழிப்புவந்தது.தூங்கி வழிந்த கண்களை விரல்களால் நன்றாக கசக்கி இரட்டைப் பிறவிகளைப் போலிருக்கும் என் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடு பறக்க தேய்த்து அந்த கதகதப்பை குளிர் காற்றால் சில்லிட்டிருக்கும் முகத்தில் அடைகாப்பதைப்போல பரவவிட்டேன்.

பேருந்து மலைப்பாதையில் மெதுவாகவும் நிதானத்தோடும் நகர்ந்து கொண்டிருந்தது..என் கழுத்தோடு விழிகளையும் முடிந்த வரை திருப்பி கலங்கரைவிளக்க விளக்கைப் போல பேருந்துக்குள் நாலா புறமும் நோட்டமிட்டேன்.எல்லோரும் தூங்குகிறார்கள். கடைசி இருக்கையில் கதவருகில் பணப்பையை சட்டைக்கு வெளியில் பூணூலைப் போட்டுக்கொண்டதைப் போல தொங்கவிட்டிருந்த நடத்துநரும் உறக்கத்தில் இருந்தார்.சுமார் ஐம்பத்தேழு இறந்த பிணங்களை சுமந்துகொண்டு ஒரு இயந்திரபல்லாக்கு நகந்துகொண்டிருந்ததைப் போல நான் உணர்ந்தேன்.ஒட்டுஞர் மட்டும் உயிரோடிருந்தார்.

கம்பீரமான மலைகளையும் ,மரகதம் பாவிய இயற்கை எழில்களையும் ரசித்தப்படி சிலாகித்துக்கொண்டிருந்த அந்த ஒரு தருணத்தில் எனக்கு வலது புற இருக்கையில் குழந்தை அழும் சத்தம் வரவே திரும்பிப்பார்த்தேன்.

அப்பாவின் தோளில் அம்மா சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருக்கிறாள்.மனைவியை தன் தோள்களில் உறங்க வசதியாய் தாங்கிக்கொண்ட அந்த நபர் தன் மகள் அழுவது தெரியாமல் அதேசமயத்தில் உறக்கத்தில் கூட இரு கைகளை அணைப்போல வளைத்து வைத்துக்கொண்டு இருந்தது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.

முகாரி மெல்லிசையாகத் தொடங்கிய அந்த குழந்தையின் அழுகை பேருந்து முழுக்க பரவத்தொடங்கியது.மனதைப் பிழியத்தொடங்கிய அந்த மழலையில் அழுகையை நிறுத்த வேண்டுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடலானேன்.

பெருவிரலையும் நடுவிரலையும் ஒன்றாக அழுத்தி உதறி சொடுக்கில் "டிக் டிக் டிக் டிக்" என்று பலமுறை சப்தங்களை எழுப்பியபடி அந்த குழந்தையைப் பார்த்து செய்யத் தொடங்கினேன். அந்த புதுவித சப்தத்தை கேட்டு திருப்பிப்பார்த்த அந்த குழந்தை சொடுக்கை நிறுத்தியதும்,தான் நிறுத்திய தன் அழுகையை மீண்டும் இசைக்கத் தொடங்கிவிட்டது.

குவளை மலர்க்கண்கள் இரண்டும் கண்ணீரில் நனைந்து குளிர்ந்திருந்தன. .கண்களில் ஊற்றெடுத்த அந்த முகாரி வெள்ளம் கன்னப்பாறைகளில் பெருக்கெடுத்து மலர்ப் போன்ற உதடு தொட்டு உடைகளையும் ஈரப்படுத்தி இருந்தது.உதட்டை மேல்பக்கமாய் உயர்த்தி பக்க வாட்டில் இழுத்து இடைவிடாது அழும் அந்த மழலையின் அழுகையை என்னால் பார்க்கமுடியவே இல்லை.

கட்டை விரலை என் காதிற்கு சற்று மேல் முட்டுக்கொடுத்தபடி இருநான்கு விரல்களையும் சிறகடிப்பதைப் போல பாவனை செய்துப்பார்த்தேன்.பல் மருத்துவரிடம் கூட காட்டாத எனது முப்பது சில்லறை பற்களை முதல் முறையாக அந்த குழத்தைக்கு காண்பித்து சிரிப்பை மூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோற்றேன்.புருவங்கள் இரண்டையும் நெற்றி தொடும் அளவிற்கு உயர்த்தி விழிகளின் திரையை சற்றே அகலப்படுத்தி ஆனந்தமும் ஆக்ரோஷமும் கலந்த ஒரு கலவைப்பார்வையில் பார்த்தேன்.திகைத்து நிறுத்திய அந்த குழந்தை மீண்டும் தன் அழுகை வீணையை மீட்டத்தொடங்கியது.

கங்காரைப் போல தன் மடியில் உறுதியாய் தாங்கியப்படி தூங்கிக்கொண்டிருந்த அந்த மழலையின் தந்தையை எழுப்பிவிடுவதே சரியாது என்று முடிவெடுத்தேன்.

"சார்" "சார்" என்று மெதுவான குரல் எழுப்பி என் விரல்களால் அவரது இடது தோள்பட்டையை லேசாக தொட்டெடுத்தேன். தவம் கலைந்ததைப் போல விழித்துக்கொண்ட அந்த நபர் ஏதோ ஆபத்து நேர்ந்ததாய் உணர்ந்து எழுந்தததும் தன் மழலையைப் பார்த்தார்,பிறகுதான் என்னைப் பார்த்தார்.புன்னகையால் ஒரு நன்றியை சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.

கணவனின் தோள் தலையணை நகர்ந்த நிலையில் அவளும் உறக்கம் கலைந்து ."என்ன ஆச்சுங்க" என்ற கேள்வியை எழுப்பிய படியே தன் குழந்தையை "நீ வாடா செல்லம்" என்று வேகமாய் புயல் பறிக்கும் பூவைப்போல கணவனின் கைகளிலிருந்து அன்பின் மிகுதியால் வாங்கிக்கொண்டாள்.இப்போது அழுகைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை பெருமூச்சு விட்ட தந்தைக்கு தன் மழலை ஏமாற்றத்தையே தந்தது.

லேசாக அழுதுகொண்டிருந்த அந்த மழலை இப்போது உச்சதாயத்தில் .வீறிட்டு அழத்தொடங்கிவிட்டது மனதை ஏதோ பிசைவதைப் போல இருந்தது.எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியம்மா ஒருத்தி உறக்கம் தொலைத்து திருப்பிப்பார்த்து."இங்கே பாரும்மா...குழந்தைக்கு வெக்கை அதிகமா இருக்கும் ,அதான் உப்பசம் தாங்காமல் அழுதிருக்கு,மேல் சட்டையை எடுத்துடுங்க" என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதைப் போல நடந்தேறியது.குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை.

பக்கத்து இருக்கையில் இருந்த வயதான தாத்தா ஒருவர்."இன்னமும் அழுதுன்னா பூச்சி கீச்சி கடிச்சிருக்கும்,கொஞ்சம் நல்ல பாருங்க" என்று மழலையில் அழுகை தாங்கமுடியாமல் நல்ல ஆலோசனை ஒன்றை உதிர்த்தார்.அப்போதே குழந்தை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.தலை கழுத்து கக்கம் கால் இடுக்கு விரல்கள் என்று எல்லா பாகங்களிலும் தேடுதல் வேட்டையை தாயும் தந்தையும் நடத்தி தோற்றார்கள்.மீண்டும் குழந்தை கதறத் தொடங்கி விட்டது.

இப்போது பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள்.மழலையின் அழுகை பீறிட்ட திசையைப் பார்த்து விழிகளால் மொழிகளில்லாமல் ஆறுதல் சொன்னார்கள்.ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்ட நடத்துனர்."ஏம்மா குழந்தை காளு காளுன்னு இப்படி அழுது ..சும்மா இருக்கீங்க" என்று தனக்கே உரிய பாணியில் கடிந்துகொண்டார்.அந்த கோபத்தில் எரிச்சலும் அக்கறையும் இருப்பதை உணர்ந்த அவர்கள் எதிர்வினைப் புரியவில்லை.

நடத்துனர் போட்ட சத்தத்தில் ஓட்டுனர் தனது பங்கிற்கு செவ்வகக் கண்ணாடி வழியாக நிகழ்வுகளைப் பார்த்தபடியே பேருந்து ஓட்டுவதில் கவனமாய் இருந்தார்.ஒரு திருப்பத்தில் பேருந்தை ஓரங்கட்டிவிட்டார்.எல்லோரும் என்னவோ ஏதோ என்று முழிக்கத் தொடங்கினர்.அந்த மழலையை பேருந்திலிருந்து கீழே சுமந்த படி வந்த தந்தை இயற்கையின் காற்று பட அனுமதித்துவிட்டு லேசாக மழலையின் முகத்தை ஈராமாக்கப்பட்ட தன் மெல்லிய கைக்குட்டையால் ஒற்றி ஒற்றி எடுத்தார்.இந்த இதத்தில் சொக்கிப்போயிருந்த மழலை முற்றிலுமாக அழுகையை நிறுத்தி இருந்தது, பேருந்தில் இருந்த அனைவருக்கும் பெரிய நிறைவை ஏற்படுத்தியது.

பேருந்து அந்த மலைப்பாதையில் கிளம்பத்தொடங்கிய சில வினாடிப்பொழுதுகளில் குழந்தை இதுவரையில் இல்லாத அளவிற்கு ஏகமாய் வீறிட்டு அழத்தொடங்கியது.இறக்கமில்லாதவர்களையும் கூட அழவைத்துவிடும் அளவிற்கு அந்த குழந்தையின் அழுகையில் ஒரு அடர்த்தியான சோகம் நிழலாடிக்கொன்றுதான் இருந்தது..பயணம் முடியும் வரையில் அந்த மழலையில் அழுகைக்கான காரணத்தை யாராலும் அறியமுடியவில்லை எனபது அவைவருக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

ஒவ்வொரு நிறுத்தமாக மனிதவெள்ளம் வழியத்தொடங்கியது.

அழுத குழந்தையோடு அதன் பெற்றோர்கள் இறங்கிய பின்னர் அந்த இடத்தை இயல்பாக நோட்டமிட்ட போதுதான் உரையுடன் கால்களில் மிதிபட்டு சப்பையைக் கிடந்தது ஒரு சாக்கலேட்.இறுதியாக மழலையின் அழுகைக்கான காரணத்தை கண்டறிந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் ,ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதறி கதறி அழுத மழலையின் அழுகை வெகு நாட்களாக எனது செவியில் முகாரி ராகமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அன்றிலிருந்து இப்போதெல்லாம் பேருந்து பயணத்தில் மிட்டாய்கள் இல்லாமல் நான் பயணிப்பதே இல்லை.

சனி, 9 ஜூலை, 2011

மோர் மேரே-(சிறுகதை)


"பஸ்ஸு ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ,டீ காப்பி சாப்புடறவங்க சாப்புட்டுவரலா "

கண்டக்டரின் உரத்த குரலின் சில வார்த்தைகள் மட்டுமே உறக்கத்திலிருந்த என் செவிகளுக்குள் நுழைந்து,கிசு கிசுத்தது.பயணத்தின் களைப்பில் லேசாக நினைவு வந்தவனாய் விழித்தேன் .மூக்கின் நுனிவரையில் வந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றிருந்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் மேலே உயர்த்தி கண்ணுக்கு நெருக்கமாக பொருத்தினேன்.

சன்னலோரத்து காற்று கலைத்துப் போட்டிருந்த என் முடியை விரல்களை சீப்பாக்கி இடதும் வலதுமாய் சீவிமுடித்தேன். காண்டாமிருகத்தின் தோலைப் போல போர்த்தியிருந்த ஜர்க்கினை என் உடலிலிருந்து உரித்தேன்.இடது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல் போனை எடுத்து ஏதேனும் அழைப்புகள் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டேன்.

அடி வயிற்றுப் பகுதி முட்டிக்கொண்டு வரவே இயற்கை அழைப்பிற்கு இசைவு தெரிவித்தவனாய் பேருந்திலிருந்து கீழே இறங்கினேன். ராணுவ வீரர்களைப் போல வரிசையாகவும் ஒழுங்காகவும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை நோட்டமிட்டவனாய் நகர்ந்தேன்.

கடைகளை சுவர்களாக கொண்டிருந்த பெரிய மைதானமாய் அந்த பேருந்து நிலையம் காட்சியளித்தது.பேருந்துகள் வருகிற நேரங்களில் மட்டுமே வர்த்தகம் அங்கு சூடுபிடிக்கும்.மற்ற நேரங்களில் ஈ ஆடிக்கொண்டிருக்கும்.பெருத்த ஆரவாரங்கள் இல்லையாயினும் வியாபாரம் இயல்பாகவே நடந்துகொண்டிருந்ததை கடைகளுக்கு முன் வாசலை அடைத்து நின்றுகொண்டே பொருட்களை வங்கிக் தின்று குடித்து செரித்துக்கொண்டிருக்கும் கூட்டம் சொல்லாமல் சொல்கிறது.

"ஐஸ் சர்பத் ஐஸ்"

"மல்லிகப்பூ மோளம் பத்துரூபா'

"தேங்கா பரப்பி தேங்கா பரப்பி"

"ஆரஞ் ஆரஞ் நாட்டுப்பளம் நாட்டுப்பளம்"

எல்லா பேருந்துகளின் சன்னங்களில் யாரவது வாங்கமாட்டர்களா என்று ஏக்கத்தோடு எட்டிப்பார்த்தபடி அந்த கிராமத்து மனிதர்கள் நம்பிக்கையோடு விற்பனைக்குரிய பொருட்களை கைகளில் நீண்ட நேரம் ஏந்திக்கொண்டு வலிகளை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தவண்ணமாகவே இருந்தார்கள்.

ஒருவர் இருவரைத் தவிர யாரும் அவற்றை சீண்டவே இல்லை.நகரும் அந்த மனித அங்காடிகளை சட்டை செய்யாமல், அசையாத நிலை அங்காடிகளை நோக்கி விரைந்து மொய்த்துக்கொண்டார்கள்.

"அண்ணே ஒரு பெண்டா கொடுங்க"

"பெப்சி டின் ஒன்னு தாங்க"

"மாசா ஜில்லுன்னு இருக்கா"

"கோலா ஒருலிட்டர் பாட்டில் இருக்கா"

கேட்கிறார்கள்.... பெறுகிறார்கள்..... வருகிறார்கள்.பேருந்து கிளம்புவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது.இந்த கசப்பான அனுபவத்தை இன்னும் பார்க்க சகிக்காத நான் பேருந்துக்குள் வந்து அமர்ந்துகொண்டேன்.இடதுபுற சன்னலுக்குள் நுழைந்த மாலை நேர நெருப்பு வெயில் என்னை வருக்கத் தொடங்கியது.புழுக்கம் தாங்காமல் என் உதடுகளைக் குவித்து நானே பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.சட்டைக் காலரை என் இரண்டு கைகளால் கொஞ்சம் தூக்கிவிட்டபடி பறவை பறப்பதைப் போல சிறகடிக்கச் செய்தேன்.

சிறுநீர்க்கழித்தவர்கள்,நொறுக்குத்தீனி தின்றவர்கள்,உணவருந்தி முடித்தவர்கள், இளைப்பாறிக்கொண்டவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப இருந்த பேருந்தை நோக்கி படையெடுத்தார்கள்.

மை பூசியதைப் போல கருத்த மெலிந்த தேகம், பழைய அழுக்குப்படிந்த பருத்தி சேலை,ஒடுங்கிய கன்னம்,செருப்பில்லாத நரம்பு புடைத்த சூம்பிய கால்கள்,நெற்றியில் அழிந்தும் அழியாமலும் இருந்த திருநீரு,கலைந்த பரட்டைத் தலையில் சும்மாடு,அதன் மேலே குடத்தின் வடிவத்தில் ஒரு அலுமினிய பாத்திரம் மூடியுடன் இருந்தது.அதன் மீது ஒரு அலுமினிய டம்ளர் மற்றும் ஒரு லோட்டா.எழுபது வயதை தண்டி இருக்கக்கூடு அந்த மூதாட்டி, பேருந்தை நோக்கி நெருங்கினாள் .முதலில் அவரை ஒரு பயணி என்றுதான் நினைத்தேன்.நேராக இடதுபுற சன்னலோரமாக அமர்ந்திருந்த எனது இருக்கைக்கு கீழே நின்றுகொண்ட அவர் தன் தலைச்சுமையை கீழே இறக்கிவைத்தாள்.

.

"மோர் மோரே" " மோர் மோரே"

என்று கூவிக்கொண்டே அலுமினியப் பாத்திரத்திற்குள் லோட்டாவை விட்டு ஒரு லோட்டா மோரை அள்ளி மீண்டும் அந்த பாத்திரத்திற்குள் கைகளை உயரே வைத்துக்கொண்டு டீ ஆத்துவதைப் போல திருப்பி ஊற்றினாள். மோரும் நீரும் கலந்து கறிவேப்பிலை மல்லிதழை இஞ்சி போன்றவை மேல் சுழற்சியில் வட்டமடித்தன.

ஒரு லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக்கொண்டு "கண்ணு மோர் சாப்புடு கண்ணு" "லோட்டா அஞ்சு ரூபாதா" "வீட்லே வளக்குற கரவெ மட்டு பால்லே செஞ்ச மோரு" என்று கேட்டபடியே ஒவ்வொரு ஜன்னலாக பயணிகளின் கைகள் எட்டும் உயரத்திற்கு பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறாள்."மோர் மோரே... மோர் மோரே" என்ற அசட்டுத்தனமான அந்த கிராமத்து வயதான தேவதையின் குரல் பேருந்து நிறுத்தம் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது.

