சனி, 30 ஏப்ரல், 2011

புலி மைதானம் (சிறுகதை )

வெயில் நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த மரகத சோலைகளுக்கு நடுவே அந்த அழகிய மலைகிராமம்.கண்ணுக்கு எட்டும் தொலைவெல்லாம் மலைகள் மலைகள் மலைகள். மலைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.எல்லோரும் மேகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள் ஆனால் மேகங்கள் கழுத்து வலிக்க இவர்களை ஏறிட்டு பார்க்கும். அந்த அளவிற்கு இவர்கள் உயரத்தில் இருப்பது எப்போதும் இவர்களுக்கு ஆச்சர்யத்தையும் பெருமிதமுமான உணர்வையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.



நாகரீகங்களின் பாதிப்புகளிலிருந்தும் இந்த பிரதேசம் விலகியே இருந்திருக்கிறது.காரணம் சமவெளிக்கும் இவர்களுக்குமான தூரம் அதிகம். இயற்கையோடு இயற்கையாக கலந்த அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் அனைவருமே உழைப்பாளிகள். எல்லோரும் நாள் தவறாமல் வேலைக்கு சென்றுவிடுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வெறிச்சோடி அனாதையாய் கிடக்கும் அந்த தெருக்கள்.வாரத்தின் விடுமுறை நாட்கள் மட்டும் குழந்தைகளால் களைகட்டும்.



பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் பெண்கள் யாரும் சகஜமாய் உலவமுடியாதவாறு வாசல்களும் வீதியும் அடைக்க சிறுவர்கள் விளையாடுவது இயல்பானதுதான்.குழந்தைகள் தரும் இந்த இடையூறுகளை எப்போதும் இவர்கள் சுமையாக நினைத்ததே இல்லை.விதவிதமான விளையாட்டுக்களுக்கு பஞ்சமில்லை.



சிறார்களில் சிலர் பல் விளக்காமல் கோடாரியால் பிளக்கப்பட்ட மரக்கட்டை ஒன்றை பெட்டாக சுழற்றிக்கொண்டு வருவார்கள்.சிலர் பந்துகளுடன் ஆயத்தமாவார்கள்.ரப்பர் பந்து, பிளாஸ்டிக் பந்து,துணிப்பந்து,என்று இன்னும் நிறைய பந்துகள் சேர்ந்துவிடும்.



'டே இப்படியே ஓடிப்போனா ஒதேபடுவே,ஒழுங்கா சாபிட்டுட்டு போ' 'டே பல்லெ விளக்கிட்டு போடா, இல்லேன்னா பூச்சி ஊ வாயே தின்னுபோடும்' 'தம்பி..! முழு டவுசர் போட்டுட்டு போடா,முள்ளுச்செடி கீறும்' ' டே இவனே...! ஊ கால்சட்டை கிழிஞ்சிருக்குடா ,எல்லோரும் ஏசுவாங்க மாத்திட்டு போ' ' சாப்பிட்டு தண்ணி குடிக்காமே அப்படி என்ன அவசரம்,ஒழுங்கா தண்ணிகுடி' இப்படியாய் தங்கள் வேலைகளை செய்துகொண்டே பிள்ளைகளுக்கு தாயும் தந்தையும் படுத்தி படுத்தி சொன்ன எந்த குறிப்பையும் எந்த குழந்தையும் காதில் போட்டிருக்கொள்ளவில்லை.



நான்கைந்து பேராக இருந்தால் வீதியில்தான் தங்கள் விளையாட்டு சாகசத்தைக் காட்டுவார்கள். இப்போது சுமார் இருபது குழந்தைகள் குழுமிக்கொண்டார்கள். .கிழவிகளின் கூன் முதுகுகளை இவர்கள் அடித்த பல சிக்சர்கள் பதம் பார்க்க உதைவாங்கிய ஞாபகங்களும் பலமுறை.சன்னல் கண்ணாடிகளை உடைத்து வதைபட்ட நினைவுகளும் வர ஏகதேசமாய் முடிவுசெய்தார்கள்.இனி இவர்களின் விளையாக்கு களம் அந்த புலிமைதானம் என்று முடிவானது.



பெரிய அண்ணன்மார்கள் அந்த மைதானத்தில் விளையாடும் போதெல்லாம் தங்களை அங்கு வரக்கூடாது என்று ஏன் தவிர்த்தார்கள் என்ற ரகசியம் இவர்களைக் குடைந்துகொண்டே இருந்திருக்கக் கூடும். ஒருசமயம் அப்படி அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் விளையாட்டை நிறுத்திவிட்டு ஓடிவந்தது இவர்களுக்குள் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எற்படுத்தியே இருக்கிறது.ஒரு சரிவில் இறங்கி ஒரு மேட்டில் ஏறினால்தான் அந்த மைதானத்திற்கு செல்லமுடியும்.சுற்றிலும் முட்புதர்களால் ஆனா ஒரு குட்டி மைதானம். அங்கு விளையாடியே ஆகவேண்டும் என்று தீர்மானமாய் முடிவெடுத்தார்கள்.பலமுறை முயற்சி செய்து முடியாத அந்த ஏக்கத்தை அன்று நிறைவேற்றவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.



சிரிப்பும் கும்மாளமுமாக வீராவேசத்தோடு கிளம்பிய அந்த சிறார்பட்டாளம் அந்த பள்ளத்தாக்கில் பலவற்றையும் பேசிக்கொண்டே இறங்கியது.இனி மூச்சிரைக்க ஒரு மேட்டைக்கடக்கவேண்டும்.'ஊஸ் புஷ் ஊஸ் புஷ்' என்று நுரையீரல் சேர்ந்திசையை கேட்டுக்கொண்டே முன்னேறிக்கொண்டிருக்கும் போதுதான் கூட்டத்தில் ஒருவன் கிளியை கிளப்பினான்.



எத்தனை ஓவர் வீசவேண்டும்,யார் யார் எந்த அணியில் இருக்கவேண்டும் என்று அவர்களுக்குள்ளாக விவாதித்தபடி ஏறிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் 'டே என்னோட அண்ணே ஒருநாள் இங்கே விளையாட வந்தப்ப புலி வந்துருச்சாம்.' என்று ஒரு சிறுவன் சொன்னதும் கூட்டம் அதிர்ந்து அந்த இடத்திலேயே நின்றது. அதில் ஒருவன் 'ஐயோ புலியா.. நா வரலப்பா' தட்டுத் தடுமாறி செத்தே பொழசேன்னு ஓட்டமெடுத்தான்.அந்த அதிர்வில் மூன்று நான்கு சிறார்களும் அழுதபடியே சிதறி ஓடினார்கள்.



மீதம் இருப்பவர்கள் பீதியில் உறைந்துபோய் இருந்த போதுதான் 'டே அவன் புளுகுறாண்டா,பயந்தான்கொள்ளி,புளுகுமூட்டே'என்று ஒருவன் வசைபாடினான்.பயந்து போய் இருந்த அவர்களின் அச்சத்தை இந்த பதில் துடைத்தெறிந்தது.இப்போது அனைவருமே மனபயம் நீங்கி புலி மைதானம் முன்னேறினார்கள்.அந்த மேட்டில் இயற்கைக்கு வகிடு எடுத்தாற்போல ஒத்தையடி பாதையில் இருபுறமும் தங்களை கிள்ளி கீறிக்கொண்டிருந்த புதர் செடிகளை விலக்கிக்கொண்டு ஒரு வழியாக புலிமைதானத்தை வந்து சேர்ந்தார்கள்



இவர்கள் மைதானத்தில் கால்வைத்ததும் மகிழ்ச்சி ஊற்றேடுத்தாலும் உள்மனதில் பயம் லேசாக கசிந்துகொண்டுதான் இருந்தது.இருந்த போதிலும் திட்டமிட்டபடி விளையாட்டு தொடர்ந்தது.ஒரு குண்டு சிறுவன் அடித்த ஒரு பந்து ஆகாயத்தில் பறந்து சென்று புதருக்குள் விழ 'சிக்சர்' என்று ஆரவாரித்த கூட்டம் தொலைந்த பந்தை தேட ஆயத்தமானது.புதருக்குள் உடம்பை குறுக்கி குனிந்துகொண்டு நிழல்களில் இருட்டில் தேடும் போதுதான் எல்லோருக்கும் புலிஞாபகம் வந்தது.பந்து கிடைக்காத வெறுப்பும் புலியின் பயமும் கலவையாய்த் தொற்றிக்கொள்ள அந்த குளிர் உலகத்திலும் கூட எல்லா சிறுவர்களும் வியர்க்கத்தார்கள்.