வட்டமடித்து மீண்டும் எப்படியோ நான் அமர்ந்திருந்த ஜன்னலருகில் வந்து நின்றால்.

"கண்ணு வாங்கி சாப்புடு கண்ணு...நல்லா ஜில்லுன்னு இருக்கு ..வீடு போயி செர்ர வரைக்கும் தாகமே எடுக்காது ....வயித்துப் புண்ணுக்கு ரொம்ப நல்லது... நல்லா இல்லாட்டி நீ காசுதர வேணாம்" என்று அவர் சொல்லு முடிப்பதற்குள் பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்."முதல்லே குடி கண்ணு ...அப்பறம் காசு வாங்கிக்கறே" என்று பதிலளித்தபடியே கம்பிகளுக்குள் நுழைத்த லோட்டா மோரை ரசித்து ருசித்து பருகினேன்.ஒரே மூச்சில் பருகியதால் கொஞ்சம் மூர்ச்சையாகி இளைப்பாறிக்கொண்டேன்.

பத்து ரூபாய் தாளை மகிழ்ச்சியோடு நீட்டிய போதுதான் பேருந்து கிளம்பத்தொடங்கிவிட்டது.மூதாட்டிக்கும் எனக்குமான இடைவெளியை நகர்ந்த பேருந்து நீட்டித்துக்கொள்ள சன்னல் வழியாக கழுத்தை நுழைத்து பின்பக்கமாக திரும்பிப்பார்த்து மூதாட்டியை அழைத்தேன்.

"கண்ணு நாளைக்கு வாங்கிக்கறேன்...நீங்க போங்க...பஸ்ஸு கிளம்பிடுச்சு..." என்று என்னிடம் காசுவாங்காமலேயே வழியனுப்பிவிடுகிறாள்.'நாளைக்கு நான் வரமாட்டேன் பாட்டியம்மா...இதோ வாங்கிக்கோங்க " என்று ஒரு பொய்யைச் சொல்லி பத்து ரூபாய் தாளை மூதாட்டி பார்க்கும் படியாக கீழே போட்டேன்.அந்த தாள் காற்றில் பறந்து அவளருகில் போய்சேருகிறது.

கைகளில் எடுத்துக்கொண்ட அந்த மூதாட்டி ஐந்த ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு பேருந்துக்கு பின்னாலே ஓடிவருகிறாள்.

"கண்ணு இந்தாங்க உங்க அஞ்சு ரூபா" ...." எங்க பச்சே கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க" ...இப்படியாய் திரும்பத் திரும்ப .சொன்னபடியே பேருந்துக்கு பின்னால் ஓடி அலைபறக்க பின்தொடர்கிறாள். காசை சேர்க்கமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு ஓடிவரும் அவளின் பின்தொடரல் நிற்கவில்லை என்பதை கவனித்தவனாய் வரும் என்னையும் அந்த மூதாட்டியையும் ஒரு திருப்பம் பிரித்துப்போடுகிறது.

பல நாட்கள் ஆகியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது "மோர் மோரே மோர் மோரே".

வியாழன், 7 ஜூலை, 2011


செம்மொழிமாநாட்டில் கபிலர் அரங்கிற்கு நான் பொறுப்பேற்றிருந்த போது இயற்கை எய்திய பின்பும் தமிழாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும் தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களை நேரில் சந்திக்கிற உரையாடுகிற ஓர் அரிய
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை என் திருக்கரங்களால் நகர்த்திச் செல்கிற பாக்கியமும் கிடைத்தது.அன்னாருக்கு என் ஞாபகக் கண்ணீரும் ஆன்மாவின் இரங்கலும்....

செவ்வாய், 5 ஜூலை, 2011


"ஜனகணமன" என்னும் நமது தேசிய கீதத்தை உலகத்தில் சிறந்த தேசிய கீதமாக UNESCO அறிவித்துள்ளது.நமது தேசிய கீதம் உலகம் பேசிய கீதமானதற்காக பெருமிதம் கொள்வோம்.இந்தியன் என்று இறுமாப்பு கொள்வோம்.வந்தே மாதரம்.(சுத்தமான சுதேசிகள் மட்டும் இங்கு உங்கள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்)

கட்டிப்புடி வைத்தியம்


அவள் கருங்கூந்தல் காட்டுக்குள்

என்விரல்கள் நுழைந்து

அலைந்து களைத்து களிக்கின்றன....



கருத்த பூமியாய் சுழலும்

கண்மணியை

பார்த்ததால் பரவசப்பட்டதால் வேர்த்ததால்

இமைகள் கவறிகள் வீசுகின்றன...



மதுக்கோப்பைகளாய்

செக்கச்சிவந்த உதடுகள் நான்கும்

இதழ்மாறி பரிமாறி தேனூறி தளும்புகின்றன...



பத்துப்பத்தாய் கொத்துக்கொத்தாய்

இருபதுவிரல்கள் பின்னிய புள்ளியில்

மின்சாரம் பாய்கின்றன...



பேசியவார்த்தையில் நாசியில்

பாலைவன வெப்பம் தகிக்கிறது...



எது உடல்? எது உயிர்? என்றறியாமல்

ஆன்மா தவிக்கிறது...



வரம்பையும் மீறி நரம்பின் நாளங்களில்

குருதியும் நிறைகிறது ...



எண்ணையும் ஊற்றவில்லை

தீக்குச்சி கிழிக்கவில்லை

எப்படியோ என்னுடல்

பனியிலும் எரிகிறது ...



அணைக்கிறேன் அணைக்கிறேன்

அணைக்க அணைக்க

இன்னும் கொழுந்துவிடுகிறது...



அவள் மொழி

காற்றில் மிதந்து காதில் நுழைந்து

உயிர்எல்லாம் இனிக்கிறது...



மயிர்

கூச்செறிய

காமன் பூச்சொரிய

உடலெல்லாம் மலர்கிறது...



தாள்களா? தோள்களா?

என்றறியாமல் அதில்

கவிதை நிறைகிறது ...



தூக்கத்தை தகர்த்து

ஏக்கத்தை உதிர்த்து

நிகழ்வில் நிலைக்கிறது...



எல்லா நிலங்களையும்

எனது ஜீவநதி

ஓடி நனைக்கிறது..

.

காமமும் கடவுளும்

ஒன்றுதான் என்றுதான்

இயற்கை சொல்கிறது.

திங்கள், 27 ஜூன், 2011

தேசிய விருதாளர் ஜீவாவும் நானும்


மனதின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் நட்பின் காட்சிகள் விரிகின்றன.ஜீவாவும் நானும் நீண்டகால நண்பர்கள் அல்ல.ஜீவாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் ஜீவாவுடனான நேரடி தோழமைக்கு உண்மையில் ஒரு ஐந்து வயதுதான் ஆகிறது.இருந்த போதிலும் ஜீவா ஒரு இனிய நண்பர்.இலக்கியக் கூட்டங்கள் திரையிடல் நிகழ்வுகள் ஓவியக்கண்காட்சிகள் என்று மொழியும் கலையும் சார்ந்தவற்றில் மட்டுமே சந்தித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.என் எழுத்திற்கு இவரது ஓவியத்திற்கும் இடையேயான தொடர்புதான் என்னையும் அவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.

மனிதக்குலத்திற்கான மகத்தான வேதமாக விளங்கும் திருக்குறளை இன்னும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவில்லையே என்ற ஏக்கத்தில் நான் எழுதிய நூல்தான் "காதல் குறட்பாக்கள்" ஆகும். இன்பத்துப்பாலை இன்றைய தலைமுறை படிக்கும் விதத்தில் கவிதைப்பாலாக மாற்றிய அந்த நூலுக்கு தேவையான கோட்டோவியங்களுக்காக பிரத்யேகமான ஒரு கலைஞரைத் தேடிய போதுதான் எனக்கு ஜீவா அறிமுகத்திற்குப் பிறகு நெருக்கமானார். மிக மிக குறுகிய காலக்கட்டத்தில் அழகாய் அர்த்தப்பாடுடைய வள்ளுவக் கவிதைகளை ஓவியங்களாகத் தீட்டி தந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது திருவாளர் ஜீவா அவர்கள். காதலின் எல்லா உணர்வுகளையும் பிசகாமல் என் கவிதையையும் தாண்டி ஜீவாவின் ஓவியங்களே ஆத்மார்த்தமாய் பேசின.ஜீவாவின் இந்த பங்களிப்பு ஜீவாவிற்குள் இருக்கும் ஒரு நேர்த்தியான இலக்கிய வாதியை எனக்கு அடையாளம் காட்டியது.வள்ளுவன் சங்ககாலத்தமிழில் சொன்னதை சிரத்தைஎடுத்து நான் சமகாலத் தமிழில் சொல்லிமுடித்தேன்.ஜீவாவோ மிகவும் இலகுவாக ஒவ்வொரு ஓவியத்திலும் நூறு நூறு செய்திகளை அழகாக உச்சரிக்க வைத்தார்.இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வானம்பாடிக் கவிஞர் 'சிற்பி' பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை குறித்தும் ஜெவாவின் படங்கள் குறித்தும் சிலாகித்துக்கொண்டது இன்னும் கெளரவம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் உச்சபட்ச துயரங்களை ஒரு அரை நூற்றாண்டிக்கு முன் பேசிய படம் தான் 'பராசக்தி".என் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்த இந்த உலகத்திரைப்படத்தை திரைக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் படைத்த முதல் நூல்தான் "பராசக்த்தி திரைக்கவிதை" என்ற ஆகும்.ஒரு பகலில் படம் கண்டு ஓரிரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல்தான் இந்த பராசக்தி திரைக்க்கவிதை ஆகும்.தலைப்புகள் கொடுத்து காட்சி காட்சிகளாக எழுதப்பட்ட இந்நூல் பழைய திரைப்படத்தில் சின்ன சின்ன அடையாளத்தைத் தாங்கிவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் ஓவியர் ஜீவாவை அணுகி என் திட்டத்தை வெளியிட்டேன். முதலில் யோசித்த ஜீவா ,பிறகு சம்மதித்து ஊதியம் பெறாமல் கோட்டோவியங்களை உயிரோவியங்களாகத் தீட்டித்தந்தார்.நெருப்பு வரிகளுக்கு நெய் ஊற்றியதைப் போல ஜீவாவின் கோட்டோவியங்கள் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டிருந்தன. வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலுக்கு அணித்துரையும் ,கவிக்கோ அப்துல் ரகுமான் இந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கி எங்கள் இருவரையும் சிறப்பித்திருந்தார்கள்.

என் ஆய்வு நூலான "இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைகள்" என்ற நூலும் ஜீவாவின் ஓவியங்களோடு வெளிக்கொண்டுவரப்பட்டது. இலக்கிய காலகட்டங்களில் கவிதைகள் உணர்த்தும் கருப்பொருள்களை உருப்பொருள்களாக கண்ணுக்கு முன்னால் ஓவியர் ஜீவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தினார்.இந்த நூல் கல்வியாளர்கள் மத்தியில் உலக அளவில் பெரிய வரவேற்பை எங்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.இப்படியாக எமது மூன்று நூல்களுக்கும் தேசிய விருதாளர் திருமிகு ஜீவா அவர்களே கோட்டோவியங்களை வரைந்து தந்தது எனக்கு தேசிய விருது கிடைத்ததைப் போன்ற இனிய மாயையை உருவாக்கவே செய்திருக்கிறது.ஒரு தேசிய விருதாளர் எனது நூல்களுக்கு கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

ஒரு மனிதர் ஏதேனும் ஒரு களத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதுதான் இயல்பு,ஆனால் ஜீவா அதற்கு விதிவிலக்கு,ஜீவா ஒரு ஓவியர்,ஒரு திரை விமர்சகர்,ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர்,ஒரு சினிமாகாரர், ஒரு புகைப்பட கலைஞர்,ஒரு கணினி வரைகலைஞர், ஒரு வாசகர், ஒரு தொழிலகத்தின் அதிபர்,ஒரு பன்மொழி வித்தகர், ஒரு பொதுவுடைமைவாதி,ஒரு திறனாய்வாளர்,ஒரு காலாரசிகர்,ஒரு கலைக்குடும்பத்தவர், ஒரு வழக்கறிஞர் ,ஓவியம் குறித்த பல நிலைகளில் சோதனை முயற்சிகள் செய்த தேர்ந்த ஞானி.சித்ரகலா அகாடமியின் நிறுவனர்,கோவை சினிமா குழுமத்தின் பிதாமகன் ,ஒரு வலைப்பதிவாளர், ............என்று இவரின் பன்முகம் விரிகிறது.

தனது கடந்த கால கலைதாகங்களை தன் நெஞ்சத்தில் நெடுநாட்கள் சுமந்து வந்த ஜீவா,தான் பார்த்த ரசித்த உள்ளூர் மற்றும் உலக சினிமாக்களைப்பற்றிய கட்டுரைகளை ரசனை என்ற இதழில் எழுத, அதன் தொகுப்பாய் நெய்யப்பட்டதுதான் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த "திரைச்சீலை"ஆகும்.நாஞ்சில் நாடுக்காரராக இருந்தாலும் கொங்கு நாட்டில் பிறந்து கிளைத்து வளர்ந்து ரசித்து ருசித்து வடித்துதந்த அந்த பொக்கிஷம் இன்று அவரை ஒரு தேசியவிருதாளராக அடையாளம் காட்டி இருக்கிறது.

யாரால் எதுவால் ஒரு நல்ல கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புறந்தள்ளப்பட்டாலும் காலம் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு சிம்மாசனம் அமைந்தது அந்த கலைஞனை அதில் அமரவைத்து அழகு பார்க்கும் என்பதற்கு ஜீவா ஒரு தித்திப்பான உதாரணம்.

சனி, 25 ஜூன், 2011

'தகிதா ஊடகக் களம்' -தயாரித்த "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம்

தகிதா-வின் புதிய கிளையான 'தகிதா ஊடகக் களம்' -தின் சார்பாக தயாராகியுள்ள நிழற்படங்களால் உருவாக்கப்பட்ட "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம் விரைவில் முகநூல் தோழர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.
காத்திருங்கள்.

பெயர்:

"பூமித் தொட்டில்"


வகை:

நிழற்பட ஆவணம்


காலம்:

பத்து நிமிடங்கள்

கரு:

சூழலியல் சார்ந்தது


ஒலிக்கலவை

மாண்டேஜ் மீடியா ப்ரொடக்சன்


நிழற்படம் மற்றும் நிழற்படத்தொகுப்பு:

நடராஜன் ஆதிலட்சுமி( மலேசியா)



எண்ணம் - எழுத்து - குரல் - தயாரிப்பு

போ. மணிவண்ணன்(இந்தியா)

திங்கள், 20 ஜூன், 2011


"எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா....!
எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா.....!"
என்று
நான் படிக்கும்போதெல்லாம்
இடைவிடாது கேட்கும்
இரண்டு வயதாகும்
என் தம்பிமகளின் நச்சரிப்பு
என் பால்யகால மக்குத்தனத்தை
நினைவூட்டி
வெட்கப்பட வைக்கிறது என்னை

ஞாயிறு, 12 ஜூன், 2011

திரைத் திமிங்கிலங்களிடம் சிக்கிக்கொள்ளும் நல்ல மீன்களில் ஒன்று "ஆண்மைத்தவறேல்


மக்களிடம் மசாலாக்களை விற்பனை செய்யும் சினிமா திமிகிலங்கள் நல்ல மீன்களை உயிரோடு வாழவிடுவதே இல்லை.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஆண்மைத்தவறேல்' திரைப்படம் நல்ல மீன்களின் ஒரு மீன். வெளியான நாளிலிருந்து திரை வணிகக்கடலில் சர்வாதிகார புயல்களுக்கு இடையில் தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து விரட்டப்படும் முன்னதாக பார்த்துவிடுவது அந்த நல்ல படைப்புக்கு நாம் கொடுக்கிற

திங்கள், 6 ஜூன், 2011

ஆண்மைத்தவறேல் - திரைவிமர்சனம்


தமிழ்த் திரையுலகின் முதல் இளம் இயக்குஞர் திருவாளர்.குழந்தைவேலப்பன் அவர்களுக்கு கோடித் திரைகலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.அன்பின் ஆரத்திகள்.'ஆண்மைத்தவறேல்' என்னும் இத்திரைப்படம் ரசிர்களை உணர்வு சார்ந்து சிந்திக்க வைக்காமல் அறிவு சார்ந்து அணுக வைத்திருப்பது தமிழுக்கு புதிது.சிக்கல்களை அறிவியல் பூர்வமாக அணுகுவது எப்படி என்று சொல்லும் அருமையான திரைப்படம் மட்டுமல்ல திரைப்பாடமும் கூட. இதற்காகவே குழந்தை வேலப்பனுக்கு பலத்த கைத்தட்டல்களைத் தரலாம்.

உலகமயமாகி இருக்கும் இந்த நிலையில் பெண்மாமிசப் பசிக்கான வேட்டையில் ஆண்மைத் தவறும் ஆடவர்களையும் ஆண்மைத்தவறாத ஆடவர்களையும் இனம் பிரித்து காட்டியிருக்கும் கோணம் அசாத்தியமானது.ஓவ்வொரு வீட்டில் இருக்கும் யமுனாக்கள் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறார்கள் என்ற குறிப்பு சரியான எச்சரிக்கை. கதை நகர்வு நிஜ நகர்வாகவே பல காட்சிகளிலும் பளிச்சிடுகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான தகவல் இடைவெளி இப்படத்தில் சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தந்தையை இழந்து தாயை சுமந்து தன் ஒற்றை ஊதியத்தில் குடும்பத்தை நகர்த்தும் லட்சோப லட்ச யமுனாக்களில் வாழ்வில் ஒரு பாதுகாப்பு வளையத்தை இத்திரைப்படம் வலிமையாக செய்துதந்திருக்கிறது.

இந்த சமூகத்தில் கஞ்சா ஹெராயின் அபின் போன்ற போதை வஸ்த்துக்களின் பட்டியலில் பெண்ணும் இடம்பெறுவது சோகம்.இந்த உலகத்தில் பெரு வணிகங்களில் ஒன்றாக பெண்வணிகம் இருப்பதை இத்திரைப்படம் அடர்த்தியாக எடுத்துக் காட்டியுள்ளது .அதை நாடகத்தனமாக சொல்லாமல்,பூசியும் மெழுகாமல், அதன் பல்வேறு நிலைகளை எடுத்துக்காட்டி அவைகளை வேரறுத்துள்ள ஆண்மை போற்றுதலுக்குரியது.ஒரு கலைஞனுக்கே உரிய துணிவு கம்பீரம் அச்சமற்றத் தன்மையை இந்த படத்தின் இயக்குஞர் குழந்தைவேலப்பனின் நெறியாள்கையில் பார்க்கமுடிகிறது.

'எம் பொண்ணு எங்கடா' என்று யமுனாவின் தாய் கதறும் அந்த சிலவினாடிகளில் கண்கலங்க வைக்கிறார்.ஒரு நடுத்தர குடும்பத்தின் தாயாக வாழ்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பரிதாபத்தையும் அள்ளிக்கொண்டு போகிறார். உண்மையில் .இது யமுனக்களுக்கான கதை மட்டுமே அல்ல ,எத்தனை எத்தனையோ யமுனாக்களின் தாய்களுக்கான கதை. 'என்ன சொன்னானா' என்ற கனத்த குரலில் பேசிக்கொண்டு சிறைக்குள் அட்டகாசமாய் நுழையும் அந்த போலீஸ்காரர் தொடங்கி இறுதிவரையில் வரும் தொடர்ச்சியான காலவர்களை காட்டிய விதம் கண்ணியத்திற்குரியது . இரக்கமும் சமூக அக்கறையும் கண்ணியமும் காவலர்க்கும் உண்டு என்பதை இத்திரைப்படம் திறந்த மனதோடு முன்னேடுத்து வைத்துள்ளது.

தன் காதலியை பறிகொடுத்த கதாநாயகன் தொடக்கம் முதல் இறுதிவரை ஓயாமல் அலைந்து திரியும் ஒவ்வொரு காட்சிகளிலும் பார்வையாளர்களின் இரக்கத்தை ஏகமாய் பெறுகிறார்.நண்பனாக காதலனாக பரிணாமப்பட்ட கதாநாயகன் நாயகியை தேடும் வேட்டையில் ஒரு தந்தையின் ஸ்தானத்திற்கு உயர்ந்ததுதான் அற்புதம்.தனக்கும் நிகழ்விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக நாயகன் போராடவில்லை, தந்தை இல்லாத ஒரு மகளுக்கு உண்மையான காதலன் ஒருவன் தந்தையாக இருக்கமுடியும் என்பதுதான் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ,அண்டை மாநிலம் ,வட இந்தியா, மேலைநாடுகள் என்று எங்கு தொடங்கி எங்கெல்லாம் இந்த பெண் வணிகத்தின் வேர்கள் கிளைகொள்கிறது என்பதையும் எப்படி எல்லாம் சந்தைப்படுத்தப்படுகிறது என்பதையும் வரைப்படத்தொடு வரைந்துகாட்டி இருக்கும் இப்படம் ஆணாதிக்கத்தின் காமத்திரையை கிழித்தெறிந்துள்ளது.இந்த நயவஞ்சக வலைப்பின்னலில் மேலை நாடுகளின் தலையீடு இருப்பதையும் இப்படம் தன் கேமரா கண்களால் குத்திக்காட்டியுள்ளது. கற்பு குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பாலியல் பண்டமாக்கப்பட்ட பெண்மை சுற்றுலாதலங்களில் ஆடவர்களின் காமப்பசிக்காக தரம்பிரிக்கப்பட்டு கூவிவிற்கப்படும் சோகம் மனதை பிழிகிறது.

'சம்மதத்தோட கற்பழிக்கரத்துக்கு பேருதா காதல்' என்று திருத்தமாக எதார்த்தம் பேசும் போலீஸ்காரரின் வசனம் இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.நம்பகத்தன்மையற்ற காதல் உறவுகளை நம்பி ஏமாறும் படித்த பெண்கள் இங்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்திய இளைஞர்களின் இரவுகளைத் திருடுவதோடு அவர்களின் வாழ்வியல் கட்டமைப்பைத் தகர்க்கும் மேலை மென்பொருள் நிறுவனங்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிக் கொண்டிருப்பதை இத்திரைப்படம் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் தொடங்கி கோவா கடற்கரை சோலையில் முடியும் இந்த கதையில் யமுனா நதிகள் சீரழிக்கப்பட்டு மாசூட்டப்படுவது கலைதர்மத்தோடு கூடிய குறியீடு. ஓடையாக தவழ்ந்து நதியாக நடந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பெண்நதிகள் கடலில் சங்கமிக்காமல் போகும் துரதிஷ்டங்களுக்கு இந்த ஆண்மைய சமூகமே முழுப்பொறுப்பாகும் என்பதை தவறாமல் சொல்லியிருக்கும் குழந்தையின் ஆண்மை போற்றுதலுக்கு உரியது..சாலையோரத்தில் நடமாடும் ஓராயிரம் மலர்களை பறித்துக்கொண்டு போகும் அந்த ஒற்றை வாகனம் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.அந்த வாகனத்தில் பயணிக்கும் கடத்தல் தலைவன் தொடங்கி கூட்டாளிகள் அனைவரும் வாழ்கிறார்கள்,மிகை எதார்த்தமே இல்லாமல் பார்த்துக்கொண்டது நம்பகத்தன்மையை ஏற்ப்படுத்துகிறது.

'நீங்க பண்ண பெரிய தப்பு என்ன தெரியுமா, பெண்ணா பிறந்ததுதான் அதுலும் கொஞ்சம் அழகா'என்ற வசனம் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற எரிச்சலையும் அச்சத்தையும் எல்லா பெண்களிடமும் பற்றவைத்துவிடுகிறது.வெள்ளைக்காரர்களிடம் அன்று நமது தேசத்தை அடகுவைத்தோம் இன்று தேகத்தை அடகுவைக்கிறோம் என்ற கொதிப்பு இன்னும் ஆத்திரத்தை மிகுவிக்கிறது.கோவா உலக சுற்றுலா பயணிகளின் திறந்தவெளி படுக்கையறைகளாக மாறிப்போயிருக்கும் நிலையை துல்லியமான துளைக்கும் எதார்த்தத்தோடு பதிவுசெய்திருக்கிறது இந்த ஆண்மைத்தவறேல்.

இந்தியத் தாயின் மாராப்பிற்கு அந்நியக் கரங்களால் அச்சுறுத்தல் வந்திருப்பதை அவமானத்தோடு பதிவு செய்திருக்கிறது. இன்றைய உலக பெண் வணிகத்திற்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் ஊடகங்களும் இணையங்களும் இருந்து இழிதொழில் புரிவதை சுட்டிக்காட்டி அறிவியலின் கன்னத்தில் பளார் என்று இயக்குஞர் குழந்தை அறைந்திருக்கிறார்.

முதல் காட்சி அடைமழை ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் சோகத்தை சொல்லி அழுவதாய் நமக்கு இறுதியில்தான் உணர்த்துகிறது.போலி வாகனங்கள் போலி மனிதர்கள் போலி வாழ்க்கை என்று போலியாக வாழும் மனிதரில் சில மிருகங்களை ஆண்மைத்தவறேல் வேட்டையாடி இருக்கிறது. பாதகம் செய்பவரைக்கண்டால் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாப்பாக்களுக்கு சொன்ன இந்த வீர வரிகளை குழந்தை நம் அனைவருக்குமே சொல்லி விழிப்படையவும் எதிர்வினைப்புரியவும் செய்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் தோலுறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகளாய் கதாநாயகிகளைக் காட்டும் இன்றைய தமிழ் சூழலில் ,பெண் வணிகம் மற்றும் பாலியல் சார்ந்த கதைக்களமாக உங்கள் ஆண்மைத் தவறேல் இருந்தபோதிலும் அதில் துளியளவேனும் விரசம் கலக்காத உங்களின் கலை நேர்மைக்கு நான் எழுந்து நின்று கைகள் தட்டி தலைவணங்குகிறேன்.அடுத்தது என்ன என்ன என்ற எண்ணத்தை படம் முழுக்க ஏற்படுத்தி இருப்பது உங்களின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கரன்சிகளைப் பெற்றுக்கொண்டு கன்னிப்பெண்களின் கடத்தலுக்கு அடைக்கலம் தரும் கர்நாடகத் தாய், பரிசோதனைக்குப் பிறகு உள்ளூரில் விற்பதற்காய் தரம்பிரிக்கப்பட்ட கேரளத்து பெண் ஆகிய இரு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ்ப் பெண்ணின் நிலையை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களின் ஆழ்மனப்பதிவு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.உங்களின் கலை அரசியலில் சமரசமும் தேவை.

சுயமரியாதை பாதிக்கப்பட்டதால் 'உயர் போனா மயிரா போச்சு'என்று துணிந்ததை காட்சியாகக்காட்டி ஓடும் வாகனத்திலிருந்து கதவகற்றி பாய்ந்து எதிர்வரும் வாகனத்தால் மோதிவீசப்பட்டு மரணிக்கும் உயர் அதிகாரியின் மகள் கதாபாத்திரம், கதையின் திடீர் திருப்பம்.ஆளில்லா சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அடுத்தடுத்து வந்துபோகும் நாயகன் மற்றும் கடத்தல் தலைவனின் வாகனங்கள் கதையின் பயணத்தில் விறுவிறுப்பை அதிகப்படுத்துகின்றன. கடத்தப்பட்ட வாகனத்திற்கு உள்ளிருந்துகொண்டு துணிச்சலோடு கடத்தல் தலைவனின் அலைபேசியில் அழைப்பைத் தொடரும் காட்சி நடுநடுங்க வைக்கிறது.


கார் குண்டுவெடிக்க காணாமல் போன முன்னாள் காவல்துறை அதிகாரியின் தோற்றமும்,ஏல வெற்றியும் திரைக்கதையில் புதிய பாய்ச்சல்.கதையின் நகவிற்கேற்ப கேமரா கோணங்கள் தொடங்கி கேமரா அசைவுகள் தொடர எல்லாம் அட்டகாசம்.இசை தேவையான இடங்களில் சோகம் இரங்கல் தனிமை வெறுப்பு காயம் கவலை விரக்தி என்று எல்லா உணர்வுகளையும் அளவாகவும் அழகாகவும் வாசித்திருக்கிறது.தேடுதல் வேட்டையில்'அண்டம் பொடிபட' என்ற பாடல் ஆவேசம் கொப்பளிக்கும் சுனாமி பாய்ச்சல்.

இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் கதாநாயகன் தனியாக மாட்டிக்கொண்டானே என்ற வருத்தமும் அவனுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணம் மேலிடலும் கதாபாத்திரப்படைப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.வெற்றியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது

உலகின் இன்றைய எரியும் பிரச்னையை தன் சினிமா கிரணங்களால் கொளுத்தி அதற்க்கு காரணமானவர்களை சுட்டு காயப்படுத்தி தன் ஆண்மையை குழந்தை நிருபித்திருக்கிறார்.கரு கதைக்களம் கதைப்பின்னல் கேமரா நகர்வு அர்த்தமுள்ள இசை கதையோடு கூடிய பாடல் மிகை எதார்த்தம் இல்லாத காட்சியமைப்பு கச்சிதமான படத்தொகுப்பு என்று இன்னும் பல சிறப்பம்சங்களோடு உலகத்தரத்திற்கான உன்னத படமாய் இந்த ஆண்மைத்தவறேல் கம்பீரம் கொண்டிருக்கிறது.வழக்கமான சினிமா சட்டகத்திற்குள் சுருங்கிப்போகாமல் தான் சொல்ல விரும்புவதற்கு ஏற்ப கதையை பரப்பி இருக்கும் போக்கு பாராட்டுக்குரியது




தமிழ் சினிமா வரலாற்றில் சிக்கலை உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டாம் அறிவுப்பூர்வமாக அணுகுங்கள் என்று சொல்லி இருக்கும் படம்தான் இந்த ஆண்மைத்தவறேல்.சினிமா கனவுகளை மட்டும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அல்ல என்பதை குழந்தை நிரூபித்திருக்கிறார். உண்மைகள் கலைஊடகத்தில் கலைதர்மத்தோடு முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன..ஊடகத்துறை மாணவனாக இருந்து இயக்குஞராக அடையாளப்பட்டிருக்கும் நீ,எதிர்வரும் இளைய படைப்பாளிகளுக்கு கலங்கரைவிளக்கம். நேற்று தோள் தட்டினேன் இன்று கைத்தட்டுகிறேன்.இன்னும் இன்னும் நீ திரைத்துறையில் புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.


.



.

வியாழன், 26 மே, 2011

சாம்பார் - சிறுகதை

கலையும் கருணும் சகோதரர்கள்.இருவரும் பக்கத்திலிருக்கும் அரசுப்பள்ளிக்கு போகிறவர்கள் .கலை ஏழாம் வகுப்பு கருண் ஆறாம் வகுப்பு.தினமும் பேருந்தில் பயணப்படும் இவர்களது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.வழக்கமாக அவர்கள் இருவரும் வீடுவந்து சேர்வதற்குள் மாலை ஆறரைமணி ஆகும். அதுவரையிலும் வீட்டுப்பயிற்சி முடித்து கைகால் அலம்பி பூசைமுடித்து விளையாடத் தொடங்கிவிடுவதர்க்கும் பெற்றோர்கள் வீடுவந்து சேர்வதற்கும் சரியாக இருக்கும். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் துணிகளை மடித்து வைத்தல் , வீட்டை பெருக்குதல்,எச்சில் பாத்திரங்களை கழுவுதல் , என்று என்ன எல்லாம் தங்கள் சக்திக்கு செய்ய முடிகிறதோ அவை அனைத்தையும் முடித்துவைப்பார்கள்.ஒருநாள் தவறாமல் அந்த பணிகள் அனைத்தையும் பெற்றோர்களின் சிரமம் அறிந்து மனமுவந்து செய்துவருவதுதான் ஆச்சர்யம்.

ஒரு மாலைப் பொழுதில் எல்லா வேலைகளையும் முடித்துவைத்திருந்த அவர்கள் இருவரும் அடுப்பை பற்றவைப்பது என்று முடிவெடுத்தார்கள்.அண்ணன் சொன்னதைப் போல தம்பி கருண் வெட்டப்பட்டு காய்ந்து போயிருந்த தேயிலைச் செடியின் ஒரு சின்ன பாகத்தை வீட்டின் முன் வாசல் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த விறகடுக்கிலிருந்து எடுத்து வந்தான்.இலைகளற்று எலும்புக்கூடாக போயிருந்த அந்த காய்ந்து சுருங்கிப் போயிருந்த செடியின் பிஞ்சுக்கிளைகளை கலை தன கை விரல்களால் 'டக் டக்' என்று முறித்து முறித்து போட்டான். கருண் அதை சேகரித்தவனாய் உள்ளங்கை நிரம்பிய விறகு சில்லுகளை அண்ணனின் கைகளில் சேர்த்தான்.கலை அதை மெதுவாக உலையினுள் பாதி நுழைத்து பழைய செய்தித்தாள் ஒன்றை நன்றாக சுருட்டி அதன் கீழ்ப்பகுதியில் இடம்பெறுமாறு திணித்தான்.இப்போது அடுப்பு பற்றவைப்பதற்கு தயார் நிலையில் இருந்தது.'அண்ணா நா பத்தவைக்கிறேன்' என்று முந்திக்கொண்டு தீப்பெட்டியுடன் கருணும் வந்து சேர்ந்தான்.மெளனமாக இருந்த கலையின் சம்மதத்தை பெற்ற ஆனந்தத்தில் தன் ஆள்காட்டி விரல்களால் பெற்றியின் உள்புறம் இருந்த பாகத்தை வேகமாக தள்ளினான்.தீப்பெட்டியின் திறப்பு கீழ்ப்பக்கமாக இருந்ததால் இருந்த நான்கைந்து குச்சிகளும் தரையில் சிதறின. கோபித்துக் கொள்ளாமல் கலை குனித்து இத்தோட்டத்தில் முகம் சிவக்க நிமிர்கிறான். முதல் தீக்குச்சியை எடுத்த கலை கருணை ஒருமுறை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு உரசுகிறார்.பற்றவில்லை.இன்னொருமுறை முயற்சி செய்கிறார்.பற்றவில்லை. மூன்றாவது முறை முயலும்போதுதான் அந்த தீக்குச்சியில் இருக்கும் மருந்து உதிரி இருந்ததை அறிந்துகொண்டான்.இப்படியாக தொடர் முயற்சியில் எல்லா குச்சிகளும் உதவாமல் போயின.மார்கழி மாசத்து பிசு பிசுப்பில் நமநமத்து போயிருந்த அந்த தீப்பெட்டியை வாசல் கதவை திறந்து தூர எறிந்தான். அந்த எறிதலில் கலையின் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் கலந்திருந்தது.