தேடுதல் வேட்டையில், நிசப்தமாய் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு குட்டைமரமொன்று அசையவே ரகசியமான மெல்லியகுரலில் 'டே...அங்கே பாருங்கடா...மரம் ஆடுது...புலியா இருக்குமோ...?பயமா இருக்குடா..அவன் சொன்னது உணமைதா போலிருக்கே.. இவனே நம்பி வந்தோம் பாரு...நீதா புளுகு மூட்டை ..' இப்படியாய் புலி இல்லை என்று ஆறுதல் சொல்லி அழைத்துவந்த அந்த சிறுவன் நன்றாக அனைவருது வசையை வாங்கிக்கொண்டிருந்த போதுதான் குபீரென புதருக்குள்ளிருந்து ஆவேசமாய் வெளிப்பட்டது ஒரு குரங்கு.ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க கண்களை பயத்தில் மூடிக்கொண்டிருந்த அனைவரும் மெதுவாக திறந்தபோது அந்த குரங்கினை அவர்களால் ஆறுதலாய் பார்க்கமுடிந்தது.



மீண்டும் விளையாட்டு களைகட்டியது. பாதியிலேயே பயந்து ஓடி வீட்டை அடைந்த அந்த சில சிறார்கள் இவர்கள் ஆனந்தமாய் விளையாடிக்கொண்டிருப்பதை ஏக்கமாய் மைதானத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை இவர்கள் கவனித்தார்கள். .'தேவையா...பேசாமே வந்திருக்கலாமில்லே..பயந்தாகொள்ளிங்கே' .கிண்டலடித்தார்கள். 'ஈ ஓ ஊ ஆ ...;என்று உச்சதாயத்தில் தங்களின் கேலியைத் தெரிவித்தார்கள்.



அன்றிலிருந்து பயமில்லாமல் அவர்களும் மற்ற சிறுவர்களும் அந்த புலிமைதானத்தில் பயம் இல்லாமல் வாரம் தோறும் தவறாமல் விளையாடிவருகிறார்கள்.ஆனால் உண்மையில் அந்த மைதானத்திற்கு புலி வந்து போவது வழக்கம் என்பதை அந்த சிறார்கள் அறியாமலே இருக்கட்டும்

ஒரு
தலைமுறைக்கான
சிறந்த சேமிப்பு
இந்த
வியர்வை சில்லறைகள்தான்.
(மேதின வாழ்த்துக்கள்)

இந்தியதேசத்தின்
அசோகச்சக்கரத்திற்கு
பிஞ்சுக் குழந்தைகளின்
வியர்வை
உயவுஎண்ணை ஆகவேண்டாம்.
...
தொழிலாளர்கள் பட்டியலில்
இருக்கும்
மழலைகளின் பெயர்களை
அழிப்போம்

பிள்ளைகளின் வியர்வையில்
பெற்றோர்கள் வயிறு வளர்ப்பதா?
(மேதின வாழ்த்துக்கள்)

இவர்கள்
விலங்குகள் அல்ல!
பிறகு ஏன்
இவர்களுக்கு விலங்குகள்.

உள்ளங்கள் குமுறினால்
உலோகங்கள் உதிரும்

வலிக்க வலிக்க
உழைத்த கரங்களுக்கு
முடிந்தால் பூட்டுங்கள்
பூவிலங்குகளை.
(மேதின வாழ்த்துக்கள்)
.

எண்ணைகட்டி(சிறுகதை)

இயற்கை சிம்மாசம் இட்டு மரியாதை செய்ததைப் போல எழிலாய் நிமிர்ந்து நிற்கும் அந்த மலை கிராமத்தில், ஒரு சிகரத்தின் இடுப்பில் குழந்தையாய் அந்த ஊர் பசுமைகளுக்கிடையே அழகாய் காட்சிதருகிறது. விடுமுறை வந்துவிட்டால் போதும் இனிய சிறார்களின் கள்ளம்கபடமில்லா விளையாட்டில் உள்ளம் மகிழ இன்னும் அழகாகத்தெரியும் அந்த ரம்மிய கிராமம்.



தொடர்வண்டியைப் போல நீளமான நகராத தெருக்கள்.எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கும் பயணிகளைப் போல குழந்தைகள்.ஒரு ஞாயிறு ஒன்றில் விளையாடுவதற்கான திட்டங்களை தெருவின் மூலையில் ரகசியமாய் போட்டார்கள்.கூச்சல் குழப்பங்களுக்கிடையே சில முடிவுகளும் சில சூளுரைகளும் எழுந்து ஓய்ந்தன.எதோ முடிவுக்கு வந்ததாக கூட்டம் கலைந்தது.



சட்டென வீட்டிற்குள் தொலைந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக வெளியேறினார்கள்.எம்பிக்கொண்டே இருக்கும் ரப்பர் பந்தை தரையில் மோதவிட்டுக்கொண்டே ஒருவன் வெளியில் வந்து தன் வேடிக்கையைக் காட்டினான்,மற்றொரு சிறுவன் பிளாஸ்ட்டிக் பந்து ஒன்றை ஆகாயத்திற்கும் தனக்குமாக விழாதவாறு கவனமாக தட்டிக்கொண்டே வந்து சேர்ந்தான்.இப்படியாய் ஒவ்வொருவரும் பல விளையாட்டு சாமான்களோடு வந்து குழுமினர்.இப்போது எந்த விளையாட்டை விளையாடுவது என்ற குழப்பம் ஆரவாரமாக எழுந்து ஓய்ந்தது.



அனல்பறக்கும் விவாதங்களுக்கு இறுதியில் , பள்ளத்தாக்கு புல்வெளியில் மரப்பலகையில் சருக்கிவிளையாடுவது என்ற முடிவுக்கு ஒருவழியாக வந்தார்கள்.ஊரின் எல்லையில் கோடை வெயிலில் காய்ந்து மஞ்சள் நிறமாய் இருக்கும் சரிவுப் புல்வெளிதான் அது. ஒவ்வொருவருடமும் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் அனைவரும் அங்கு சறுக்கி விளையாடுவது வழக்கம்.



சருக்குவதற்கு பெரும்பாலும் வீட்டில் மரவேலை செய்து மீதமிருக்கும் பலகைகளை பயன்படுத்துவதுவார்கள். இந்த கோடையில் யாருடைய வீட்டிலும் மரவேலைப்பாடுகள் நடைபெறாததால் சறுக்கி விளையாட பலகைகளை தேடி அலைந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொடுத்த யோசனையின் பேரில் மாட்டுக் கொட்டகையில் நிலையில் கதவைப் போல அடைப்பதற்காக பயன்படுத்தும் பலகையை உபயோகிப்பது என்று முடிவுசெய்தார்கள்.



பசுமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போகும் நேரத்திற்காக காத்திருந்த அந்த சிறுவர்கள்,சரியான ஒரு சமயத்தில் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒன்றரையடி அகலமும் ஐந்தடி நீளமும் இரண்டு அங்குல தடிமனும் கொண்ட ஒரு பலகையை கொட்டகையிலிருந்து தங்கள் தலைக்குமேல் வைத்து கடத்திக்கொண்டு ஒருவழியாக சறுக்கும் சரிவுப்புல்வெளிக்கு வந்து சேர்ந்தார்கள்.