பின் சமையல் கட்டை நோக்கி நகர்ந்ததும் மஞ்சள் ஒளிவீச ஏரியும் காகிதத்தைத் துண்டையும் அது கருணின் கைகளில் இருப்பதையும் அறிந்து ஆபத்தை தவிர்க்க தன் கைக்கு பத்திரமாக மாற்றிக்கொண்டான்.'தீப்பெட்டிதான் யால்லையே அப்புறம் எப்படி இந்த காகிதத்தே பத்த வச்சே'என்ற கேள்வியைக் கேட்ட கருணிற்கு தான் சாதனை நிகழ்த்திவிட்டதாக பெருமிதம் ஏற்ப்பட்டது.அந்த முடிக்கிலேயே 'அண்ணா நாம இப்பதானே சாமி கும்பிட்டோ ,அதுக்குள்ளே மறந்துட்டியா ...விளக்கிலிருந்து பத்தவச்சிகிட்டேன்'என்று தெளிவாக பதிலளித்தான்.அவனின் அந்த சமாயோசித்த ஞானத்தை மனதிற்குள் பாராட்டியதைப் போல கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டுவிட்டு அந்த காகித நெருப்பைக் கொண்டு ஏற்கனவே உள்ளே வைக்கப்பட்டிருந்த காகிதத்தோடு சேர்த்து அது பற்றி எரியுமவரை அதன் அருகிலேயே கைகளால் பிடித்துக்கொண்டு நின்றான்.

மேட்டுச்சாலையில் வாகன சத்தம் கேட்டு கருணும் அடிக்கொருதரம் வீட்டிற்கு வெளியில் பொய் முகட்டில் தெரிகிற முதன்மைச் சாலையில் வாகனங்கள் போகிறதா என்று பார்ப்பதும் வருவதுமாக இருந்தான்.வாகனமும் பெற்றோர்களும் வந்ததாக தெரியவில்லை.'அண்ணா இன்னும் அம்மாவையும் அப்பாவையும் காணோமே' என்று ஏக்கத்தோடு கேள்விகேட்ட கருணிற்கு 'இப்ப வர்ற நேரமாச்சு'என்று அடுப்பை பற்றவைத்துக்கொண்டே பதிலளித்தான் கலை.

காகிதம் எரிந்து மேலிருந்த தேயிலை செடியின் சில்லுகளை எரித்து கொழுந்துவிடத் தொடங்கிய அந்த அக்கினியோடு புகையும் திடீர் கக்கிவிட, கருணும் கலையும் செய்வதறியாது புகையில் மாட்டிக்கொண்டு 'லோக் லோக் ' என்று இருவரும் மாறிமாறி இருமித் தள்ளினார்கள்.

இதற்கிடையில் கலை சமையலறை சன்னலை திறந்துவிட அடைந்திருந்த புகையில் ஒரு கால் பகுதி மட்டுமே வெளியேறி இருந்தது.கருண் ஐந்தாம் வகுப்பில் படித்த நோட்டு புத்தகத்தின் அட்டையை கிழித்து கொண்டுவந்திருந்தான்.'என்னடா இது , என்ன பண்றே' கலை கேட்டுமுடிப்பதற்கு முன்னதாகவே கருண் நோட்டு அட்டையால் இடத்தும் புறமும் வலது புறமும் மேலும் கீழும் அசைத்து புகையை வெளியேற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டான்.இந்த இருவரின் பிரயத்தனத்தால் புகை ஓரளவிற்கு வெளிநடப்பு செய்திருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊதுகுழலை எடுத்து கலை புகையும் உலைக்குள் தான் உயிர்க்காற்றை சிதறாமல் கவனமாக செலுத்தினான்.மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நெருப்பு லேசாக உயிர்ப்பெற்று சுடர்விட்டு சுவாலையாய் மேலெழுந்தது.அந்த சில கணங்களில் புகை எங்கோ காணாமலே போயிருந்தது.

பாத்திரம் வைக்கும் வாய்ப்பகுதியில் வழியாக நெருப்பு நாக்கை நீட்டி தனக்கான உணவை கேட்டு நின்றதைப் போல நீண்டு எரிந்தது.இப்போது கலை சோறு சமைக்கும் பாத்திரத்தை அதன் மீது வைத்தான்.கருண் அதற்குள்ளாக தன்னேர்கொண்டு வந்திருந்தான்.கலை கருண் கொண்டுவந்த தண்ணீரை பத்திரமாக பத்திரத்தில் வாய்ப் பகுதியின் வழியாக மிகுந்த எச்சிரிக்கையோடு கவனமாக ஊற்றினால்.தண்ணீரில் நெருப்பை அணைந்தால் மீண்டும் பற்றவைக்க முடியாது என்ற பயம் கலையை விட்டு அகன்றிருக்கவில்லை.அலுமினியப்பத்திரத்தின் முதலடுக்கு வளைவு வரையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது.அப்போதுதான் இதுவரையிலும் இவர்கள் சோதனை முயற்சி செய்திராத நிலையில் கருண் ஒரு யோசனை சொன்னான்.'அண்ணா தினமும் சாதம் வைப்போம் , அதுக்குள்ளே அம்மா அப்பா வந்திடுவாங்க ,இன்னிக்கு இன்னும் வரலே ,பேசாமே சாம்பார் வைச்சு பாக்கலாமா' என்ற யோசனையை முதலில் பெரிய வேலையாக கலை நினைத்திருந்தாலும் பிறகு , சரி செய்து பார்த்தால்தான் என்ன என்று சோதனை முயற்ச்சியில் இருவரும் களமிறங்கி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் சமையல் குறித்த பார்த்த அனுபவம் மிகவும் அதிகம்.அந்த அனுபவம் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும்.

அதற்குள்ளாக அடுப்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.'கருண் பருப்பு சாம்பார் செய்ய எல்லா பொருளும் இருக்கா, எதுக்கும் போயி கொஞ்சம் பாத்துட்டுவா'என்று கலை கட்டளை இட்டான் . எல்லாம் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் வண்ணமாக தலையை ஆட்டிக்கொண்டு வாத கருண்,'அண்ணா முதல்லெ ஒரு டம்ளர் துவரம் பருப்பை இதுலே போட்டு கொதிக்கவைக்கணும்' ' ம்ம் சரியாதா சொல்றே, சரி ஒரு டம்ளர் பருப்பு எடுத்தா' கருண் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது சில்வர் டம்ளரை வைத்து கவனமாக பிளாஸ்டிக் டின்னில் இருந்த பருப்பை கவனமாக சைத்தான்.பருப்பு அந்த டம்ளரை பிரமிடைப்போல நிறைத்து கொஞ்சம் உதிரிகளை தரையில் சிதறவிட்டது.கருணிடமிருந்த கலை அந்த பருப்பை வங்கி அதை அப்படியே கொதிக்கும் பாத்திரத்திற்குள் போட்டுவிட்டான். வேகும் பருப்பை கவனமாக உளவுபார்த்த படியே இருந்தான் கலை. அதற்குள் கருண் சிதறிய பருப்பு சிதறல்களை சேமித்துவிட்டிருந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பருப்பின் வாசனை ஆவியின் வழியே நாசியை வந்தடைந்தது,இந்த வாசனைக்கே பாதி சாம்பார் செய்து முடித்துவிட்டதாக இருவரும் திருப்தி பட்டுக்கொண்டார்கள்.ஒரு கட்டத்தில் கலை பருப்பு எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சாம்பார் கரண்டி ஒன்றை உள்ளே நுழைத்தான். நீராவியில் அனல் கலையில் வலது முன்னங்கைகளை பதம் பார்த்தன.விரைந்து எடுத்த அந்த கரண்டியில் ஒட்டி இருந்த சில பருப்பு துண்டங்களை தொட்டு அழுத்திப்பார்த்தான், பருப்பு வந்தபாடில்லை.

' கருண் , பருப்பு வேந்துகிட்டிருக்கு அடுத்து என்ன போடணும்' என்று அடுத்த சமையல் குறிப்பை கருனிடம் கேட்க 'பருப்பு வெந்ததும் கிழங்குதான் போடணும்,என்னண்ணே இதுகூட தெரியாதா?'கருணின் வினா கலையை சமையல் கத்துக்குட்டி என்று குறிப்பிட்டதைப் போல உணர்த்தியது.'அது சரி ஒரு நாலு கெழங்கு கொண்டா'என்றான் கலை.கூடைக்குள் கைகளைத் துழாவி விட்டு என்மாந்தவனாய் நிமிர்ந்த கருண் 'அண்ணா நாம பருப்பு சாம்பார் வைக்க முடியாது 'என்று பேரதிர்வு குண்டை கலையின் முன்னாள் வீசினான்.ஒன்றும் புரியாதவனாய் நின்ற கலை'என்னடா சொன்றே'என்று கேட்டான்.'இல்லண்ணே பருப்பு சாம்பாருளே அம்மா எப்போதும் கிழங்கு போட்டுதா செய்யும், அது இல்லாமே சமைக்கவே முடியாது' என்று சமையல் வல்லுஞனைப் போல திட்டவட்டமாக அறிவித்ததும்,தங்கள் திட்டம் தொல்வியடைத்து விட்டதைப் போல வருத்தமுற்ற கலை 'சரி இப்ப என்னதா செய்யறதா?'மீண்டும் கேள்விகளாய் கருணை துளைத்தான்.'அண்ணா பேசாமே அந்த செம்புலே இருக்குற தண்ணியே வடிச்சி பருப்பே தனியா எடுத்து கொஞ்சம் காய வச்சி அம்மா வர்றதுக்குள்ளே அந்த தப்பியிலேயே போட்டுடலாமா' என்று சொன்னது கலைக்கு நல்ல யோசனையாகப் பட்டது.

குளிக்கும் போது துடைப்பதற்காக கதவில் தொங்க வைக்கப்பட்டிருந்த டவலை எடுத்து வந்த கலை கொதிக்கும் அந்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியைச் சுற்றி அரைவட்டவடிவில் பிடித்து மெதுவாக இறக்கிவைத்தான்.பிறகு வீட்டின் பின்பகுதிக்கு ரகசியமாக சென்று கொதிக்கும் பாத்திரத்தை தரையோடு வைத்து சாய்த்து சுடும் நீரை கால்களில் தெரித்துவிடாதபடி மெதுவாக வெளியேற்றி முடித்தான்.ஈரம் உலராமலும் லேசாக வெந்த நிலையிலும் இருந்த பருப்பு சிதறல்களை சேகரித்துக்கொண்டு அவைகளை பழைய செய்தித்தாள்களுக்குள் வைத்து ஈரம் உரியில் அளவிற்கு சுருட்டிக்கொண்டான்.ஒரு வழியாக பருப்பு பழைய நிலைக்கு இவர்களது முயற்ச்சியால் வந்திருந்ததில் இருவருக்கும் திருப்தி.இதை எங்கு வைப்பது என்று இடம்தேடும் போதுதான் வாசலில் அம்மா அப்பாவின் அரவம் கேட்டது.கருண் ஓடிப்போய் அவர்களை வரவேற்க போயிருந்த அந்த இடைவெளியில் கலை அந்த பருப்புகளை எடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகளோடு போட்டுவைத்துவிட்டான்.ஏதும் நடக்கவில்லை என்பதைப் போல இருவரும் நடந்துகொண்டார்கள். இருந்தாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயமும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.வந்து செய்ததும் அம்மா முதல் வேலையாக அடுப்படிக்குள் நுழைந்து சமையலில் இறங்கி விட்டால். அன்று சுண்டல் கொழம்புதயாரிக்கப்பட்டதால் இருவரும் தப்பித்துக்கொண்டார்கள்.

மறுநாள் அம்மா சமைப்பதற்காக தானியப்பத்திரங்களை எடுத்தபோது பருப்பு டின் பூஞ்சை பிடித்திருந்ததை நோட்டமிட்டாள்.பருப்பை சுற்றிலும் பச்சை பசேலென ஏதோ படர்ந்திருந்தது.அம்மாவால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லை.கருணும் கலையும் வாய்த்திறக்கவில்லை.அம்மா அந்த பருப்பை சமைக்காமல் விட்டுவிட்டாள்.மறுநாள் மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாகவே அந்த ஈரம்படிந்து கெட்டியாய் இருந்த பருப்புதுண்டத்தை மெதுவாக வெளியில் எடுத்து வீசிவிட்டு.சுவையான கமகமக்கும் பருப்பு சாம்பார் வைத்திருந்தார்கள்.பிள்ளைகளில் சாமர்த்தியத்தைப் பற்றி அம்மா அப்பாவிடம் அன்றைய தினம் முழுக்க பெருமை பேசிக்கொண்டே இருந்தாள்.

புதன், 25 மே, 2011

அறை எண் 17 -சிறுகதை

படித்துவிட்டு வேலைதேடும் ஓர் இளம் பட்டதாரி ஆன கண்ணனுக்கு சென்னை என்றாலே அலர்ஜி . கண்ணன் சென்னையைத் தவிர்ப்பதற்கு வெயில்,பரபரப்பு,நெரிசல்,வாகனங்கள்,புகை என்று பலவும் காரணம். .ஆனால் சென்னையை நோக்கி ஓடிவரவேண்டிய நல்ல திருப்பம் கண்ணனது வாழ்வில் நிகழ்ந்தது.



அதிலிருந்து கடந்த ஒருவருடமாக கண்ணன் ஒரு முழுமையான சென்னை வாசி.தனியார் நிறுவனத்தில் சின்ன சம்பளத்திற்கு பெரிய வேலைக்கிடைத்ததில் கண்ணனுக்கு நிறைவுதான்.கண்ணனுக்கு ஊதாரித்தனங்கள் இல்லாததால் அளவான ஊதியம் அவனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவில்லை. ஒருவருடம் முடிந்திருந்த போதிலும் கண்ணனுக்கு நன்கு பரிச்சயம் ஆகாத நகரமாகத்தான் சென்னை இருந்தது.காலையில் வேலைக்கு கிளம்பினால் மாலை நேராக மேன்சனுக்கு திரும்பிவிடும் அவனுக்கு இந்த சகமான வாழ்க்கை பிடித்திருந்தது.



மாத வாடகைக்கு தங்கி இருக்கும் அந்த மேன்சனில் தரைத்தளத்தில் அறை எண் 18 -தான் கண்ணன் தங்கி இருந்தான்.எல்லோரும் மாத வாடகைக்கு இருப்பவர்கள் எல்லா முகங்களும் தினந்தோறும் பார்த்து பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டிருன்தது கண்ணனுக்கு.ஆனால் யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத கண்ணன் எல்லோரிடமும் புன்னகைத்து மெளனமாக வணக்கம் சொல்லிவிடுவது வழக்கம்.



காலையில் எல்லா அறைகளும் பூட்டியே இருக்கும் என்பதை தான் கிளம்பும் நேரத்தில் கதவு தாழிடும் சத்தத்தை வைத்து கண்ணன் உறுதி செய்துகொண்டான்.மாலை திரும்பும்போது சில கதவுகள் திறந்தும் பல கதவுகள் மூடியும் இருக்கும்.இப்படியாக நாட்கள் நகர்ந்த அந்த மேன்சனில் அறை எண் 17 மட்டும் மூடப்படாமல் இருப்பதையை அறிந்த கண்ணுக்கு யார் அங்கு நாள் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வம் மேலிட்டது.



மேன்சன் பணியாளர் ஒருவரிடம் அந்த குறிப்பிட்ட அறையில் இருப்பது யார் என்று ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் கேட்டேவிட்டான்.அவரும் பதிலளிக்கவே ட கண்ணனுக்கு அவரை சந்திக்க வேண்டும் பேசவேண்டும் என்ற விருப்பம் எத்தனித்தது.அன்றிலிருந்து மேன்சனுக்குள் நுழையும்போதெல்லாம் அந்த அறையில் இருப்பவரை பார்த்தும் பார்க்காததைப் போல பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம்.காலையில் ஒருமுறையும் மாலையில் மறுமுறையும் என்று ஒருநாளிற்கு இருமுறை அந்த அறையை நோட்டமிடுவது கண்ணனுக்கு வழக்கமாய் இருந்தது.



மேன்சனின் வரவேற்பு அறையை கடக்கும்போது நடை பாதையின் இடது புறமாக இருக்கும் முதல் அறைதான் அது.எப்போதும் குழல்விளக்கின் வெளிச்சத்தின் பளிச்சிடும்.இருவர் தாங்கும் அறைக்கு பொருத்தமான அகலமான வெண்ணிறப் படுக்கை. மெத்தை முழுக்க துவைக்கப்பட்ட துணிகளில் அடுக்கு,ஒரு பிளாஸ்டிக் தட்டில் குவியல் குவியலாய் மாத்திரைகள்,ஒரு தமிழ் மற்றும் மற்றொரு ஆங்கில நாள் இதழ் , என்று இன்ன பிறவும் மெத்தையை ஆக்கிரமித்து இருக்கும்.கட்டிலின் அருகில் சின்னதாய் ஒரு குட்டி மேசை.அந்த மேசையில் டீ பிளாஸ்க் ஒன்றும் இரு ஸ்டீல் டம்ளர்களும் சில பழத்தோல்களும் கட்சிப் பொருளாக இருக்கும்.டீபாயிக்கு முன்பாக ஒரு பிரத்யேக நாற்காலி.அதை முழுக்க நிரப்பியதைப்போல தன் பருத்த உடம்பை பொருத்தி கட்சிதமாக அவர் காட்சித்தருவார்.



சற்று அகலமாக ஏற்றம் கொண்ட நெற்றி,கூர்மையான நீளமான மூக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டும் நரைத்த முடிக்கற்றைகள் ,சதைப்பிடிப்பான உப்பிய கன்னங்கள்,எடையில் சதத்தைத் தாண்டும் பருமனான உடல்கட்டு , அகன்ற தேகத்தில் முன்னுக்கு எட்டிப்பார்க்கும் லேசான தொப்பை,மார்பும் வயிறும் சந்திக்கும் இடுப்பிற்கு சற்று மேல்பகுதியில் தன் வெள்ளை வேட்டியை முட்டுக்கொடுத்ததைப் போல கட்டி இருந்தார் அவர் .வேட்டிக்குள் வெள்ளை நிற கை பனியன் நுழைந்திருக்கும்.அவ்வப்போது கண்கண்ணாடி அவரின் மூக்கின் மேல் ஓய்வெடுக்கும்,பின்னர் இறங்கிக்கொள்ளும்.கூர்மையான கவனிப்பை வெளிப்படுத்தும் வகையில் அகலமான கண்கள் சுவற்றைப் பார்த்து வேறிப்பதைப் போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் .ஆனால் அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் டிவியைத் தான் அப்படி பார்த்துக்கொண்டிருப்பார்.



அவரிடம் பேசவேண்டும் என்ற என்னத்தை கண்ணனது உள்ளுணர்வு அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டே இருந்ததை கண்ணன் உணரத் தவறவில்லை.ஒரு மாலை பொழுதில் வேலைமுடித்து திரும்பிய போது வரவேற்பரையில் சிறிதுநேரம் மின்விசிறியின் காற்றை கடன்வாங்கியப்படி கண்ணன் அமர்ந்திருந்தான். 'என்ன சார் வேலைக்கு போயி வந்துட்டீங்களா' என்று ரிஷிப்ஷநிஸ்ட் கேட்ட கேள்வி கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது.'ம்ம் முடிஞ்சது.. என்னா வெயில் ' என்று கண்ணன் பதிலுடன் தன் அலுப்பையும் தெரிவித்தான்.''ரூம் நண்பர் 17 லே இருக்கும் சாருகிட்டே பேசினீங்களா' என்று மறுகேள்வி கேட்டான்.' நானு பேசணும் பேசணும்னு இருக்கே, சந்தர்ப்பமே அமையலே' என்று தன் விருப்பை தெரிவித்தான் கண்ணன். கண்ணனின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அந்த மேன்சன் பொறுப்பாளன் 'வாங்க சார் நா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று முன்னோக்கி நடந்து என்னை அந்த அறை அருகில் அழைத்துச் சென்றார்.சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித சங்கோஜம் கண்ணனை தொற்றிக்கொண்டிருந்தது.



கண்ணனை அழைத்துக்கொண்டு போனவர் அந்த அறையின் வாசலில் நின்றதும் 'வாங்க வருசை ' என்று அவரை அழைத்தார்.தனக்கு பின்னால் நிற்கும் கண்ணனை வருசை திரும்பி பாத்துவிட்டு 'வாங்க சார்' என்று கண்ணனை முன்னிறுத்தினார்.சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க அவரை கண்ணன் தன் இரு கைகளையும் கூப்பி 'வணக்கம்' என்றான். அந்த அறிமுகத்தில் சுவாரஸ்யப் பட்டவராய் முகம் மலர்ந்து 'வணக்கம் உள்ளே வாங்க ..உக்காருங்க' என்று மிக சகஜமாக அழைக்கத் தொடங்கியது கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



கொஞ்சமாக இடமிருந்த அந்த மெத்தையில் ஒரு மூலையில் அமர்ந்து அமராததைப் போல கண்ணன் அமர்ந்துகொண்டான்.அறிமுதத்தை முடித்துவிட்டது வருசை தான் அலுவல்களுக்கு திரும்பிவிட்டார்.இப்போது அந்த அறையில் கண்ணனும் அவரும் மட்டும்தான்.பேராசிரியர் என்பதை அறிந்த கண்ணனுக்கு அவர்மீது இன்னும் மரியாதை அதிகமானது. அந்த பேராசிரியரிடமிருந்து அழகாய் சுவாரஷ்யங்களோடு உரையாடல்கள் தொடங்க மரியாதையும் அக்கறையும் கலந்த பதில்களால் கண்ணன் எதிர்வினை புரிந்துகொண்டிருந்தான். மெய்மறந்த இவர்களின் உரையாடல்களில் நேரம் முன்னிரவை தொடங்கிவைத்திருந்தது.முதல் சந்திப்பு போன பிறவியில் உறவின் தொடர்ச்சியைப் போல இருவரையும் உணரவைத்திருந்தது.



உரையாடிய அந்த பொழுதுகளில் என் கண்களை அதிகம் உறுத்தியவை வகை வகையான மிகுந்திருந்த வண்ண வண்ண மாத்திரைகள், இடத்துபுரத்து சுவற்றின் மூலையில் கொஞ்சம் சாய்ந்தபடி நின்றிருந்த மரத்தால் செய்யப்பட்டிருந்த ஒற்றை கைத்தடி,இன்னும் சிலவும் எனக்கு அவர்மீது இனம்புரியாத இரக்க உணர்ச்சியையும் அன்பின் மிகுதியையும் கண்ணனிடம் ஏற்படுத்தின.எப்போதும் தனிமையில் மருந்துகளோடு வாழும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆறுதலாய் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தவனாய் அவரிடமிருந்து அன்று விடைப்பெற்றிருந்தான்.இந்த சந்திப்பும் உரையாடல்களும் அவருக்கு மட்டுமல்ல தனியாக இருக்கும் கண்ணனுக்கும் ஒரு நிறைவைத் தந்திருந்தது.தன் தந்தையை விட்டு தொலைவில் இருக்கும் கண்ணனுக்கு அவருடனான தொடர்பு இல்லத்தில் இருப்பதைப் போன்ற ஆறுதலை ஏற்படுத்தியது.



காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் வேகத்தில் அந்த அறையை கடக்கும்போது அவரின் முகம்பார்த்து 'வணக்கம்' சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான்.மாலையிலும் அதேதான். இரவில் உணவு அருந்தியபிறகுதான் பதினேழில் கண்ணன் வருகைப்பதிவைக்கொடுப்பான்.



கண்ணனைப்பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்ட அவர் தன்னைப்பற்றியே சொன்னதில்லை என்பது கண்ணனுக்கு ஒரு வெறுமையாக இருந்தது.பிறகு ஒரு சந்திப்பில் கண்ணன் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இயல்பான கேள்விகளில் இயல்பான பதில்களை கேட்டுப்பெற்றுக்கொண்டான்.பேராசிரியர் கண்ணனின் நல்ல குணத்தை அறிந்து திறந்த புத்தகமாகவே தன் மனம் திறந்தார்.பேராசிரியருக்கு திருமணமானது ,துணைவியார் உடல்நலமில்லாமல் உறவினர்வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, தான் சிகிச்சைக் காரணமாக சென்னையில் தங்கி ஓய்வூதியத்தில் மருத்துவம் பார்ப்பது என்று பலவும் கண்ணனுக்கு தெரிய வந்தன.கண்ணன் அவரில் நிலைக்கு தன்னுள்ளேயே வருந்திக்கொண்டான். அவரது பிள்ளைகளைப்பற்றி கேட்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்த கண்ணன் மருநாளைக்காக காத்திருந்தான்.



மற்றொருநாள் மாலைப் பொழுதில் நேரே பேராசிரியரின் அறைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு மேன்சனில் நுழைந்த கண்ணனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.அந்த குறிப்பிட்ட அறை வழக்கத்திற்கு மாறாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையைத் தாண்டி கண்ணனுக்கு செல்வதற்கும் கூட மனதுவரவில்லை. தளர்ந்துபோய் தனது அறையில் அடைந்துகொண்டான் கண்ணன்.இரவு முழுக்க அவரின் நினைவாகவேன் இருந்தான். விடிந்ததும் சற்று முன்னரே கிளம்பி நகர்ந்த கண்ணனுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த அறை திறந்த நிலையில் விளக்கின் வெளிச்சத்தில் நிறைந்து வழிவதைப் பார்த்து மகிழ்ச்சி உற்றவனாய் நெருங்கினான்.வேறுயாராவது இருக்கப்போகிறார்களோ என்ற சந்தேகமும் கண்ணனுக்கு வந்தது.கடக்கும் சாக்கில் வாசலை லேசாக நோட்டமிட்டபோது வழக்கமாக பார்ப்பதைப்போல பேராசிரியர் அமர்ந்திருந்தார்.நான் வினாவை எழுப்புவதற்கு முன்னதாகவே அவர் முந்திக்கொண்டு' ''நேத்தைக்கு எம் பையனே பாக்கலான்னு போயிருந்தே.வர்றதுக்கு ரொம்பவும் நேரமாயிடுச்சு'என்றார். கண்ணனது கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்தில் கண்ணனது மனம் நிறைத்தது .



மறுநாள் வேலைக்காக வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது மேன்சன் பொறுப்பாளர் வருசை என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.'வாத்தியாரே பாத்தீங்களா' என்று கேட்க 'ஆமா பாத்தே ..பேசினேன்' என்று பதிலளித்த கண்ணனுக்கு 'பிள்ளையைப் பார்க்க போனதா சொன்னாரா'என்று மீண்டும் வினாவினால் தொடர்ந்தார்.'ஆமாம்'.'இப்படி ஒரு வயசுலே இருக்குற தகப்பனே இந்த காலத்து பிள்ளைங்க பாத்துக்கறது பெரிய புண்ணியம்தானே' என்று கண்ணன் நிறைவோடு பதிலளித்ததும்.'இல்லே சார் , நேத்திக்கு அவரு டாக்டர்கிட்டே போனாங்க,பையனே பாக்க போகலே'என்று வருசை சொன்ன பதில் கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது.'அப்பா ஏ அவர் அப்படியொரு பொய்யே சொல்லணும்'என்று கண்ணன் திருப்பிக்கேட்டான்.வருசை உண்மையைத் திறக்கிறான் 'அவருக்கு உண்மையில் புள்ளங்க இல்லே சார்,வயசான காலத்துலே யாருக்கும் உபத்திரமா இருக்ககூடாதுன்னுட்டு இப்படி வந்து தங்கி இருக்காரு, பென்சன் பணத்தை வாங்கிக்கிட்டு உடம்புக்கு தானே மருத்துவம் பாத்துகிட்டு வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்காரு' என்றதும் கண்ணனுக்கு மனதில் அதிர்ச்சியும் கண்ணில் துளிகளும் நிறைந்துகொண்டன.



அன்றிலிருந்து இப்போதெல்லாம் கண்ணன் அந்த அறைக்கு அடிக்கடி சென்று அதிக நேரம் செலவழித்து ஆறுதல் மொழி பேசி சின்ன சின்ன உதவிகள் செய்து வருகிறான் .தனக்கு பிள்ளை இல்லை என்பது கண்ணனுக்கு தெரியாது என்று அந்த பேராசிரியர் இன்னமும் நினைத்துக்கொண்டார். ஆனால் கண்ணனோ காலப்போக்கில் முழுமையான பிள்ளையாகவே மாறிப்போயிருந்தான்.

குச்சி ஐஸ் -சிறுகதை

வீதிகள் விழாக்கோலமாக களைக் கட்டி இருந்தன அந்த விடுமுறை நாளில்.அகலமும் நீளமும் மிகுந்த அந்த வீதியை மழலைகள் குட்டி மைதானமாகவே கருதி ஓய்வே இல்லாமல் விளையாடுவது வழக்கம்.கோலூன்றும் பெரியவர்களும் தண்ணீர் குடம் சுமக்கும் பெண்களும் இயங்க முடியாத அளவிற்கு விளையாட்டுப் பிள்ளைகள் அந்த வீதியை அடைத்திருப்பார்கள். அவர்களுக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டு விளையாடும் அந்த மழலைகளை யாரும் எதுவும் சொல்வதே இல்லை.கோடைக்கால விடுமுறை வெளியிலில் விளையாடும் அந்த பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கும் ஒலிகள் இரண்டு.வெயிலின் கூச்சத்தைக் கூட பொறுத்துக்கொண்டு வானத்தின் திசையெங்கும் மின்னலடிக்கும் தங்களின் சின்ன விழிகளால் துழாவும் ,வெள்ளை கோட்டை கிழித்தபடி செல்லும் விமானத்தின் ஓசை.மற்றொன்று நாக்கில் எச்சிலையும் மனதில் சில்லிடலையும் உருவாக்கும் குச்சி ஐஸ் காரன் எழுப்பும் 'பொய்ங்... பொய்ங்...' என்னும் ஹாரன் சத்தம்.



இவர்கள் எப்போதும் கூட்டாக விளையாடுவதுதான் வழக்கம்.அப்படி அவர்கள் என்ன விளையாட்டு விளையாடினாலும் அவர்களுக்குள் பந்தய 'பெட்' கட்டாயம் இருக்கும்.இதற்காகவே ஐந்து பைசா பத்து பைசா என்று ஆளாளுக்கு கொண்டு வந்து எப்போதும் விளையாடாத ஒரு பையனிடம் பத்திரப்படுத்திவிட்டு களம் இறங்கிவிடுவார்கள்.காட்டப்படும் மொத்த பைசா தொகையில் பிரமாண்டமான தின்பண்டங்களை வாங்கி தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் சேர்ந்தே உண்பதுதான் சுவாரஸ்யம்.தேன்மிட்டாய்,கம்பர்கட்,கடலைமிட்டாய்,ஆரஞ்சுமிட்டாய்,சீரம் மிட்டாய்,என்று இவையும் இன்னபிறவும் இவர்களை உற்சாகப்படுத்தும்.



மழைத் தாயின் இடுப்பில் பிள்ளை இருப்பதைப் போல அந்த கிராமம் ஒரு மலையின் பாதிபள்ளத்தாக்கில் இருக்கும்.முதன்மை சாலைக்கு செல்லவேண்டும் என்றால் ஒரு அரை பர்லாங் தூரம் குத்துமேட்டில் மூச்சுவாங்க நடந்தாகவேண்டும்.இருந்தாலும் வெற்றிக்கொண்டாட்டங்களுக்காக இவர்கள் இந்த மலைஏற்றத்தை சிமமாகவே கருதுவதில்லை.எப்போதும் சில்லிடும் அந்த மலையூரின் தப்பத்தை தாண்டி விளையாட்டில் எல்லோரும் வியர்த்து வழிந்துகொண்டிருந்த ஒரு பகல் பொழுது. விளையாட்டும் இன்னும் முடிந்தபாடில்லை.அந்த மும்முரமான பரபரத்த நேரத்தில் தான் அவர்களை எப்போதும் ஈர்க்கும் அந்த ஒலி அவர்களின் காதுகளுக்குள் வந்து நுழைந்தது.ஐஸ் கிரீம் காரனின் ஹாரன் சத்தம் எல்லோருடைய வாயிலும் எச்சில் ஊறவைத்தது.



அந்த சத்தம் எல்ல்லோருடைய கவனத்தை சிதைக்கவே அன்று விளையாட்டை பாதியிலே நிறுத்திவிட்டு சேர்ந்த பைசாக்களுக்கு ஐஸ் வாங்குவது என்று முடிவெடுத்து , இறைக்கும் மூச்சுடன் முதன்மைச் சாலையை ஒருவழியாக அடைந்தார்கள்.சதுரவடிவ பேட்டியின் நடுப்பகுதியில் இருக்கும் திறப்பு கட்டையை ஐஸ் காரார் 'டப் டப்' என்று அடித்துக்கொண்டிருந்தார்.எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.'அண்ணே மொத்தமா நாலு ரூபா இருக்கு ,எங்க எல்லோருக்கும் குச்சி ஐஸ் தாங்க 'என்று அவர்களின் பிரதிநிதியாய் ஒருவன் ஆரம்பித்தான்.பன்னிரண்டு பேர்களுக்கு இந்த தொகை போதாது என்று அறிந்தபோதிலும் இவர்களுக்கு ஐஸ் கொடுப்பது என்று தீர்மானித்த ஐஸ் காரர் மேல் கட்டையை விளக்கினார்,உள்ளுக்குள்ளிருந்து வெள்ளை வெளேரென நீராவு அலை அலையாய் மேல்நோக்கி எழுந்ததை எல்லோரும் வேடிக்கைப் பார்க்க தவறவில்லை.சிவப்பு,நீளம், மஞ்சள்,ஊதா ,இப்படி பலநிறத்தில் குச்சி ஐஸ்களை ஒவ்வொன்றாக எடுக்கிறார்.உனக்கு எனக்கு என்று அல்லலுக்கு முட்டிக்கொண்டு அனைவருமே வாங்கிக்கொண்டார்கள்.



வாய்க்குள் வைத்து வெளியில் எடுக்காமல் கையிலும் பிடிக்காமல் வேடிக்கை காண்பித்தான் ஒருவன் ,சிந்தாமல் உருகும் கீழ முனைப்பகுதியை மேலாக உயர்த்தி சொட்டும் துளிகளை சுவைத்தான் மற்றுவன்.இவர்களில் ஒருவன் மட்டும் தன தம்பிக்காக வேகவேகமாக ஓடி கொண்டுவந்தான். உருகும் ஐசிற்கு ஈடுகொடுத்து ஓடினான்.அந்த ஞாபகத்திலேயே வந்ததால் அவர் ஐஸை கவனிக்கவில்லை வீடு வந்ததும் குச்சியில் கொஞ்சமாக ஐஸ் ஒட்டிக்கொண்டிருந்தது.