மலைபிரதேசத்தில் பனியில் ஈரம் காய்வதற்கு இன்னும் அரைமணிநேரம் இருந்தது.உணர்ச்சிவசப்பட்டிருந்தால் அந்த காலைநேர ஈரப்பனியில் சறுக்கும் முயற்சி அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கும். எனவேதான் அனைவரும் பொறுமையோடு இருந்தார்கள். அந்த கூட்டத்தில் .'டே வெயிலுலே ஈரம் காஞ்சி புல்லு சூடானாதான் சறுக்குபலகை வேகமா போகும்.' என்று ஒருவன் ஒரு யோசனை சொன்னான். சற்று யோசித்துவிட்டு அனுபவசாலியைப்போல 'இன்னொரு இடியா சொல்லட்டா'என்று அனைவரையில் அவனே இன்ப அதர்ச்சியில் ஆழ்த்தினான்





'டே சறுக்கு பலகையோட அடியிலே தேங்கா எண்ணையே தேச்சென்னு வச்சுக்கோ சும்மா தீயா பறக்குமடா' யோசனை பலமாக இருந்ததை அறிந்து ஆதங்கத்தோடு இன்னொரு சிறுவன் கேட்டான்'சரி இப்ப எண்ணைக்கு எங்கே போறதுடா'என்ற கேள்வியை எழுப்பி எல்லோரையும் ஏங்க வைத்தான். எல்லோரும் வாயில் விரலைவைத்துக்கொண்டும் , பக்கவாட்டுத் தலையை சொரிந்துகொண்டும் யோசிப்பதற்கான குறிப்புகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.



'இதோ பாருங்கடா! எங்க வீட்லே அப்பாவும் அம்மாவும் டவுனுக்கு போயிருக்காங்க.இப்ப நா போனா திட்டும் ஒதையும் விழாது . நா போயி கொண்டு வர்றேன்' என்று சொல்லிக்கொண்டே தன் நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடினான்.





தாழிடப்பட்டு பூட்டப்படாமலே இருக்கும் வழக்கமான அவனது வீட்டுக்குள் நுழைந்து தேங்காய் எண்ணை டப்பியை எடுத்தான்.அதன் மேல் மூடியை ஒரு ஆணையின் துணைக்கொண்டு இரண்டுபேரின் பலத்தால் திறந்துவைத்தார்கள். வந்தவன் கண்களால் ஆச்சர்யப்பட்டு நாசியால் அந்த ரம்மிய நறுமணத்தை நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டிருந்தான்.,இடதுபுறமாக அந்த சிலிண்டர் வடிவில் இருந்த கையடக்க அலுமினிய டின்னை சாய்த்து எண்ணை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்காக அவனும் அவனது நண்பனும் காத்திருந்தனர்.எண்ணை வந்த பாடில்லை.லேசான வெளிச்சத்தில் பார்த்த அவர்களுக்கு திரவமாக இல்லாமல் உறைந்து வெள்ளை வெளேரென்று கட்டிப்பட்டபடி காட்சிதந்த அந்த பொருள் தேங்காய் எண்ணைதானா என்ற குழப்பத்தை எற்படுத்தவே செய்தது.





'டே இது எண்ணை இல்லேடா வேறே ஏதோ.எண்ணை தண்ணிமாதிரி தானே இருக்கும்.இது என்ன கெட்டியா வெள்ளையா இருக்கு,நீ ஏதோ ஒண்ணே தரந்துட்டே போலிருக்கு ,இப்ப என்னடா செய்றது ' துணைக்கு வந்த சிறுவனின் புலம்பல் அவனை இன்னும் சிந்திக்க வைத்தது.'அப்பா எப்பவும் குளிச்சிட்டு இதிலிருந்துதா எடுத்து தலையிலே போடுவாருடா,அம்மா கூட சனிக்கிழமே இதிலிருந்தா எடுக்கும், நா எத்தனையோ டைம் பாத்திருக்கேன்'



சோதனை முயற்சியில் முதல் நிலையாக அவன் தனது வலது கையை அந்த டப்பிக்குள் நுழைத்தான்,வழுவழுப்பாய் இருந்ததை உணர்ந்தபடியே கொஞ்சம் எடுத்தான் உள்ளங்கையில் அள்ளிய அந்த இறுகிப்போன எண்ணைக்கட்டி மெல்ல உருக ஆரம்பித்தது.அந்த அதிசயத்தை இருவரும் கண்கொட்டாமல் ரசித்தபடியே இருந்தனர்.இவருடைய புலனாய்வு வெற்றியை தந்த சந்தோசத்தில் ஆளுக்கு ஒரு கையாக அள்ளிக்கொண்டு ஓடினார்கள்.





அவ்வளவு கவனமாக எடுத்துவரப்பட்ட எண்ணைக்கட்டி சறுக்கு புல்வெளியை அடைந்ததும் அனைவரது மனதிலும் பரவசம் மலர்ந்தது.உடனே அந்த பலகை தலைக்கீழாய் கவிழ்க்கப்பட்டது.இரண்டு சிறுவர்களும் ஒழுகியது போக மீதமிருந்த எண்ணையை பலகையில் பக்கவாட்டு முழுக்க தேக்க ஆரம்பித்தார்கள். அனைவரும் ஆளுக்கு ஒரு கையை நீட்டி வலிக்கும் பலகைக்கு காலமுக்கி விடுவதைப்போல தடவிவிட்டார்கள்.



இப்பொழுது சறுக்கும் பலகை முழுக்க எண்ணைப்பரவி இருந்தது.வெயிலும் தன் வெப்பத்தால் புல்வெளியை மிருதுவாக்கி இருந்தது.அவர்களின் பயணம் தயாராகி விட்டது.மொத்தம் ஐந்துபேர்.ஒரு சமயத்தில் அந்த பலகையில் மூன்றுபேர் மட்டுமே பயணப்படமுடியும் என்பதால் முதலில் மூவர் ஏறிக்கொண்டனர்.முட்டிப்பகுதியை பிரமிடைப் போல மடக்கி குவியலாக வைத்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அந்த சறுக்கும் பலகையில் அமர்ந்திருந்த வேளை அவர்களுக்குள் மகிழ்வையும் பயத்தையும் மாறிமாறி தந்துகொண்டே இருந்தது.





கீழ்நோக்கி சரிவில் பாய்வதற்கு மனத்தால் தங்களை தயார்செய்துகொண்ட சிறுவர்கள் மூவரும், ஒருவரது கால்களை மற்றவைகள் சங்கிலியாய் பிடித்துக்கொண்டு தயாராகிவிட்டனர்.அந்த சறுக்கு பலகை மிருதுவாய் நகரத்தொடங்கிய சிலவினாடிகளில் புதுவிதமான உணர்வை தங்கள் வயிற்றுப் பகுதியில் உணர்ந்தவர்களாய் ஆனந்தத்தையும் பயத்தையும் சரிவிகிதமாக கலந்த கலவையைப் போன்ற ஒரு விதமான சப்தத்தை நீள எழுப்பிக்கொண்டு 'ஆ ஆ ஊ ஊ ஈ ஈ ஏ ஏ' குதுகலித்த அந்த மூவரையும் அந்த சறுக்கு பலகை சரிவின் கீழ் தளத்திற்கு சிலநிமிடங்களில் அழைத்துச் சென்றது.



இப்போது அந்த பலகையை மீண்டும் தொடங்கிய மேல் முகட்டிற்கு கொண்டுவரவேண்டும். அந்த மூவரும் சுமைதாங்கியை தலையில் சுமப்பதைப் போல தங்கள் தலைக்குமேல் வைத்து நிழலையும் போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க மேலே வந்து சேர்த்தார்கள். அடுத்த பயணத்திற்காய் மீதமிருந்த இருவர் ஆனந்தத்தோடு ஆயத்தமானார்கள்.அதற்குள்ளாக இன்னொருவன் தனது பயணம் முந்தய பயணத்தைவிட வேகமா இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு வீட்டிற்கு போய் இவனைப் போலவே தேங்காய் எண்ணையை உள்ளங்கைகளில் அள்ளிவராமல்,தன் தலைமுடியில் வழியவழிய தேய்த்துவந்திருக்கிறான்..



முகமெல்லாம் எண்ணை வடிய இப்படியாய் வெயில் சாயும் வரை அந்த சிறுவர்கள் சருக்கிவிளையாடிக்கொண்டே இருந்தார்கள். தேங்காய் எண்ணை விலை உயர்ந்தது என்பதை அவர்கள் அறியாமலே இருந்துவிட்டுபோகட்டும்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011


தமிழ் எழுத்துலக ஜாம்பவான் திரு ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள்

மரணத்திற்கு சுவாசம் தேவைப்படும் போதெல்லாம் நமது உயிர்காற்றை நுகர்ந்துகொள்ளும்.மரணம் உலகின் மிகப்பெரிய பிச்சைக்காரன்.