தம்பியிடம் சாரி சொல்வதைப்போல ஒரு சைகை செய்துவிட்டு அவன் கையில் கொடுத்தான்.தம்பி மீதமிருந்த ஐஸ் துண்டை சுவைத்தான்.அண்ணன் தன்னையே பார்ப்பதை கவனித்தவன் அவனுக்கும் ஒரு வாய் கொடுத்தான். சிலவினாடிகள் தான் அவர்கள் சுவைத்தார்கள் ஆனால் நீண்டநேரம் இனித்திருக்க கூடும்.

சனி, 21 மே, 2011

அப்பாவும் கதிரும் -சிறுகதை

ஒன்றாம் வகுப்பு படிக்கும் கதிருக்கு ஞாயிற்றுக் கிழமை ஆகிவிட்டாலே ஒரே கொண்டாட்டம் தான். வார விடுமுறை நாட்களில் ஓய்வாக வீட்டில் இருக்கும் அப்பாவை விட்டு அகலுவதே இல்லை.தன் குழந்தைக்கு ஈடு கொடுத்து விளையாட முடியாவிட்டாலும் சின்ன சின்ன ரசனைகளில் கதிரை ஆர்வப்படுத்தி அவனுடன் இணைந்திருப்பார். அலுவலக அலுவல்கள் மீதப்பட்டு இருந்தாலும் வீட்டில் அதை கடைவிரித்து யாரிடமிருந்தும் அவர் எப்போதும் அன்னியப்பட்டதில்லை .அவரது மனைவிக்கு வார இறுதி நாட்கள் வீட்டு வேலைகளுக்கு சரியாக இருக்கும். அதனால் இவர்கள் இருவரையும் அவர் தொல்லை கொடுப்பதேயில்லை .அப்பா- பிள்ளை விளையாட்டுகளை ரசித்துக்கொண்டே தன் வேளைகளில் மும்முரமாக இருப்பாள்.



காலை சிற்றுண்டி முடிந்ததும் அப்பா கதிரை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது அவனுக்கு பிடித்தமாதிரியான செயல்களில் ஈடுபடவைப்பது வழக்கம்.அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமையில் , 'கதிர் கண்ணா! இங்கே வா' என்று அழைத்ததும் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து சம்மனக் கால் போட்டு அமர்ந்திருந்த அப்பாவில் வலது தொடைப்பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டான்.' கதிர் இப்படியே அப்பா மடியிலே ஜம்முன்னு ராசா மாதிரி உக்காந்துகிட்டு அப்பாவோட தலையெ சீப்பு வச்சி சீவிவிடுவீங்களா, சரியா' அப்பா கதிரை அன்பால் வேண்டுகிறார்.சொன்னதும் தான் மிச்சம், குன்றிலிருந்து தாவிய ஆட்டுக் குட்டியாய் தன் மடியிலிருந்து பாய்ந்து முதலறைக்கு ஓடி ,முகம் பார்க்கும் கண்ணாடி அருகில் வைக்கப்பட்டிருந்து சீப்பு,பவுடர் தப்பா,எண்ணை, போன்ற பலவற்றையும் தன் சட்டையில் கீழ்ப்பகுதியில் வைத்து அவை தவறி கீழே விழுந்துவிடாதபடி இரண்டுகைகளால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அடிவைத்து வந்து சேர்ந்தான்.



கொண்டு வந்த பொருட்களை தன் பிஞ்சுக்கைக்கு எட்டும் தூரத்தில் பரவலாக வைத்துவிட்டு, 'இப்ப நான் தான் பார்பர்' என்று சொல்லி 'அப்பா நீங்க நேரா உக்காருங்க,ஆடக்கூடாது,கண்ணே திறக்க கூடாது ...அப்பத்தா நான் தலை சீவிவிடுவேன்'என்று ஆணையிட்டு தன் பணியில் மும்முரமாகிவிட்டான்.இப்போது அப்பா தன் பிள்ளையின் கட்டளைக்கு இசைந்து ஆடாமல் அசையாமல் தன் ஒத்துழைப்பை வழங்கத் தொடங்கிவிட்டார்.ஆப்பிள் பழ வடிவத்தில் இருந்த நீலநிற எண்ணை பிளாஸ்டிக் டப்பாவிற்குள் தன் பிஞ்சுக் கைகளை விட்டு விரல்களால் இறுகிப் போயிருந்த தேங்காய் எண்ணையை சிரமப்பட்டு விரல்கள் நொண்டியும் தோண்டியும் எடுத்தான்.உள்ளங்கை வெப்பத்தில் எண்ணை உருகி முழங்கை வரையில் வந்திருந்ததை அவன் கவனிக்கவே இல்லை.எண்ணை பரவி இருந்த வலது கையையோடு இடது கையையும் சேர்த்து முன்னும் பின்னும் மேலும் கீழுமாக தேய்க்கத் தொடங்கினான்.'அப்பா !இப்ப நா எண்ணை தேய்க்கப்போறேன்', என்று சொல்லி கண்களை மூடி இருந்த அப்பாவின் முகத்தருகே நெருங்கினான்.தந்தை பிள்ளையின் அன்பின் அதிர்வில் நெகிழத் தொடங்கினார்.



அப்பாவின் தலைக்கு மேல் கைகளை வைத்துக்கொண்டு தன் இஷ்டம் போல கதிர் தேக்க தொடங்க அவருக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்திருக்க கூடும் .இருந்த போதிலும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தவே இல்லை.மனது நோகாதபடி 'அருமையா இருக்கே, நல்லா எண்ணை தேய்க்கிறீங்களே !'என்று முதல் கட்டமாக பாராட்டவே கதிருக்கு குஷி தாங்கமுடியவில்லை.



'இப்ப கதிர் தம்பி பத்து விரலையும் விரிச்சி வச்சிட்டு அப்பாவோட தலைக்குள்ளே நுளைச்சி நுளைச்சி எடுப்பீங்களா அதுக்கப்புறம் சீப்பே வச்சி சீவிவிடு வீங்களா சரியா ', சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டார் அப்பா .கதிர் அப்படியே தொடங்கினான். அந்த தீண்டல் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக சொக்கவைத்திருக்கக் கூடும்..ஒரு அசைவில் லேசாக சொக்கித் தெளிந்த அப்பா ' கதிர் தம்பி அப்பாவுக்கு எப்படி எண்ணை தெயச்சீங்கன்னு பாக்கணும் கண்ணாடி கொண்டுவருவீங்களா 'என்றார்.குதித்தான் எடுத்தான் ஓடினான் மீண்டும் முன்புபோல அமர்ந்து கொண்டு கண்ணாடியை அப்பாவின் முகம் தெரியும் படியாக வைத்தான் .கதிரின் பிடித்தலுக்கு சரியாக தனது முகத்தையும் ஆடிக்குள் கொண்டு வந்து கதிரின் பணிக்கு பாராட்டு தெரிவிப்பதைப் போல பற்கள் தெரிய சிரித்தார். 'அப்பா !எப்படி இருக்கு... நல்லா இருக்கில்லே... இன்னு கொஞ்சம் எண்ணை போடட்டுமா? என்று கேட்டார்.



'எண்ணை போட்டது போதும் ,இதுக்கு மேலே எண்ணை போட்டா அம்மா திட்டும்' என்று மெல்லிய குரலில் ரகசியமாக சொல்லி மறைமுகமாக கதிரின் முதல் கட்ட பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.'இதோ இந்த செவப்பு கலர் சீப்புலே அப்பா தலையே கதிர் தம்பி சீவுவீங்களா..அப்பா ஆடாமே இருப்பேனா சரியா..?'என்றார். பதிலுக்கு தலையை ஆட்டிவிட்டு கதிர் சீப்பை எடுத்து சீவத் தொடங்கினான் .இப்போது சீப்பு முன்னந்தலையில் இருந்து தொடங்காமல் பாதி நெற்றியிலிருந்து தொடங்கியது.சுமார் எழுபது பற்கள் இருக்கும் அந்த சீப்பு அப்பாவின் கபாலத்தை கீறிவிட்டுக்கொண்டே இருந்தது.'அப்படி செய்யாதே' என்று சொல்லாமல் வலிகளை பொறுத்துக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.



அழுத்தி சீவும்போதெல்லாம் வலியை கண்களை சுருக்கி வெளிப்படுத்திய அப்பா இப்போது எந்த பாவத்தையும் காண்பிக்க முடியாதவாறு தூங்கிப் போய் இருந்தார் .அப்பா தன் தீண்டலில் சொகிப்போயிருந்ததை அறியாத கதிர் .வலது இடது புறத்து பக்கவாட்டுகளில் சீவ இறங்க காதுகளில் மேல் பகுதியை சீப்பின் கூர்முனைகளால் குதற இப்போது அப்பா விழித்துக்கொண்டார்.



'இதோ பாரு கதிர் லேசா சீவுவீங்களா...இங்கே பாரு அப்பா எப்படி சீவறேனு...இப்படீ... இப்படி ...'என்று செய்துகாண்பித்தார்.பின் சீப்பை கதிரின் உள்ளங்கைக்குள் திணித்துவிட்டு பழையபடி கண்களை மூடிகொண்டார்.அப்பாவின் குறிப்புக்களை உள்வாங்கிக்கொண்ட கைகள் அப்படியே இயங்கின.'கதிர் ...இப்ப அப்பாவோட தலையிலே இடதுபுறம் அழகா ஒரு வகிடு போடு ..சரியா?' அப்பா சொன்ன இடதுபுறத்தை தவறாக புரிந்துகொண்ட கதிர் வலது புறத்தில் வகிடேடுக்கத் தொடங்கினான்.வகிடு நேராக வரவில்லை.பலமுறை முயற்சித்தும் வகிடுக்கு வழிவிடாமல் அப்பாவின் தலைமுடி கதிரை வென்றுகொண்டே இருந்தது. அப்பா எப்போதுமே வகிதேடுக்காமல் மேல்புறமாக சீவுவதுதான் இந்த தோல்விக்கு காரணம் காரணம்.



வலதுபுறம் முடித்து இடதுபுறம் வந்த கதிரின் விரல்கள் இன்னும் பக்குவமாய் இயங்கின.அப்பா எதுவுமே சொல்லவில்லை என்ற விஷயம் கதிருக்கு சந்தோசத்தை அளித்தது.இப்படியாய் அப்பாவும் கதிரும் ஒருமணிநேரத்தை முடித்திருந்தார்கள். கைகள் வலியெடுக்க எல்லாம் முடிந்துவிட்டு மெளனமாக அப்பாவைப் பார்க்கிறான் கதிர்.அப்பாவின் தலை லேசாக கீழ்புறமாக விழுந்து விழுது நிமிர்ந்தது. அப்பா தூங்கி விட்டார் என்பதை உறுதிசெய்துகொண்ட கதிர் ஓடிப்போய் தெருவில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த அம்மாவை கையேடு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான்.இப்போது அம்மாவும் கதிரும் அப்பாவின் முகத்தருகே வந்து பார்த்தபடியே இருக்கிறார்கள். அம்மா புன்னகைக்க கதிர் சிரிக்கிறான்,இருவரும் சிரிக்கிறார்கள் சிரிப்பு பெரும் சத்தமாய் வெடிக்கிறது.ஏதோ சத்தம் கேட்ட பரப்பரப்பில் தூக்கம் கலைந்தவராய் லேசாக கண்களை திறக்கிறார் அப்பா. இப்போது மூவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.



தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கதிருக்கும் அப்பாவிற்கும் இப்படியான இனிய அனுபவங்களோடு கழித்தன.அப்பா ஒருநாள் உடல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பதை பள்ளியிலிருந்து திரும்பிய கதிர் பார்த்து அதிர்ந்தான். இதுவரையில் அவன் அப்பாவை அப்படி பார்த்ததே இல்லை.வழக்கத்திற்கு மாறாக சோர்வாக படுத்திருந்த அப்பாவைப் பார்க்க கதிருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.'அப்பா ஏம்பா படுத்திருக்கீங்க ..என்னாச்சுப்பா...எந்திரிங்கப்பா...' என்று பாசம் பொழிய அழைத்தான்.'கதிர் கண்ணா பள்ளிக்கூடம் போயி வந்துட்டீங்களா? சமத்து. அப்பாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு. நீங்க போயி கைகால் கழுவிட்டு சட்டே துணி மாத்திட்டு இங்க வா நா உனக்கு ஒரு கதே சொல்றே' என்று மனநிலையை மாற்றி அவன் சங்கடப்படாதவாறு பதலளித்தார்.



அந்த மாலை பொழுது முடித்து இரவு படரத்தொடங்கிவிட்டிருந்தது . அம்மாவும் வேலைமுடித்து உறங்க வந்திருந்தாள்.அப்பாவின் தலையில் தலைலம் போட்டிருந்ததை நாசியில் நுகர்ந்து உணர்ந்துகொண்ட கதிர் அப்பாவையே பார்த்தான்.அப்பாவிற்கு அருகில் படுத்திருந்த கதிருக்கு தூக்கமே வரவில்லை. வெகுநேரம் கண்கள் கொட்ட கொட்ட தூங்காமல் யோசித்துக்கொண்டே இருந்தான். வழக்கத்திற்கு மாறாக அப்பா பலவீனப்பட்டிருந்தது அவனுக்கு என்னமோ மாதிரி இருந்தது. அப்பாவுடன் ஆறுதலாக ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அம்மாவின் தூங்கி விட்டிருந்ததை உறுதிபடுத்துக்கொண்ட கதிர் அப்பா தூங்காமல் இருப்பதையும் அறிந்தவனாய், அப்பாவின் பக்கமாக நெருங்கி வந்தான்.



அப்பா லேசான அசதியிலும் லேசான காய்ச்சலிலும் உறங்கியும் உறங்காமலும் இருக்கிறார் என்பதை அவரின் நெஞ்சில் கைவைத்து எப்படியோ ஊகித்துக் கொண்ட கதிர் இப்போது தனது ஞாயிற்றுக்கிழமைகளை நினைத்துப்பார்த்தான்.சட்டென அவனுக்கு ஏதோ ஞாபகத்திற்கு வந்தது. இப்போது கதிர் தன் தந்தையின் தலைமுடியை தன் பிஞ்சு விரல்களால் கோதிவிட தொடங்கினான். மெதுவாக மெதுவாக.மிருதுவாக மிருதுவாக. அறிந்தும் அறியாத அரைத்தூக்கத்தில் இருந்த அந்த அப்பா முழுதுமாக தூங்கியே விட்டார் என்பதை அப்பாவின் குறட்டை சத்தத்தை வைத்து உருதிபடுத்திக்கொண்டான். இப்போதுதான் கதிருக்கு ஆறுதலாக இருந்தது. கோதி கோதி களைத்த அசதியில் கதிரின் குறட்டையும் தந்தையின் குறட்டை சத்தத்தோடு சிலவினாடிகளில் ஒத்திசைத்தது.

சனி, 14 மே, 2011

குளிர் - சிறுகதை

கரும்பலகையை வாத்தியார் அழித்துக் கொண்டிருந்தார். பள்ளி முடிவதற்கு இன்னும் சிலவினாடிகள் இருக்கக்கூடும் என்பதை யூகம் செய்தவர்களாய் சிறுவர்கள் தங்கள் புத்தகங்களை சரி செய்து துணிப்பைக்குள் அடுக்கடுக்காய் திணித்துக் கொண்டார்கள்.சிலர் கடன் கொடுக்கப்பட்ட வெள்ளைநிற சிலேட்டு குச்சிகளை திரும்பப் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.சிலர் நிலாவிற்கு செல்வதற்கு சிலிண்டர் மாட்டுவதைப் போல தங்கள் பைகளுக்குள் இரண்டு கைகளை திணித்து முதுகில் தொங்கவிட்டிருந்தார்கள். வகுப்பு ஓய்ந்ததால் பள்ளிச்சிறார்களின் சின்ன சின்ன உரையாடல்கள் பேரிரைச்சலாக அந்த அமைதியான மலைகிராமத்து காற்றில்கலந்துகொண்டிருந்தது.



நான்காம் வகுப்பில் எழுந்த விடைபெறும் சத்தம் பக்கத்து வகுப்புகளுக்கும் பரவுகிறது ,இப்போது அந்த கிராமத்துப் பள்ளி முற்றிலுமாக தன் அமைதியை இழந்திருந்தது . நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் கடைசி வினாடிகளுக்காக விழிப்போடிருக்கும் வீரர்களைப் போல மாணவர்களும் காத்திருந்த வேலை 'டிங் டிங் டிங் டங் டங் டங்' என்று ஒலிக்கும் பள்ளியின் மணியோசை அந்த பள்ளியை சுற்றியுள்ள பத்து மலைகிராமங்களுக்கு கேட்கிறது .இந்த மணியோசைக்கேட்டு சில பெற்றோர்கள் அவரவர்களது வீட்டில் தயாராகி இருக்கக்கூடும்.சில மாணவர்கள் காத்திருப்பார்கள் பலரும் நடையைக் கட்டிவிடுவார்கள்.அந்த பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஊரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன.



வெள்ளை சட்டை காக்கி கால்சட்டை அணிந்த சிறுவர்களும் வெள்ளை மேலாடை பச்சை பாவாடை அணிந்து சிறுமிகளும் கூட்டமாக பள்ளி வளாகத்திலிருந்து நழுவும் பாதரசத்தைப் போல மெல்லென வழிகிறார்கள் .பள்ளி வெறுமையாகிறது.ஒரு கிலோமீட்டர் தூரம் மலை சரிவிலும் ஒரு கிலோமீட்டர் தூரம் சமதளத்திலும் இவர்கள் நடந்தாகவேண்டிய தொலைவில் ஊர் இருக்கிறது.



நான்காம் வகுப்பு படிக்கும் மகேஷ் வெற்றி குமார் ஆகியோர் இணைபிரியாத தோழர்கள்.வெற்றி எப்போது ஒரு அவாய் அணிந்துவருவான், மகேசும் குமாரும் வெறும் காலுடன்தான் வருவது வழக்கம்.அது அவர்களுக்கு பழகிப் போய் இருந்தது.வெயில் காலம் ஆனாலும் பனிக்காலம் ஆனாலும்.



டிசம்பர் மாதம் பனி என்றால் அந்த பனிக்கே குளிரெடுக்கும். காலை நேரத்து விடியலில் பனிக்கட்டிகளை பொடித்து வைத்ததைப் போல புல்லெங்கும் பனித் துளிகள் உறங்கிக்கொண்டிருக்கும்.மதிய வேளைகளில் அடிக்கும் பனி வெயில் சருமத்தை குதறிவிட்டுப் போகும்.சிலரின் உதடுகளுக்கு வெடிவைத்து ரத்தக் கசிவை ஏற்ப்படுத்தி இருக்கும்.இந்த பூமியில் அந்த மாதத்தில் பெரிய பயங்கரவாதி பனிதான்.



வெற்றி எப்போதும் இளவரசனைப் போல இந்த பனிக்காலத்தில் தன் தலைமீது பஞ்சு கிரீடம் வைத்துவருவான்.மகேஷிடம் எப்போது ஒரு பருத்தி பனியன் இருக்கும். குமார் ஒற்றை சட்டையும் வெறும் காலுமாக வருவதுதான் வழக்கம்.



ஈரப் பனிக்காற்று பட்டு இவர்களின் கைகளின் ரோமங்கள் எழுந்துநின்று கொண்டன.குமாரின் மேற்பல்லும் கீழ்ப் பல்லும் .குளிர்தாக்குப் பிடிக்கமுடியாமல் 'கட் கட் கட கட ' என்று இடைவிடாமல் அடிக்க தொடங்கி விட்டன. நிலநடுக்கம் பூமிக்கு வந்ததைப் போல குமாருக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்க , உள்ளங்கை இரண்டையும் அழுத்தி தேய்த்து உஷ்ணத்தை லேசாக பற்ற வைக்க முயற்சி செய்கிறான். .அப்போதைக்கு வெப்பம் எரிகிறது உடனே அணைந்துபோகிறது . சில்லிட்ட தனது உடலை இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்றாக வேண்டுமே என்ற சவால் இப்போது மூவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.



ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட சரிவு, இவர்கள் நடக்க முயற்சி செய்தும் அது உந்தி ஓடவைத்திருக்கிறது.சரிவின் கீழிலிருந்து சமவெளி தொடங்கும் பாதையெங்கும் அடர்ந்த மரங்கள் சாலைகளை வணங்குவதைப் போல அடர்ந்து படர்ந்து நிழலை இருட்டாகவே அப்பச் செய்திருக்கிறது.மலைகிராமங்களில் மாலை ஐந்துமணி ஆனாலே அமைதியும் வெளிச்சமும் ஓய்வெடுத்துக்கொள்ள தொடங்கிவிடுகிறது.அதிலும் பனிக்காலம் என்றால் கேட்கவா வேண்டும்.அந்த மூவரில் குமாருக்கு சவாலான நேரம்தான்.இரண்டு புறமும் நண்பர்கள் வர நடுவில் குளிரிலிருந்து தன்னை ஒளித்துக்கொண்டே நடந்தான்.ஒரு கட்டத்தில் மூமரும் கைகளை ஒன்றாக பிடித்துக்கொண்டு ஒருவரது வெப்பத்தை அடுத்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டார்கள்.



நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடையை கடந்து போவதற்குள் ஐந்துநிமிடம் ஆகும்.இப்போது அந்த சூழ்நிலை மூவருக்கும் சவாலாகிவிட்டிருந்தது.வேறு வழியின்றி மூவரும் முழங்காலளவு வரும் அந்த ஓடைக்குள் லேசாக கால் நனைத்தார்கள்.ரத்தம் உறையும் அளவிற்கு பனியை உணர்ந்து பின்வாங்கினார்கள்.வெற்றி அணிந்திருந்த செருப்பும் இப்போது பயன்படவில்லை என்ற ஏக்கம் அவனையும் தொற்றிக்கொண்டது.எப்படியோ கண்களை மூடிஉடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.அதுவரையில் ஏற்படாத பனியில் வலியை அப்போது உணரத்தொடங்கினார்கள். முழங்காலுக்கு கீழே உணர்வை இழந்து நின்றார்கள்.அந்த பனியின் வலி அவர்களை இன்னும் படுத்ததொடங்குகிறது.



நீரில் நனைத்ததன் எதிர்வினையாய் வெற்றி பாதையின் ஓரத்தில் ஒதுங்கினான்.'டே வெற்றி ' 'இருடா உச்சா வருது' 'எனக்கு தண்டா' 'ஆமாட எனக்கு வருது' வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் சிருநீர்க்கழிக்க எத்தனித்த நேரத்தில். பனியில் விரித்துப் போயிருந்த மரத்த அந்த குமாரின் காலில் கழித்த சிறுநீர் தெறித்தது . மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை தந்திருக்கக் கூடும்.



'டே உச்சாவே காலிலே விடுடா,,,எப்படி சூடா இருக்கு தெரியுமா' குமார் தொடங்கி வைத்தான், மற்றவர்களும் பரிசோதனைக்கு இறங்கிவிட்டார்கள்.ஆவி பறக்க ஊற்றெடுத்த அந்த சிறுநீரின் வெப்பம் குமாரை மட்டுமல்ல அனைவருக்கும் புதிய ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.இப்போது எல்லோரும் கீழி சிறுநீர்க்கழிப்பதை நிறுத்தி விட்டு மூவரும் அவரவர்களின் கால்களில் பீச்சினார்கள்.



அந்த பிஞ்சுக்கால்களில் ஊறிப்போயிருந்த குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருப்பதை அவர்கள் உணரத்தலைப்பட்டார்கள்.வியர்க்காத பொழுதானதால் சிலநிமிடங்கள் தொடர்ந்து பாய்ந்த சிறுநீரில் வெப்ப ஒத்தடத்தை வாங்கிக்கொண்டார்கள் . சிறுநீரின் ஆவி வெள்ளை வெள்ளையாய் மேலேழுந்துகொண்டிருந்தது. நன்கு குளிர்ந்துபோய் இருந்த குமார் கால் விரலில் தொடங்கி அரைக்கால் சட்டை படும் அளவிற்கு முழங்கால் வரையில் நனைத்தான்.மற்றவர்களும் வேப்பநீரில் நனைகிறார்கள்.இதமாகவும் சுகமாகவும் இருக்க இப்படியாக அந்த பனிக்காலம் முடிய .அடுத்த பனிக்காலங்கள் தொடர்ந்தன .



பிறகெல்லாம் இவர்கள் பள்ளிநேரங்களில் ரீசஸ் பீரியடில் இவர்கள் ரீசஸ் போவதே இல்லை. மாலைப் பனிக்கு சேமித்துக் கொள்கிறார்கள் .

பூவலூராரும் இசை ஆவர்த்தனமும்- இறுதிப்பகுதி

சில்லிட்ட அறையில் நிகழும் இந்த இனிய சந்திப்பில் என் கடைசி ஆசை அதுவாகத்தான் இருக்கமுடியும் என்று என் மனம் எனக்கு சொல்லிக்கொண்டே இருந்தது,ஸ்ரீஜியை இப்போது மிருதங்கம் வாசிக்க சொல்லுவோம் என்று வாயெடுத்தபோது உள்ளே ஒரு இருபத்தைந்து வயது அழகான இளைஞன் உள்ளே நுழைகிறார்,விநாடிப்பொழுதில் அறிமுகத்தை முடித்துவிட்டு ஸ்ரீஜியின் புறப்பாட்டுக்கான அனைத்து பொருட்களையும் மும்முரமாக எடுத்துவைக்கிறார்.



நவயுக இளைஞனுக்கு உரிய அனைத்து அடையாளங்களையும் ஒருங்கே பெற்றிருந்த அந்த இளைஞனை ஸ்ரீஜியின் சகோதரிமகன் என்பதை அறிந்து வாழ்த்தினோம் இன்னொருமுறை.



நான்குவயதுமுதலாக வாய்ப்பாட்டும் மிருதங்கமும் கற்று மேடைப் பங்களிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் அந்த இளைஞன் என்பதை அறிந்து அனைவரும் புருவத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம்.ஸ்ரீஜிக்கு நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எந்த பாவங்களில் மூலமும் இதுவரையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்ததை எண்ணி அவரின் பண்பிற்கும் அன்பிற்கும் மனதிற்குள் வணக்கம் சொல்கிறேன்.



அந்த அறைமுழுவதும் இருந்த பொருட்கள் இப்போது பயண பெட்டிக்குள்ளாக பத்திரமாகும் அந்த நேரத்தில் என் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்று நினைத்தவனாய் இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று முடிவேடுத்தபடியே.'ஸ்ரீஜி நீங்க எங்களுக்காக கொஞ்சம் மிருதங்கம் வாசிக்க முடியுமா' கேள்வியின் ஆர்வத்தை அவர் உணர்ந்திருக்க கூடும்.



பாலாடையைப் போல வெள்ளையை பூசியிருக்கும் கட்டிலின் மேற்பரப்பில். பழுப்பு நிறத்தில் பைஜாமாவும் வெள்ளை வேட்டியுமாக சமமான காலிட்டு அமர்கிறார்.'கொஞ்சம் அதை என்னன்னு பாரு' என்று தன் சகோதரி மகனுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.முதன்மை அறையை ஒட்டி இருந்த ஒரு குட்டி அறையில் முருதங்கம் முறையாக வாசிக்க தயாராகிறது என்பதை சில ஒலிக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.



சில வினாடிகளில் தயாராய் ஸ்ரீஜியின் விரல்களால் ஆராதனை செய்யப்பட்ட அந்த மிருதங்கம் அரியணை ஏறுகிறது.எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் மிருதங்கத்தின் இடதுபுற மேல்பகுதியில் தன் இடது காலை எடுத்து அணைக்கிறார்.விரல்கள் மிருதங்கத்தின் கன்னத்தில் லேசாய் தொட்டுத் தடவ மிருதங்கம் சிலிர்த்திருக்க கூடும்.இப்போது விரல்கள் இருபுறமும் தோலின் கன்னத்தை அழுத்தி இரண்டுமுறை அழுந்த சுற்று நிற்கின்றன.



ஒரு மிருதங்க சக்கரவர்த்தியில் கைகள் இசைக்கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டன.மெதுவாய் தொடங்கி மிருதங்கத்தில் இதுவரையிலும் கேட்டிராத புதிய புதிய இசை ஓசைகளை விதவிதமாய் எழுப்ப அறை இசையால் நிறைகிறது.காதுக்குள் நுழைந்து உடல் கோப்பையும் வழிகிறது.ஒத்திசை தேசைப்படவே தன் சகோதரை மகனை பார்த்து கண்ணசைக்கிறார்,இப்போது அந்த இசை இளவரசன் ஸ்ரீஜியின் வாசிப்பிற்கு சரியாக கைகளை தாளம் தப்பாமல் தட்டுகிறார்.நானும் சேர்ந்து கைகளைத் தட்டுகிறேன்.உடல் செல்கள் ஒவ்வொன்றும் சலவைசெயயப்படுவதைப் போன்ற உணர்வை பெறுகிறேன்.



எங்கள் ஆர்வத்திற்கு வஞ்சகம் செய்யாமல் நிறைவாக தொடர்ந்து வாசிக்கிறார்.இசைக்கலையை இத்தனை ஆண்டுகள் எத்தகைய விதத்தில் நேசித்தார் என்பதை வாசிப்பு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.



ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது ,சட்டென்று வாசிப்பை நிறுத்தி விட்டு பேசுவார் என்று நினைத்திருந்த அனைவரின் எண்ணத்தை தகர்த்தார்,தொலைப் பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதை பெருட்படுத்தவில்லை என்று சொல்லிவிடமுடியாது, ஒரு வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைப்பதைப்போல இசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துவைத்தார்.



சிலிர்த்து போனோம்.கிட்டத்தட்ட ஒரு மிருதங்க சபாவில் கலந்துகொண்டைதை போல நிறைவில் எங்களை அறியாமலேயே கைகளைத் தட்டி ஆரவரிக்கிறோம்.அதற்கும் லேசான புன்னகையைத் தான் பதிலாகத்தருகிறார்.ஞானிகள் பேசுவதில்லைதானே .



மிருதங்கம் பயணத்திற்காய் பயணப் பைக்குள் அமர்ந்துகொள்கிறது.மிருதங்கம் செய்யும் மூலப்பொருள் பற்றிய விவாதத்தை நான் லேசாக பற்ற வைக்கிறேன். முன்பெல்லாம் நல்ல மரத்தில் கனமான மிருதன்கங்கள் செய்யப்பட்டன. இப்போதெல்லாம் பைபரில் கூட மிருதங்கம் செய்கிறார்கள்,காரணம் எடைக்குறைவான மிருதங்கத்தையே மேலைக் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.



புதிய இசைக்கலைஞர்களும் விரும்புகிறார்கள்.ஒரு குறிப்பிட்ட மரத்திலிருந்து இந்த மிருதங்கங்கள் செய்யப்பட்டன.இலங்கையில் இத்தகைய மிருதங்கங்களுக்கான மரங்கள் மிகுதியாக இருந்தன.தமிழின படுகொலையில் நடந்த கோரத்தில் அக்குறிப்பிட்டவகை மரங்களை இழந்து நிற்கிறோம், என்ற அந்த தகவலோடு அதை மட்டுமா இழந்தோம் ...???'என்று இன்ன பிறவற்றையும் சொல்லி வருத்தம் கொள்கிறார்.இப்படியாய் சந்திப்புகம் நிறைய சிந்திப்புகளை என்னுள் விதித்துள்ளன.அந்த சந்திப்பிற்காய் பலமுறை நன்றிசொல்லி இருக்கிறேன்.



(ஸ்ரீஜியின் நண்பர் வாக்குமூலம்: சார், இந்தியன் கிளாசிகல் மியுசிக்கில் ஸ்ரீஜி ஒரு முக்கியஸ்தர்.இன்னிக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய இசைக்கலைஞர்களைக் காட்டிலும் இசை அனுபவத்திலே இவரு கொஞ்சம் ஒசத்தி.விமானத்துலே பறந்துகிட்டே இருப்பார்,உலகம் முழுக்க இசைக்கச்சேரி நடத்துகிறார்,எவ்வளவோ ஸ்டூடெண்ட்ஸ்.வருஷம் முழுக்க நிகழ்சிகளில் கலக்குகிறார்.ஆனா ஒரு விஷயம் சார்.ஒரு டீ ஸ்பூன் அளவுகூட பந்தா பண்னத் தெரியாத மனுஷன் சார்.விளம்பரம் கொஞ்ச கூட புடிக்கவே புடிக்காது.கட் அவுட் ,பேனர், போஸ்டர்,மீடியா விளம்பரம் சொஞ்சிகறதே இல்லே,இவரே கூப்பிடுறவங்களுக்கு கண்டிசனே அதுதான்.நெறைய பணம் இருக்கு இவருகிட்டே ,எவ்ளோ சிம்பிள் பாத்தீங்களா.நம்மளாலே இருக்கமுடியாது.பொய் பேச தெரியாது எதார்த்தம். ஸ்ரீஜி ரொம்ப இட்டிலிஜென்ட் சார் அப்பா இருந்து இப்ப வரைக்கும் அப்படித்த அப்படியேதான்..பிரெண்ட் ன்னா அப்படி ஒரு பிரெண்ட்.)



இந்த கலியுகத்தில் இப்படி ஒரு மனிதரா? அந்த மனிதருக்கு இப்படி ஒரு நண்பரா?..ஆச்சர்யங்களோடு முடிக்கிறேன்.

பூவலூராருடன் ஒருநாள் -பகுதி 4

சேப்பாக்கத்தில் கடந்த ஒருவாரகாலம் வாங்கிய உப்புக்காற்றின் எதிரொலி என் நுரையீரலுக்குள் இருமல் எதிரொலியாக இடைவிடாமல் கேட்கிறது.எரியும் வெயிலுக்கு ஆறுதல் சொல்ல குடித்து தீர்த்த பலநூறு லிட்டர் தண்ணீர் மேனியெங்கும் வியர்வையாய் வழிகிறது.கனவுகளைக் காயப்படுத்தி தவணை முறையில் தூக்கம் வந்துவந்து போகிறது. மின்விசிறி என்னை ஆசுவாசப்படுத்த இரவெல்லாம் முயற்சித்து தோற்று களைத்துப் போயிருக்கிறது.லேசாக விழிக்கிறேன்,மைக்ரோ ஓவனிலிருந்து எடுக்கப்பட்ட ரொட்டித் துண்டைப்போல நான் சூடாக இருப்பதை உணர்கிறேன்.