உயிர்த்திரு!
உயிர்தொழு!
உயிர்தேழு !
வாழும் போதே...

'மரணம்' எல்லோருடைய முகவரியையும் மனனம் செய்து வைத்திருக்கிறது.நாம் அதை விரும்பாவிட்டாலும் அது நம்மை விரும்பி நேரில் வந்து நிச்சயம் சந்திக்கும்.அதற்கு ஞாபக மறதி கிடையாது. நினைவாற்றல் அதிகம்.

சனி, 23 ஏப்ரல், 2011


மொழிகளின் ஆறுதலுக்காக
பேனா விழிகளின்
அழுகை

வெள்ளி, 22 ஏப்ரல், 2011


விழிகள்
இலக்கியம் படிக்கின்றன
விரல்கள்
இலக்கியம் படைக்கின்றன.

நீ
கீழ் உதட்டைத்
தொட்டுப்புரட்டிய
புத்தக முனைகளில்
தேனிருப்பதாக நினைத்து
கூடுகட்டி இருக்கிறது
எனது மனம்.

செங்கற்களாலும் சிமெண்டுகளாலும்
ஆனா
வீடுகளை விட்டுவாருங்கள்
உங்களை
இந்த
வசந்தவாசல் அழைக்கிறது.
"வாழ்தல் தவம்"

கட்டுக்க்கட்டான
புத்தகங்களே
படிக்கட்டுகள்

உயிரோடு இருக்கும்போது
நீ
இலக்கியம் மலர்த்தினாய்
இறந்தபிறகும்
பூக்களை எழுதிக்கொண்டிருக்கிறான்
உனது கல்லறையில்

ஒரு தேசத்தை
தாங்கும்
வலிமையான தூண்கள்
புத்தகங்கள்

மெய்மறக்கும்
மெய்யான தவம்
வாசித்தல்

பரிசுத்த ஆன்மாக்கள்
உலவுவது
இந்த பிரமிடுகளில்தான்

இலக்கியம் தந்தாய்
இலக்கணம் ஆனாய்
உனக்கு
இறந்தநாள் இரங்கல்களும்
பிறந்தநாள் வாழ்த்துக்களும்

ஆக்சிஜன் அழகிகளை
பலவந்தப்படுத்தும்
கார்பன் காமுகர்கள்

கோடி
மின்விளக்குகளை அணைத்துவைத்து
ஜோடி
விண்விளக்குகளை ஏற்றிவைப்போம்

நிலா
சூரியன்.

இனியாவது
புவியின்
மெல்லிய காதுகள்
மெல்லிசை கேட்கட்டும்
வல்லிசை வேண்டாம் !

இயற்கையோடு போர்
வெட்ட சாய்ந்தது வனங்கள்
தோற்றது
மனித இனங்கள்

இந்த கல்லறைகளுக்கு
அஞ்சலி செலுத்துவோம்
புதிய நடவுகளில் மூலம்

பசித்து அழும்
மண் மழலைகள்
தாய்ப்பாலில் விசம்கொண்டு
ஓடிவரும் நதிமகள்

அதோ
காற்றுவாங்க
எல்லோரும் போகிறார்கள்
கடற்கரைக்கு அல்ல
கடைகளுக்கு

நீ
வியாபித்த பொருள் மட்டுமல்ல
வியாபாராப் பொருளும் ஆனாய்.

பூமியே !
நேற்றுவரையில்
நீ
பஞ்சபூதம்
இன்று
பஞ்சத்தின் பூதம்

உன்னில் நாங்கள்
உன்னால் நாங்கள்

புதன், 20 ஏப்ரல், 2011


உரிய இடத்தில் அல்லாமல்
நாம் எங்கெல்லாம்
அசுத்தம் செய்கிறோமோ
அங்கெல்லாம்
இயற்கைதாயின்
கருவறை கழிப்பிடமாகிறது.
அதையும்
மனிதர்கள்
சுத்தம் செய்வதில்லை
மழைதான்
சுத்தம் செய்கிறது

-வெ.விநாயக மூர்த்தி
(தகிதா படைப்பாளி

மரங்களுக்கு புற்றுநோய்
மூச்சுத்திணறலில்
பூமியின் நுரைஈரல்கள்

அம்மணமாய்
ஆற்றுப்படுகைகள்
நீராடை உடுத்தாமல்
மேலே செல்வது
கீழே பார்ப்பதற்காகத்தான்

ஏறுமுகத்தில்
பாரதத்தின் அறிவியல்முகம்

"மேலே மேலே மேலே"
வந்தே மாதரம்
அன்பே !
நீ
மணலில் எழுதிய
கவிதைகள் மீது
இவ்வளவு பொறாமை
இருக்கக்கூடாது

பார்!
அலைகள்
இடைவிடாமல்
அழித்துக்கொண்டே இருப்பதை

செவ்வாய், 19 ஏப்ரல், 2011


உன்
பாதம் பட்டபிறகுதான்
சகாரா
அண்டார்டிகாவானது

தென்றல்
ரகசியமாய் தேடுகிறது
திங்கள்
ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கிறது
பூக்கள்
இலைகளுக்கிடையே உளவுபார்க்கின்றன
பறவைகள்
கலந்து ஆலோசிக்கின்றன
மேகங்கள்
ஆகாயமார்க்கமாக ஆராய்கின்றன
புற்கள்
சிலிர்த்துக்கொள்கின்றன
வண்டுகள்
ரகசியம் பேசுகின்றன
இலைகள்
பன்னீர் தெளிக்கின்றன
இன்னும் பல மாற்றங்களோடு
தரையும்
வெட்கத்தில் சிவந்துபோனது

காற்றெல்லாம்
சுகந்தமாய் மணக்க
அன்பே நீ
நடந்து போயிருக்கக்கூடும்

இந்த
பிரபஞ்சம்
பாலைவனமாக மாறிவிடும்
என்று பயமுறுத்துகிறார்கள்
உன்
ஈரக்கூந்தலை
மறந்துவிட்டு

அப்பளம்


நாம்
நொறுக்கமுடியாது
நொறுக்கி உண்ணமுடியாது
ஆனால்
நம்மை
நொறுக்கி உண்ணும்
இந்த
அப்பளம்

ஒரு
வெண்ணிலாவிலிருந்து
இத்தனை பிறைநிலாக்களா ?
வெட்டிஎறியப்பட்ட
உன்
விரல்நகங்கள்...

விழிகளில்
கேள்விகளை கேட்டாய்
விரல்களில்
பதில்களை எழுதினேன்
நான்
பாசா? பெயிலா?

அன்பே!
நம் நினைவுகள்
இனிக்கும்போது
இந்த
மிட்டாய்கள்
வேப்பங்காய்கள்

முத்தங்கள்


எந்த மருத்துவரிடமும்
இதுவரை
நான் சொன்னதே இல்லை.
என் சர்க்கரைவியாதிக்கு
காரணம்
நீ தந்த
முத்தங்கள் என்பதை

மீன்பிடிக்க தடை
கருத்தரிக்கிறது
கடலில் மீன்குட்டிகள்
வீட்டில் சவப்பெட்டிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2011


தேசத்திற்கு வெள்ளையடிக்க
சுண்ணாம்பு துகள்கள்
இங்கு சிந்தப்படுகின்றன

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பூட்டப்பட்ட வீடு



தாளிக்கும் நறுமணத்தை

சுவாசித்திராத

நுரையீரல்



வெளிச்சம் பூசி

அலங்கரித்துக்கொல்லாத

மின்விளக்குகள்



சூடுதணிந்து

குளிர்ந்துபோயிருக்கும்

அடுப்படி



கைமாறாட்டத்தில்

வதைபடாத

ரிமோட்



நீர்த்தெளித்து

முகம் கழுவாத

முன்றில்



கோலப்புள்ளி இடாமல்

விதவையாக காட்சிதரும்

வாசல்



போர்நிறுத்தத்தை கைவிட்டு

படையெடுக்கும்

எறும்புகள்



வீட்டிற்குள் வீட்டை

நெய்துமுடித்த

சிலந்திகள்



இறக்கையை

அசைத்துப்பார்க்காத

மின்விசிறிகள்



கிழிபடாததால்

வருத்தம் தெரிவிக்கும்

நாள்காட்டிகள்



தங்களைத் தாங்களே

வாசித்துக்கொள்ளும்

புத்தகங்கள்



களைப்பு நீங்கி

இறைவன் ஓய்வெடுக்கும்

பூஜையறை



திறவுகோலின்

கலவிக்காக எங்கும்

கதவின் துவாரம்



கர்ப்பம் தரித்த

வீட்டின்

தபால்பெட்டி



தீவிர

மெளனவிரதம் இருக்கும்

இல்லம்



மலர்ந்திருந்தும்

கிள்ளப்படாமல் இருக்கும்

பூக்கள்


கலகலப்பாய்

பேசமறந்த பாத்திரங்கள்






இப்படியாய் பலவும்...