இன்று ஸ்ரீஜியுடன் சந்திப்பு இருக்கிறது என்று மூளை எனக்கு அறிவுறுத்தும் அந்த நொடியில் தான் செல்வாவின் அலைபேசி அழைக்கிறது.'வணக்கம் மணி,நாங்க வந்தாச்சு' ,இதோ கிளம்புகிறேன்'என்று பதில்சொல்லிவிட்டு ஆயத்தமாகிறேன். இப்போது நான் பயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோ மைலாபூரை நோக்கி பறக்கிறது.என்னை வெளியூர்க்காரன் என்று தெரிந்திருந்த ஒரு டிரைவர் பேசிய கட்டணத்தை பேரம் பேசாமல் நான் குறிப்பிட்ட ஸ்ரீஜி தங்கி இருக்கும் கட்டிடத்தின் வாசலில் வந்து நிறுத்தி இருக்கிறார்.தூக்கம் தெளிந்து பெயரை உறுதிப்படுத்திக்கொண்டு இறங்குகிறேன் அவருக்கும் மனத்தால் நன்றி சொல்லிக்கொண்டே.



நிமிர்ந்து பார்க்கச் செய்கிற கம்பீரமான கட்டடம்.வெளியில் பகட்டும் ஆரவாரமும் இல்லாத சாந்தம்.முகம்மட்டும் தெரியும் அளவிற்கு ஆடைகளால் தன்னை மூடியிருந்த வாயில் காப்போன் என்னை வரவேற்கும் விதமாக மூன்று அங்குலம் கனமுள்ள கண்ணாடி கதவை இதமாய் திறந்துவிடுகிறார். ஒரு பனி பிரதேசத்திற்குள் திடீரென நுழைவதைப் போன்ற உணர்வை பெற்றவனாய் வரவேற்பினரிடம் நெருங்குகிறேன் .



ஸ்ரீஜி எந்த அறையில் தங்கி இருக்கிறார் என்று கேட்கிறேன்.சற்று யோசித்துவிட்டு 'பூவலூரார்' என்று திரும்பவும் என்னை கேட்டு நான் தேடிவந்த நபர் அவர்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார்.ஆம் என்பது போல தலை அசைக்கிறேன்.அவர் நினைவில் வைத்து கூறிய அந்த அறையைநோக்கி செல்வதற்கு லிப்டை தேடுகிறேன்.ஒரு சமயத்தில் நான்குபேர் ஏறிக்கொள்ளும் அளவிற்கு சின்னதான அந்த நகரும் அறைக்குள் நான் நுழைகிறேன் ,எல்லா தளங்களிலும் நின்று நின்று ஏறும் லிப்ட் என்னையும் மூன்றாவது தளத்தில் வந்து விட்டுவிட்டு போகிறது.



அழைப்பு மணிக்கான எந்த கருவிகளும் அந்த அறைக்கதவருகில் தென்படவில்லை.சில வினாடிகள் யோசித்த படி முழிக்கிறேன்.இறுதியாய் வலிக்காமல் என் வலதுகை நடுவிரலின் கணுக்களால் லேசாக சிலமுறை தட்டுகிறேன்.தட்டிமுடிப்பதர்க்கும் கதவு திறக்கிறது.உள்ளே ஸ்ரீஜியை சுற்றி வட்டமாய் நமது முகநூல் தோழமைகள்.



இள நிறத்தில் முழுக்கை சட்டையும் கருநீல நிறத்தில் பேண்டும் அணிந்து ஒரு தேர்ந்த அதிகாரியின் தோற்றத்தின் கிளீன் சேவுடன் ஒருவர் மெல்லிய குரலில் இனிதாய் வரவேற்று ஸ்ரீஜியில் அருகிலேயே அமர்ந்திருந்தார்.என் யூகம் சரியாக இருந்திருக்கிறது என்பதை அவரை எனக்கு ஸ்ரீஜி அறிமுகம் செய்துவைக்கும் போது அறியமுடிந்தது. செல்வா,ஜெயராஜ்,அன்பு, கயல், என்று நால்வரும் சுற்றிலும் அமர்ந்திருந்து கலகலத்தார்கள்.



அவரோடு உரையாடவேண்டும் என்ற ஆசையால் ஸ்ரீஜியிடம் நான் சின்ன சின்ன விதைகளை வீசுகிறேன்.அவர் அந்த விதைகளை மனதில் போட்டுக்கொண்டு மலரும் நினைவுகளை ஆலமரம் அளவிற்கும் அழகழகாய் மலர்த்துகிறார்.



கல்லூரி படிக்கும் காலத்தில் அருகிலிருந்த குப்பத்திற்குள் சென்று இரவு வெகுநேரம் வரை நாடகம் கூத்து பார்த்த ஞாபகங்களை கிளறுகிறார்.நான்கைந்து நண்பர்கள் கைலி கட்டிக்கொண்டு சுவாச மண்டலங்களில் புகை மண்டலங்களை விட்டுக்கொண்டும் வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் களைகட்டி இருக்கும் குப்பத்திற்க்குள் சென்று நிகழ்த்துக்கலைகள் பார்ப்பது ஒரு வேலையாக கொண்டிருந்திருன்தார்களாம் .அதை சொல்லிவிட்டு இப்போது தெருக்கூத்து என்ற தமிழர்களின் நாடக பிரச்சார வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோயவிட்டதை சொல்லி வருத்தப்படுகிறார்.தெருக்கூத்து என்ற ஆதி கலையை எந்த அளவிற்கு ஸ்ரீஜி நேசிக்கிறார் என்பதை அந்த நினைவுகூறலில் முலமாக தெரிந்துகொண்டேன்.அந்த நாடகக் கலையின் நவீன வடிவமாக இருக்கும் திரைக்கலையில் இருக்கும் எதார்த்தமற்ற போக்குகள் குறித்தும் வருத்தமும் தெரிவித்தார்.



மேலைநாடுகளில் இருக்கும் ஒவொருவரும் தங்கள் நாட்டு நடனம் இசை வாத்தியம் வாய்பாட்டு ஏதாவது ஒரு கலையையை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதும்,அதற்காக அதிகப்படியான தொகையையும் நேரத்தையும் செலவிடுவதையை சுட்டிக்காட்டிய ஸ்ரீஜி ,தமிழகத்தில் அந்த அடையாளம் தகர்ந்துவருவதை வருத்தம் தொனிக்க வாதமாக முன்வைக்கிறார்.ஊடகங்களின் பாதிப்புகளால் பழைய கலை அடையாளங்களை பாதுகாக்க முடியாதவர்களாகவும் அவைகளை தொடரும் திராணி அற்றவர்களாகவும் மாறிப்போயிருக்கும் அபத்தத்தை தனக்கே உரிய பாணியில் ஜில்லென விவாதப் பொருளாக்குகிறார்.



மைலாப்பூரில் ஒரு உணவகம் இருக்கிறதாம் ,இளம் வயதில் அங்கு சென்றுதான் ஸ்ரீஜி உணவருந்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.சின்ன சிம்மினி விளக்கில் காய்கறிகளை நறுக்குவார்கலாம் தூக்ககலக்கத்தில் அந்த உணவகத்தின் பணியாளர்கள்.அவர்களின் விடியற்காலையில் பணிகள் முடியும்போதுதான் முற்றிலுமாக அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டிருப்பார்கலாம். நண்பர் ஒருவர் ஒரு நாள் ஸ்ரீஜியைப் பார்த்து கேட்டிருக்கிறார்.ஸ்ரீஜி நீ சைவமா இல்லை அசைவமா? அதற்க்கு சைவம்தான் பதிலளித்திருக்கிறார்.அப்படிஎன்றால் இத்தனை நாட்கள் ஏன் அசைவம் சாப்பிட்டு வந்திருக்கிறார் என்று அதிரவைத்திருக்கிறார். ஸ்ரீஜிக்கு ஒன்றுமே புரியவில்லை.'பின்னே என்ன காய் கறியிலே இருக்கிற பூச்சி எல்லாத்தையும் வெட்டி வேட்டிதான் போடுறாங்களே ஒழிய வெட்டி எங்கே வெளியிலே போட்டாங்க.அந்த தூங்கு மூஞ்சி பசங்க'என்று சொன்னபிறகுதான் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்.அன்றிலிருந்து அந்த உணவகத்திற்கு ஸ்ரீஜி சென்றதே இல்லையாம்



இன்னொரு உணவகம் 1980௦-களிலிருந்து இன்று வரையில் ஒரே எண்ணையில்தான் பலகாரங்களை சுடுவார்களாம்.அப்படியான ஒரு ஏற்பாட்டை ஒரு உணவகம் கொண்டிருக்கிறதாம். அவர்கள் பழயதை மறக்கும் கெட்டகுணம் இல்லாதவர்கள் என்று நகைக்கவைக்கிறார்.அதில் பலகாரங்கள் சுவையாக இருப்பதாகவும் தன சம்மதத்தையும் சொல்கிறார்.சுட்ட என்னையையே சுடும் கலையை அவர்கள் மட்டுமே தெரிந்திருந்தார்கள்.



இப்படியாக பலவற்றைப்பற்றியும் விவாதிக்கிறோம் ...பலமணி நேரங்கள் அவரது பசுமையான அனுபவங்களால் களவு போயிருந்ததை கடிகாரத்தைப் பார்த்த பிறகே தெரிந்துகொண்டோம்.என் இறுதி கேள்வி மனதில் தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது ...சின்ன இடைவெளி கிடைக்குமா என்று காத்திருக்கிறேன்.சமயமும் அமைகிறது...



ஸ்ரீஜி எங்களுக்காக நீங்கள் உங்கள் மிருதங்கத்தை வாசித்து காட்ட வேண்டும் என்கிறேன்.சம்மதத்தை புன்னகையோடு சொல்கிறார்.

பூவலூராருடன் ஒரு நாள் - பகுதி 3

சின்னச் சின்ன உரையாடல்களால் கோடி தீக்குச்சிகள் கிழித்த மருந்துகிடங்கைப் போல குளிரூட்டப்பட்ட அந்த உணவு அறை சூடாகிக்கொண்டிருந்தது. இரைப்பை நிரப்புவதும் இதயம் நிரப்புவதும் ஒரு சேர நிகழ்ந்துகொண்டிருந்த அந்த விருந்தில் முதன்மை உணவை ஆர்டர் செய்யும் தருணத்தில் வெள்ளைச் சிரிப்போடும் குழிவுழுந்த கன்னத்தொடும் கனத்த கண்ணாடியின் வழியாக எங்களை உன்னிப்பாய் ஊடுருவி பார்த்தபடி உள்ளே நுழைகிறார் செல்வா.



நான் அங்கு இருப்பதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அவரின் விழியுயர்த்திய விசாரிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன்.உடன் அன்பும் கயலும் இணைகிறார்கள்.இப்போது எங்கள் அனைவரது மொய்த்தலும் ஸ்ரீஜியை மையமிட்டே இருந்தது.



சைவக்காரர்களும் அசைவக்காரர்களும் உணவுக்கலவரங்கள் நேராமல் விருப்பம்போல ஆர்டர் செய்கிறார்கள்.பசியோடும் விவாத ருசியோடும் நேரம் வழிந்துகொண்டே இருந்தது. வெளிச்ச உலகத்தில் இருப்பதால் கருத்த இரவை மறந்து போயிருந்தார்கள் ஒவ்வொருவரும் .பிரியமான நண்பர்களோடு இணைந்திருக்கும் பொழுதுகள் ஒரு இனிய தியானவகுப்புகள் தான்.அந்த விருந்து உணவை எடுத்து சுவைக்க ஐந்துவிரல்களும் உள்ளங்கையும் யாருக்கும் பயன்படவில்லையே என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.



மனித விரல்களோடு உலோக விரல்களை இணைத்துக்கொண்டு கலியுக ரோபோக்களாக நாங்கள் கருவிகளின் துணையோடு அசைபோட்டோம். உணவின் சுற்று முடிந்தும் முடியாமல் மேசையை நோக்கி வண்ணவண்ண ஆடையணிந்து அலங்காரங்கள் ஆயிரம் செய்து ஐஸ்கிரீம் தேவதைகள் படையெடுக்கிறார்கள்.அதில் ஒரு கோப்பையில் வானத்து 'வெண்ணிலாவும்' வழுக்கி விழுந்திருந்தது.



இந்த எல்லா நிகழ்வுகளையும் கோணங்களுக்கு தகுந்தாற்போல இடம்மாறிக்கொண்டு கேமராவின் ஆடியை தன் இடது விழியோடு முத்தம் வைத்துக்கொண்டு .கேமராவின் உடல் பாகம் அவரது கன்னத்தில் மெல்ல பதிய அடிக்கடி ஜூம் லென்சை மாற்றி பிளாசில் வெளிச்சம் விதைத்து படங்களை அறுவடை செய்துகொள்கிறார் பதட்டமில்லாமல் ஒரு படக்கலைஞர்.அவர்தான் ஜெயராஜ் .



அந்த உணவகத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுவைமறந்து எங்களை நோக்கி விழி திருப்புகிறார்கள்.நிஜ நாயகன் ஸ்ரீஜி நடுவில் நிற்கிறார்.அனைவரும் இணைந்து இணைந்து சிரித்து பெருமிதம்கொண்டு நெகிழ்ந்து படங்களை பதிகிறார்கள்.எல்லோரையும் பதிந்த ஜெயராஜை இறுதியாய் நான் வாங்கி பதிந்தேன். அது சரியான பதிவுதான என்று டிஜிட்டல் தோற்றத்தை பார்த்து விட்டு தலையாட்டினார்.சரியாக எடுத்திருக்கிறேன் என்று நான் சந்தோசப்பட்டுக்கொண்டேன்.



இப்போது பில் கட்டும் ஓலை வருகிறது..அன்பு முந்துகிறார் ..நானும் என் விருப்பத்தை தெரிவிக்கிறேன்..பிறரும் முன்வருகிறார்கள்.இறுதியில் ஸ்ரீஜி மட்டுமே வள்ளலாகிறார்.பைஜாமாவின் இடது பைக்குள் தன் வலது கையைத் திணித்து கத்தியை மடித்துவைத்திருந்த பணத்தை சிதறாமல் அள்ளுகிறார். அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.அதில் பலவற்றை அந்த வசூல் குறிப்பேட்டுக்குள் திணித்து விருந்தை முடித்துவைக்கிறார்.

.

உணவு முடித்து பல்குத்தி தீர்த்திருந்த அந்த கிளைமாக்சில் ஸ்ரீஜியின் சந்திப்பிற்காக விரைந்து தன் குறும்படத்தை முடித்து அதை வெளி இடுவதற்காக டிவிடி யாக செல்வா கொண்டுவந்திருப்பதை அறிந்து அனைவரும் ஆனந்தப்பட்டோம்.அதை வெளி இடுவதற்கு அந்த இடம் பொருத்தமில்லை என்று சொல்ல அனைவரும் வரவேற்பு அறையை நோக்கி நகர்கிறோம்.



ஸ்ரீஜி வலதுபுற வண்ணச்சுவரின் நடுவில் நிற்கிறார் செல்வா தன் முத்திரைப் படைப்பான 'யாதுமானவள்' என்ற குறும்படத்தை நிறைவோடு வெளியிடுகிறார்.ஸ்ரீஜி புன்னகையோடு பெற்றுக்கொள்கிறார்.பிறகு அனைவரும் கேமராவின் செவ்வகத்திற்குள் வந்துவிடுகிறோம் ,இப்போது ஜெயராஜ் ஒரே தோட்டாவில் அனைவரையும் சுட்டுமுடிக்கிறார்.



முகநூல் தோழமைகளின் கூட்டம் கண்ணாடி வாசலைத் தாண்டி சப்த உலகத்திற்குள் சங்கமிக்க வெளியேறுவதற்கு முன்பாக அனல்காற்று அனைவரையும் இன்னொருமுறை வரவேற்க அனைவரும் முகம் சுளிக்கிறார்கள்.களிப்பும் கதகதப்பும் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தில் விடை பெறலுக்கான அனைத்து முகாந்தரங்களும் தொடங்குகின்றன.



மீண்டும் சிந்திப்போம் என்ற நம்பிக்கையோடு வேறுவேறு எல்லைகளை நோக்கி நகர்கிற ராணுவ வீரர்களைப் போல தோழமைகள் பிரிகிறார்கள்.கலகலத்த அந்த கடையில் வாசல் வெறுச்சிடுகிறது. எல்லோருக்கும் கையசைத்து அவர்கள் போகும்வரை காத்திருக்கிறார் ஸ்ரீஜி. இறுதியாய் அந்த முகப்பில் நானும் அவரும் மட்டுமே.



ஸ்ரீஜி என்னை அழைத்துக்கொண்டு அவருக்காக நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்த ஆட்டோவை நோக்கி அழைத்துக்கொண்டு போகிறார்.'இவரை சேப்பாக்கத்தில் இறக்கிவிட்டுட்டு அப்படியே நாம் மைலாபூர் போயிறலாம்'என்று தனது ஆடோ ஓட்டுஞருக்கு கட்டளையைப் பாய்ச்சுகிறார்.டிரைவர் பாபு பதிலுக்கு தலையசைத்தபடி முறுக்குகிறார்.



இப்போது இருபுறத்து குளிர்காற்று அருகிலிருக்கும் சங்கீத சுரத்திற்கும் (ஸ்ரீஜி) அவரின் அருகிலிருக்கும் ஒரு தப்புத் தாளத்திற்கும் (நான்) பாரபட்சமிலாமல் வீசுகிறது. நன்றி அன்பு பாசம் பகிர்வு ....இவைகளோடு அந்த நீண்ட பயணம் விரைவாய் முடிந்தது ஏக்கத்தை மிச்சம் வைத்தது.இருகரம் கூப்பி வணங்குகிறேன்.