யாருமற்ற வீடு
எனக்குப் பேச்சுத்துணையாய்
சுவர்க்கடிகாரம்

சனி, 16 ஏப்ரல், 2011


இது வரையில் பல லட்சம் தாள்களைத் தின்றிருக்கிறேன்.
நான் ஒரு கவிதைக்கழுதை

காலத்தின் ரத்தம்


உறையாமல்
காலத்தின் ரத்தம்
பெருக்கெடுத்துக்கொண்டே இருக்கிறது
கடிகார முள் கிழித்து

இருமல் .


சுவர்கள் உடைபடவே இல்லை
இடைவிடாத வெடி சத்தம்
நுரையீரலுக்குள்
இருமல் .

காலை வானம்


டிஞ்சர் பரவிய
பஞ்சாய் மேகங்கள்
காலை வானம்
காயப்பட்டதோ !

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சித்திரை-தமிழ் புத்தாண்டு

சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என கொண்டாடுவது அறிவியல் பூர்வமற்றது எனவும், முற்காலத்தில் தமிழர்கள் தை முதல் தேதியை தான் புத்தாண்டு என கொண்டாடினர் எனவும் சில தமிழ் அறிஞர்கள் வாதிட, தமிழ் அறிஞர்களின் பரிந்துரை என கூறி தமிழக அரசு இனி தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது.

சமுக சமய கருத்துக்களின் அடிபடையில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சித்திரை முதல் தான் தான் கோவில்களில் நாங்கள் வழிபாடுகள் நடத்துவோம் என கூறினர். தை முதல் நாளை புத்தாண்டு என அறிவிப்பதை எதிர்க்கின்றனர்.



ஆண்டின் துவக்கம் என்பது நாள் காட்டி சார்ந்தது. நாள் காட்டி என்பது நாள் மாதம், ஆண்டு என கால பொழுதின் பிரிவுகளை அடுக்கும் கருவி. இதில் நாள் என்பது இயல்பாக அறிய முடியும். சூரியன் உதயத் திலிருந்து மறு உதயம் வரை ஒரு நாள் என கணிக்கலாம்.இன்று கடிகாரம் வந்த நிலையில் நடு நிசியிலிருந்து அடுத்த நடு நிசி வரை நாள் என கொள்கிறோம், ஆனால் முற்காலத்தில் சூரிய உதயம் தான் நாளின் துவக்கம் என கொள்ள பட்டது.

நாள் என்பதை எளிதில் அறிய முடிகிறது, மாதம் என்பது என்ன? உலக வரலாற்றில் எங்கும், எல்லா கலாச்சாரத்திலும், நிலவு தான் மாதம் எனும் கால பிரிவை சுட்டி நின்றது. தமிழில் மாதம் என்பது திங்கள்; திங்கள் என்பது நிலவு. அதுபோல ஆங்கில “மன்த்” லத்தின் மொழியில் நிலவு எனும் பெயரிலிருந்து உருவானதே. உலகெங்கும் பல மொழிகளில் மாதத்திற்கு பெயர் நிலவு தான். நிலவின் வளர பிறை தேய் பிறை இயக்கம் தான் மாதம். ஒரு முழு நிலவிலிருந்து மறு முழு நிலவு வரை மாதம்.

சித்திரை, வைகாசி, ஆணி..என மாதங்களின் பெயர்கள் ஏற்பட்டது எப்படி?. ஒவ்வொரு நாளும் நிலவு வானில் குறிப்பிட்ட ஒரு விண்மீனுக்கு அருகில் நிலை கொள்ளும். அதன் விண்மீன் தான் அந்த நாளின் நட்சத்திரம். அடுத்த நாள் வேறு ஒரு நட்சத்திரம். இப்படி நாள் ஒன்றிக்கு ஒரு நட்சதிரதிர்க்கு அருகில் காட்சி தரும். இருபத்தி ஈழு நாளுக்கு பிறகு நிலவு அதே முதல் நட்சதிரதிர்க்கு மறு படி வந்து சேரும்.

தேய்- வளர பிறை காட்டும் நிலவு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சதிரம் என நகர்ந்து வரும் போது எதாவது ஒரு நட்சத்திரத்தில் முழு நிலவாக இருக்கும் அல்லவா? நிலவு எந்த நட்சத்திரத்தில் முழு நிலவு நிலை கொள்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயர் தான் அந்த மாதத்தின் பெயர். அதாவது சித்திரை மாதத்தில் முழு நிலவு கொள்ளும் நாள் சித்திரை நட்சத்திரமாக இருக்கும் (சில இந்திய நாள் காட்டிகளில் முழு நிலவு அல்ல அம்மாவசை கொண்டு நாள் மாதம் குறிக படுகிறது.) சித்திரை நட்சத்திரத்தில் முழு நிலவு அமைந்த பின் அடுத்த மாதம் விசாக நட்சத்திரத்தில் முழு நிலவு ஏற்படும். அது விசாக மாதம்- அல்லது வைகாசி.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் முழு நிலவு நிகழும். மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருந்தாலும் பன்னிரண்டு நட்சடிரங்களில் மட்டுமே முழு நிலவு காட்டும். இவ்வாறு மொத்தம் இருபத்தி ஈழு நட்சத்திரங்களில் வெறும் பன்னிரண்டு நட்சத்திரங்களில் மட்டுமே நிலவு முழு நிலவு நிலை கொள்ளும் என பண்டைய மக்கள் அறிந்திருந்தனர். உடனே வேத காலத்திற்கு செல்ல வேண்டாம். வேத காலத்திற்கு முன்பே கற்காலம் சார்ந்த பழங்குடி மக்கள் – நிகோபரி முதலிய மக்கள்- இதனை அறிந்திருந்தனர். இந்திய விற்கு வெளியே பல நாகரிங்கங்களும் அறிந்திருந்தன.

நிலவு பன்னிரண்டு முழு நிலவுக்கு பிறகு மறுபடி முதல் மாத நட்சடிரதிர்க்கு வந்து முழு நிலவு கொள்ளும். முழு நிலவிலிருந்து முழு நிலவு என கொண்டால் ஒரு மாத காலம் 29.5 நாட்கள், எனவே இந்திய இஸ்லாமிய மாதங்களில் 29-30 என மாறி மாறி நாட்கள் அமையும். பாநிரெண்டு மாதத்தில் மொத்தம் 354 நாட்கள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்க. ஆனால் நமக்கு பூமி சூரியனை சுற்றிவரும் காலம் சுமார் 365 நாட்கள் என தெரியும்.

இஸ்லாமிய நாள்காட்டி, திபெத்திய நாள் காட்டி முதலிய சூரியனின் செலவை கணக்கில் கொள்வதில்லை. எனவே இஸ்லாமிய மற்றும் திபெத்திய நாட்காட்டிகளில் ஒரு ஆண்டு என்பது வெறும் 354 நாட்கள் கொண்டவை யாக அமைகிறது. அரபிய பாலைவனத்திலும் திபெத்திய பனி பிரதேசத்திலும் பருவ காலங்கள் குறிப்பிடும் படியாக இல்லை. எனவே இங்கு சந்திர இயக்கத்தை மட்டுமே கொண்ட நாட காட்டிகள் போதுமானதாக இருந்ததன.

இந்தியாவில் குறிப்பாக, கற்காலதிற்கு பிறகு சமுக வளர்ச்சியின் ஊடே உழவு தொழில் சமூகம் உருவகியதும் நிலவு சார்ந்த நாள் காட்டி போதுமானதாக இல்லை. பருவ காலத்தோடு பொருந்த வேண்டி இருந்தது. எனவே தான் தமிழர்கள் உட்பட இந்திய பகுதியில் பல சமூகங்கள் சூரியனி சேர்ந்து இயங்கும் சூரிய- சந்திர நாட்காட்டிகளை உருவாக்கினர். மலையாள நாடு போன்ற பகுதியில் சந்திரனை முற்றிலும் தவிர்த்து சூரிய நாட்காட்டி உருவாக்கினர்.

சூரிய நாட்காட்டி மற்றும் சூரிய சந்திர நாட்காட்டியில் எந்த நாளோ புது ஆண்டு துவக்கம் என கொள்வது என்ற கேள்வி எழுந்தது. சூரியனின் இயக்கம் கவனமாக உற்றுநோக்கப்பட்டது.

சூரியன் எங்கே உதிக்கும் என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் உடன் கிழக்கு என பதில் கூறுவோம். ஆனால் சூரிய உதயத்தை கவனமாக உற்று நோக்கினால் எல்லா நாளும் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிபதில்லை என்பதுபுலப்படும். ஆண்டில் இரண்டே இரண்டு நாள் தான் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிப்பன். வேனில் காலத்தில் மார்ச் 21/22 மற்றும் குளிர் காலத்தில் செப்டம்பர் 21/22 ஆகிய நாட்களில் தான் சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிக்கும்.

மற்ற நாட்களில் சூரிய உதயம் வட கிழக்கு அல்லது தென் கிழக்கு திசையில் இருக்கும். எடுத்துக்காட்டாக மார்ச் 21 அன்று மிக சரியாக உதய புள்ளி கிழக்கில் இருக்கும். ஆனால் அதற்க்கு அடுத்த நாள் வட கிழக்கில் உதய புள்ளி அமையும். அதற்கும் அடுத்த நாள் மேலும் உதய புள்ளி வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு வடக்கு நோக்கி நகரும் உதய புள்ளி உச்ச பட்ச வடக்கு திசையில் ஜூன் 21 அன்று நிலை கொள்ளும். அதன் பின் சூரிய உதய புள்ளி தெற்கு நோக்கி விலகும். இதனை தான் தட்சிணாயணம் என்பர். அதாவது சூரியனது உதய புள்ளியின் தென்திசை ஓட்டம்,

தெற்கு நோக்கி நகரும் உதய புள்ளி மறுபடி செப்டம்பர் 21/22 சரியாக கிழக்கு திசையில் அமையும். மேலும் தென்திசை நகர்வு தொடர்ந்து உச்சபட்ச தென் தென்திசை உதயம் டிசம்பர் 21/22 அன்று நிகழும். அதன் பின் சூரிய உதய புள்ளியின் நிலை வடக்கு நோக்கி செல்ல துவங்கும்.இதுவே உத்தராயணம். சூரிய உதய புள்ளியின் வட திசை செலவு.

சூரியன் மிக சரியாக கிழக்கில் உதிக்கும் அந்த இரண்டு நாட்கள் மட்டும் தான் இரவு மற்றும் பகல் பொழுதுகள் சமாக இருக்கும். ஏனைய நாட்களில் பகல் பொழு நீண்டோ அல்லது இரவு பொழுது நீண்டோ அமையும். எனவே இந்த இரண்டு நாட்களை சம இரவு பகல் நாள் என்பர். உத்தராயண சூரிய புள்ளி நகர்வின் போது, இந்திய போன்ற வட கோள புவி பகுதியில், நேற்றயதை விட இன்று பகல் பொழுது காலம் கூடுதலாக அமையும். இன்றயதை விட நாளை பகல் பொழுது காலம் கூடுதலாக அமையும். இதற்கு நேர் மாறாக உத்தராயண காலத்தில் பகல் பொழு காலம் நாள்பட குறைந்து வரும்.



துருவ பகுதிகளில் ஆறு மாதம் பகல் ஆறு மாதம் இரவு என இருக்கும் என நாம் படித்திருப்போம். உத்தராயண் காலம் தான் வட துருவத்தில் பகல். தட்சிணாய காலம் வட துருவத்தில் இரவு. தென் துருவ பகுதியில் இதற்கு நேர் மாறாக இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை.



ஆக சூரிய இயக்கத்தில்– சரியாக கிழக்கில் உதிக்கும் இரண்டு நாட்கள் [மார்ச்21/22, செப்டம்பர் 21/22] , உச்ச பட்ச வட கிழக்கு உதய புள்ளி (தட்சிணாயணம் மே 21/22) உச்ச பட்ச தென் கிழக்கு உதய புள்ளி (உத்தராயணம் டிசம்பர் 21/22) ஆகிய நான்கு நாட்கள் சிறப்பானவை. இந்திய நாட்காட்டிகளில் பொதுவே இந்த நான்கு நாட்களில் உத்தராயணம் (டிசம்பர் 21/22), மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள் ஆகியவற்றை (மார்ச்21/22) ஆண்டின் முதல் நாள் என கொள்ளும் பல்வேறு நாள் காட்டிகள் உள்ளன.

தை திங்கள் உத்தராயணம் டிசம்பர் 21 அன்று ஏற்படுகிறது என்றால் நாம் மட்டும் தை திங்களை ஜனவரி 14 அன்று கொண்டாடுவது ஏன்? உள்படியே இது ஜோதிடர்கள் மற்றும் பிற்போக்கு பதம் பசலிகள் ஏற்படுத்திய நடைமுறை. நாள் காட்டிகள் செழுமை படுத்த பட்ட காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு உத்தராயணம் ஜனவரி 14 (தை முதல் நாள்) இருந்தது. அனால் இன்று இந்த வடஓட்டம் டிசம்பர் 21/22 அன்று நடைபெறுகிறது. வேனில் கால சம இரவு பகல் நாள் ஏப்ரல் 14 அதாவது சித்திரை முதல் நாள் எனவும் இருந்தது. இன்று இது மார்ச் 21/22 அன்று நிகழ்கிறது. இந்த வித்தியாசம் ஏன் ஏற்பட்டது? உத்தராயணம் மற்றும் வேனில் கால சம இரவு பகல் நாள் முதலிய நடைபெறும் நாள் வித்தியாசம் ஏன் ஏற்படுகிறது?

இதனை விளங்க பூமியின் சிறப்பு இயக்கம் ஒன்றை விளங்க வேண்டும். பூமி நாள் ஒன்றுக்கு ஒருமுறை தன்னை தானே சுற்றுகிறது, இதுவே ஒரு நாள். சுமார் 365 நாள்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றுகிறது இது ஆண்டு. இந்த இரண்டு இயக்கம் தவிர பம்பரம் தலை ஆடுவது போல் வேறு ஒரு இயக்கம் பூமிக்கு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் precession எனவும் இந்திய வானவியல் பாரம்பரியத்தில் அயன சக்கிரம் எனவும் கூறுவார். (ஜோதிடர் கூறும் அயன அம்சம் இல்லை). இதன் காரணமாக தான் இரண்டாயிரம் வருடம் முன்பு இருந்த நிலையில் ஜனவரி 14 அன்று உத்தராயணம் நிகழாமல் டிசம்பர் 21 அன்றே நிகழ்ந்து விடுகிறது.

கற்கால பழங்குடி மக்கள் இரவு வானில் சூரியன், சந்திரன் முதலிய வற்றின் இயக்கத்தை உற்று நோக்கி அறிவியல் பூர்வமாக வானியல் அடிபடையில் உருவான நாள் காட்டி காலப் போக்கில் ஜோதிடர் கையில் வந்தது. ஜோதிடர்கள் ஏன் எப்படி என்ற அறிவு இல்லாமல் அன்று எழுதி வைத்த வாக்கியம் என்று கூறிக்கொண்டு வான இயக்கம் மாறி போனதை கண்டும் காணமல் சென்றதன் விளைவு தான் ஜனவரி 14 அன்று தை முதல் நாள் எனவும் உத்தராயணம் எனவும் இன்றும் கூறி வருகிறோம்.

தமிழ் மற்றும் இந்திய நாள்காட்டி களில் மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்படுகிறதா, ஏன் மேலை (ஆங்கில) நாள் காட்டியில் சிக்கல் இல்லை என கேள்வி எழுப்பலாம். உள்ளபடியே ஆங்கில நாள்காட்டியிலும் சிக்கல் ஏற்பட தன் செய்ததது. நாள்காட்டி சீர்திருத்தம் செய்து இதனை சரி செய்தனர்.



ரசிய புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம், கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? அயன சக்கிர சலனத்தால் ஐரோப்பிய நாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிகிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும் போப் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்திய துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. புரட்சி நடந்தபோது இருந்த நாள்காட்டியில் அக்டோபர் 26, ஆனால் புரட்சிக்கு பிறகு அறிவியல் பூர்வ நாள்காட்டி வந்த பின் நவம்பர் 7. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.





ரஷ்யா புரட்சி போல, இந்திய விடுதலைக்கு பிறகு நமது நாள்காட்டிகளும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவாவில் திருக்கணித பஞ்சாங்கம் எனும் நாள் காட்டிகள் ஏற்படுத்த பட்டன. ஆயின் பழம் பஞ்சாங்கங்கள் கடவுள் கொடுத்த வாக்கியம் பாரம்பரியம் எதுவம் மாற கூடாது என கூறி சீர்திருத்தங்களை தடுத்து வருகின்றனர். கேரளாவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் முன்பே சீர்திருத்தம் வேண்டும் என வானவிலயளர்கள் கூறி யுள்ளனர். சமீபத்தில் மேகநாத் சாஹா எனும் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி (இடது சாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) இந்திய நாள்காட்டியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு நாள்காட்டிகளை ஒருங்கிணைத்து இந்திய தேசிய நாட்காட்டி தயாரித்தார். நட்பில் உள்ள வானியல் நிலைக்கு ஏற்ப மார்ச் 21 அன்று துவங்கும். சட்டப்படியான, அலுவல் சார்ந்த இந்திய நாட்காட்டி குறித்து மதிய அரசு அதிகரிகளுக்கு கூட இன்று தெரியாது. இது தான் வேடிக்கை.



நாள் காட்டியில் மாற்றம் வேண்டும் எனவும், பழம் தமிழர்கள் தை முதல் நாளை - உத்தராயணம் தினத்தை தான் ஆண்டின் துவக்கம் என கொண்டார்கள் என தீர ஆராய்ந்து தெளிவாக கூறிய தமிழ் அறிஞர்களுக்கு அறிவியல் தெரிந்திருக்கும். எனவே உத்தராயணம் உள்ளபடியே இன்று டிசம்பர் 21 இல் தான் ஏற்படுகிறது என ஏன் அரசின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. பிற்போக்கு ஜோதிடர்களுடன் சமரசமா? தமிழ் மரபில் உத்தராயணம் தான் சரியான ஆண்டின் துவக்கம் என கொள்வதாக இருந்தாலும் தை முதல் நாளை டிசம்பர் 21க்கு மாற்றி, மேகநாத் சாஹா போல அறிவியல் பூர்வமான நாள் காட்டியில் செய்யாமல் பாதி கிணறு தாண்டிய செயலாக தான் தமிழக அரசின் முயற்சி புலபடுகிறது.


thanks
written by
su po Agaththiyalingam

'ஆத்மாலயம்'

"நான் யார்" என்ற கேள்வியைக் கேட்டு பதில் தெரியாதிருக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த 'ஆத்மாலயம்' ஒரு ஞான தரிசனம்.திருவாளர் கங்கைமகன் அவர்களை வாழ்த்துகிறேன்.வெளியீடு விழா சிறப்புற அமைய எல்லாம் வல்ல இயற்கையை வணங்குகிறேன்.

* அட்டை வடிவமைப்பு 'கலைப் பொக்கிஷம்' திருவாளர் பி ஆர் ராஜன்(அனந்தபத்மநாபன்)
* நூலாசிரியர் திருவாளர் கங்கைமகன்
* பதிப்பம் தகிதா
* விழா 17.04.2011
* இடம்:லண்டன்

புதன், 13 ஏப்ரல், 2011


இளைய பாரதத்தை தன் மனதில் சுமந்த ஒரு முதிய பாரதம் இந்த காதர் சட்டைக்குள்...நல்ல மனங்களால் வணங்குவோம் வலிய கரங்களால் தாங்குவோம்

திங்கள், 11 ஏப்ரல், 2011

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..

மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..


தேனம்மை லெக்ஷ்மணன்



தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு.. மழையற்ற இக்கோடையிலும் ஈரச்சிதறல்கள் நம்மை கவிதை வழி நனைகின்றன..



நாமும் மழை உண்ணும் சாதகப் பட்சிபோல கவிதை அருந்தி தாகமடங்கத் துவங்குகிறோம்..


ஈசானத்தில் மின்னல் கண்டதுபோல ஒரு மின்னல் வெட்டை அவ்வப்போது கோடிழுத்துச் செல்கின்றன கவிதைகள்.. மென்மையான இடியைப் போலவும் சில.. மேக விறகெரிந்து தெரித்த நெருப்பாய் சில.. புற்களும் மரங்களும் குளுமையில் ஊறியதால் சில.. என அனைத்தும் அருமை.


முகப்புத்தக தோழமைகளுக்கும்., மற்ற பால்ய தோழமைகளுக்கும் தாய்க்கும் தந்தைக்கும் நனைய நனைய நன்றி சொல்லியபடி ஆரம்பிக்கிறது மழைக் கவிதைகள்.. முகில் உதிர்த்த பூக்கள்..


யானையாய்., ஈசலாய்., தொட்டாற்சிணுங்கியாய்..,வீணையாய்., யாழாய்., குடையாய்., விறகாய்., பரல்களாய்., புரவிப்படையாய்., நாவாய்க்கலன்களாய்., இன்னும் எத்தனையோ உருவங்களில் முகிலை உருவகப்படுத்தி இருக்கிறார்..


கண்கள் வழி வானம் விரிவதும்., மேகம் மழைத்தூரிகை பிடிப்பதும்., மந்தாரைகள் பூப்பதும்., பவளமல்லி வாசத்தோடு மழை நடப்பதும்., நினைவலைகள் உயிர்ப்பதும், யாழ் மீட்டுவதும்., மழைச்சித்திரம் தீட்டுவதும்., வெண் துகிலாய் ஓடை ஓடுவதும் ., குழந்தைகளின் சிரிப்பு செடியெங்கும் பூத்துக் கிடப்பதும் கவிதை..


மனிதநேயத்தோடு மழையில் நனைந்த சிறு குருவிக்காக மழையைப் பெய்தது போதும் என கூறுவதும்.,, நட்சத்திரங்கள் மண்ணில் நிலவாகப் பூப்பதும்., அழகாய் பயமுறுத்தும் காவல் தெய்வமும்., மழையைப் போல பயணம் செய்வதும்., கண்சிமிட்டும் நேரத்தில் பூ பூப்பதும்., காற்று நினைவுகளாய் விளையாடுவதும் அழகு..


எனக்குப் பிடித்த கவிதை இது..


”கடந்து செல்கின்றன..

மழை மேகங்கள்..

அதில்

நீரருந்திச் செல்கின்றன..

தூரதேசப்பறவைகள்..”


இன்னொரு கவிதையும் கூட அருமை..


கொன்றை மரத்தினடியில் உனக்காக காத்திருந்தபோது என்ற தலைப்பில்..


“அடை மழையில் நனைந்த கருங்குயிலொன்று நுணாமரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. கிளிகளும், தாரிச்சிட்டுகளும்., பட்டாம் பூச்சிகளும்., கொக்குகளும்., நாரைகளும்., வானம்பாடிகளும்., சிறகு விரித்துப் பறந்து சென்றன..


மேகத்திரைச்சீலை ஒதுக்கி வாசல் திறந்தது நீல வானம். நீயும் நானும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மயிற்கொன்றை மர்த்தினடியில், உனக்காக காத்திருந்த போது, இலைகளோடு

அழகழகாய்ப் பூத்திருந்த மழைத்துளிகளை உதிர்த்தவாறு இளங்காற்றில் வானவில்லை வரைந்தபடி வந்து கொண்டிருந்தாய்..”


அப்பா என்ன அழகு இதில்...


மழையில் செல்ல நாம் குடைப்பிடிப்போம் நான். இங்கே முகில்குடை பிடித்து மழை வருகிறது.


மேக விறகு எரிந்து மழைத்தீப்பொறி பறப்பது., மின்னலைக் கோலாய் ஊன்றி மழை வருவது., யானையைப் போல இடி பிளிர்வதும்., வேழம் முறித்த பச்சை மூங்கில் வாசனையாய் மழை கிடப்பதும்., மழையின் ராகம் கேட்டு தவளைகள் அலைவதும்., நிறைகிணறுகள் தம் பெயர் தொலைத்து நிற்பதும் ., அம்மா செய்து தரும் கத்திக் கப்பலும்., பனை இலை பறையடிப்பதும்., ஆடல் வல்லானின் ஊர்த்துவதாண்டவமாய் பெய்யும் ஆலங்கட்டி மழையும்., மிகவும் அதிரடியான இடியைப் போல விழுந்த வரிகள்..


கடற்புரத்தில் பெய்த மழை., காட்டில் பெயத மழை.,தோட்டத்தில் பெய்த மழை மனமெனும் காட்டில் பெய்த காதல் மழை., கண்கள் பூக்கும் கண்ணீர் மழை., தன்னையே மேகமாக்கி தன் வரவையே மழையாக்குதல்., என அனைத்து மழைகளையும் கவிதை ஆக்கி இருக்கிறார் சரவணன்..


காடுகளை அழிக்காதீர்., அது நிகழ்ந்த போது ., அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த ஹார்மோனிக்கா., என் ஜன்னல் தோழி., யாரேனும் மொழி பெயர்த்து வையுங்கள் இவையெல்லாம் மிக அருமையான வித்யாசமான கவிதைகள்..



பெயர் தெரியாத பல பறவைகள்., பூக்கள்., இவற்றின் ரசனைத் தொகுப்பாய் இருக்கிறது..


பூம்பாதிரி மரம்., பாதிரிப்பூ., பிச்சிக் கொடி.,பன்னீர்ப் பூக்கள்., கத்தாளம் பூக்கள்.,மந்தாரைகள்., செம்பருத்தி., அந்தி மந்தாரை., பவளமல்லி., மல்லிகைக் கொடி., சம்பங்கி., செந்தாமரைப்பூ. ஒற்றைப் பனை., நுணா மரம்., மயிற்கொன்றை மரம்., கருவேப்பிலை மரம்., வெண் அல்லி. , நீலத்தாமரை., முல்லைப்பூ., வேம்பு.,புங்கை மரம்., மூங்கில்., ஆம்பல்., குறிஞ்சிப்பூ., பலா., வண்ணப்பூக்கள்., இலைகள்., தாமரை., தாழை மடல்., மஞ்சள் மலர்கள்., பூத்துக் கிடக்கும் குழந்தகளின் சிரிப்பு., சரக்கொன்றை., பாரிஜாதம்., தென்னங்க்கீற்று., இத்தனை மரங்கள்., செடிகள்., கொடிகள் பற்றி எழுத நுண்மையான கண்ணோட்டம் வேண்டும்..


சிறுவயதில் தந்தையோடு செல்லும் இடங்களில் உள்ல இயற்கையை கண்டு களிப்பதும்., பின் கல்கி போன்ற ப்ரம்மாக்களின் நூல்களைப்படித்து உள்வாங்கியதையும் நன்கு வெளிப்படுத்துகிறார்.. நிறைய இடங்களில் சிவகாமி., பூங்குழலி ., வானதி.,குந்தவை போன்ற எழிற் பெண்னரசிகள் இந்தப் பூக்களோடு எனக்கு தரிசனம் தந்தார்கள்..


மைனா., ஊதா தேன் சிட்டு., தங்கத்தும்பி., வண்ணக் கொண்டைக் கொண்டலாத்திகள்., சிறு குருவி., குயில்., தங்கநிறப்பறவைகள்( சூரியன் ஒளி பட்டு)., கருங்குயில்., கிளிகள் ., தாரிச்சிட்டு., பட்டாம் பூச்சி., கொக்குகள்., நாரைகள்., வானம்பாடிகள்., மரகதப் புறா., ஊசித்தட்டான்., பட்டாம் பூச்சி., கருமேக யானைகள்., அணில்கள்., செம்போத்து., தூக்கணாங் குருவிகள்., கெண்டை., கூழைக்கடா., கயல்., வலசைப் பறவைகள்.,, தட்டாரப் பூச்சிகள்., தவளை., எறும்புகள்., தேனீ., நுளம்புகள்., நண்டுகள்., ஆமைகள்., சிப்பிகள்., சங்கு., தேன் வண்டு., கருமந்தி., முள்ளம் பன்றி., காட்டுப் பன்றி., புள்ளினம்., புழு., பூச்சி., முதலைகள்., மீன்கள்.,மயில்., கீரி., பாம்பு., வேங்கைகள்., மான்கள்., நரிகள்., முயல்கள்., கெண்டை மீன்., வண்ணத்துப் பூச்சி., வண்ண மயில்., கரிச்சான் குருவி., என இத்தனை மிருகங்கள் பறவைகளையும் குறிப்பிட நல்ல கவனிப்பும் பரிச்சயமும் இருக்க வேண்டும். இதைல் நுளம்பு ., மற்றும் வலசைப் பறவைகள் என்னைக் கவர்ந்தன.


நுளம்பு என்றால் கொசுப்போல ஒன்று.. வலசைப் பறவைகள் என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வந்து செல்லும் பருவ காலப் பறவைகள்.. புலம்பெயர் பறவைகள் எனக் கொள்ளலாம்..


இதெல்லாம் மிக கவனிப்புத் திறன் கொண்டவருக்கே எழுத முடியும்..


இவை அவர் இயற்கையோடும்., பூக்களோடும்., பறவைகளோடும் எவ்வளவு இயைந்து வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிவிக்கிறது..



பிரிவு பசலையாயும்., காதல் மழை கூடலாகவும் காட்டப் பெறுகிறது..


மிக மென்மையான் உணர்வுகள் கொண்ட., இயல்பான ரசனையான கவிதைகளின் தொகுப்பு இது..படித்தவுடன் ஈரக்காற்றும் மழை வாசமும் உங்களுக்கும் கூட தட்டுப்படலாம்.


”காற்றில் கலந்து விட்டன

எழுத நினைத்தவை..

பூ வாசமோ

மண் வாசமோ

ஏதோ ஒன்று

உனக்குச் சொல்லும்

காற்றில் கலந்ததை..”




மொத்தத்தில் மழை என்னும் சந்தோஷத்தை நம் மனதில் பெய்வித்துக் குளிரச் செய்து., வாசனைப் பூக்களைப் பூக்க வைத்துச் செல்கிறது கவிதை..

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

'தாய் மண்ணே' வணக்கம்


கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை கைப்பற்றியதும் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைநிமிர்வு கிடைத்திருக்கிறது.இந்த கோப்பை ஒற்றுமை,உறுதிப்பாடு,சகோதரத்துவம், கடினப் பயிற்சி,இலச்சிய வெறி, குழுமனப்பான்மை,தேசிய கனவு ...இன்னும் இதுபோன்ற பலவற்றிற்கு கிடைத்த பரிசு ஆகும் .இப்படியாய் தொடர்ந்து எல்லா துறைகளிலும் இந்தியா வென்று எடுத்தால் உலகத்தின் முதன்மை தேசமாக திகழும். (வந்தே...............! மாதரம்.....................!) 'தாய் மண்ணே' வணக்கம் என்று சொல்லி ஏற்படுத்திய எழுச்சி எங்கும் பரவட்டும் எப்போதும் நிலைக்கட்டும்.வாழ்க பாரதம்