ஞாயிறு, 24 ஜூலை, 2011

தகிதா பதிப்பகத்தின் நூல் வெளியீடுகள் - 2011



தகிதா பதிப்பகத்தின் 2011 ஆண்டு நூல் வெளியீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.அதன் முதல் கட்டமாக வே. விநாயக மூர்த்தி என்னும் கவிதை சகோதரரின் கவிதை நூலான "கற்கள் எறியாத குளம்" வாசகர்களின் இதயங்களை நனைக்க வருகிறது.இது இந்த கவிஞரின் முதல் படைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையோடு தன்னை இணைத்திருக்கும் புத்திலக்கிய பிரியர் இவர்.பல்வேறு காலங்களில் இவர் ரசித்து சுகித்து எழுதியதை பிரசுரித்ததை கோர்த்து இந்த கவிதை குளத்தில் நிரப்பி இருக்கிறார். அந்தியூரை சார்ந்த இந்த படைப்பாளர் நிறைய விருதுகளை தன் படைப்புக்காய் பல களங்களில் வென்றிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.தகிதாவின் இந்த படைப்பாளியை நீங்களும் வாழ்த்தி வரவேற்கலாமே!

சனி, 23 ஜூலை, 2011

"தெய்வத்திருமகள்,மகன்" - திரைவிமர்சனம்


.23 ஜூலை 2011, 22:04 க்கு Mani Vannanஆல்.தாயுமானவனுக்கும் தந்தையானவளுக்கும் இடையேயான மெல்லிய உறவின் உணர்வே 'தெய்வத்திருமகள்'.நிலாவும் கிருஷ்ணாவும் நிஜத்தில் நமக்கு நெருக்கமானவர்கள் ஆகிவிட்டார்கள்.உடல் மொழி பாவனை அசட்டு மொழிநடை புதுமாதிரியான மெளனம் போன்ற பலவற்றால் கிருஷ்ணா தொடக்க காட்சி முதலே உன்னிப்பாக கவனிக்க வைக்கிறார்.தித்திப்பான சாக்லேட் கூடத்தில் உவர்ப்பான சோகத்தின் கலவை சரிவிகிதம்.



தனக்கு மனைவி இல்லையே இன்று ஏங்குவதை விட தன் நிலாவிற்கு தாய் இல்லையே என்று ஏங்கும் ஏக்கம் கிருஷ்ணாவின் தூய ஆன்மாவின் அடையாளம். 'அம்மா எங்கப்பா' என்று மகள் கேட்கும் கேள்விக்கு 'சாமிகிட்டே போயிட்டாங்க' என்று சம்மளிக்கும் கிருஷ்ணாவை 'ஏன் சாமிகிட்டே போனாங்க' என்று கிளர்ந்தெழும் நிலாவின் இரண்டாவது கேள்வி 'நல்லவங்களை எப்போதும் சாமி தன் கூடவே வச்சிக்கும்'என்ற பதிலை கிரிஷ்ணாவிடமிருந்து கொண்டுவருகிறது. 'அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா?' என்ற எதிர்வினா ஒவ்வொரு பார்வையாளனின் தொண்டைப்பகுதியை கனக்கவைத்து விழிகள் இரண்டையும் பனிக்கவைக்கவே செய்கிறது.இப்படி ஒரு கேள்வியை கிருஷ்ணாவும் எதிர்ப்பார்க்கவே இல்லை.சிறார்களின் சில வினாக்களுக்கு பெரியவர்களாலும் பதிலளிக்க முடியாது எனபது நிதர்சனம்



ஒரு சமூக சேவகியாக இருந்து நிஜமாகவே மனநிலை பாதிக்கப்பட்டவரான கிருஷ்ணாவை மணந்து ஒரு குழந்தைக்கு தாயாகி தெய்வமான நிலாவின் தாயும், தன் மகளின் அன்பிற்கு கட்டுப்பட்டு தன் செல்வாக்கு அந்தஸ்த்து இவைகளைப்பற்றி கவலைப்படாமல் தன் மகளின் விருப்பமே தன் விருப்பம் என்று நெகிழ்ந்துகொடுத்த நிலாவின் தாத்தாவும்,கிருஷ்ணாவின் குழந்தைக்கு கள்ளம்கபடமில்லா நிழல் தாயாக வாழ்ந்த கிருஷ்ணாவின் நண்பரின் மனைவியும்,கிருஷ்ணாவிற்கு எந்த ஒரு சூழலிலும் தினையளவேனும் துரோகம் நினைக்காத தன்னொத்த தூய தோழமைகளும்,தன் சகோதரியின் மகளான நிலாவிற்காக தன் காதலையும் கூட தூக்கி எரியத் துணிந்த நிலாவின் சித்தியும்,சிக்கல்களோடு நீதிமன்றத்தில் படி ஏறுகிறவர்களை வலிந்து அணுகும் வழக்கு இளவல் வினுவும் ,தெளிவும் துணிவும் கனிவும் இரக்கமும் கொண்ட வினுவின் வழக்கு தலைவியாக வந்து வழக்கறிஞர் என்பதையும் தாண்டி நல்ல சமூக அக்கறைகொண்ட மனுசியாகவரும் அனுராதாவும், சாக்லேட் நிறுவத்தில் பணியாற்றும் கிருஷ்ணாவின் ஒவ்வொரு நகர்விலும் அக்கறை எடுத்து உறுதுணையாக இருக்கும் உற்ற நண்பராக வாழ்ந்திருக்கும் அந்த முதலாளியும் என்று படம் முழுக்க இப்படியான நல்ல கதாபாத்திரங்களால் 'தெய்வத் திருமகள்' பின்னப்பட்டிருக்கிறது.





தன் மனைவியின் மரணத்திற்கு பிறகு திருமணம் என்பதைப் பற்றியே சிந்தனை இல்லாமல் தன் நிலாவையே உலகமாக பார்த்து பரவசப்பட்டு சுகிக்கும் ஒரு நல்ல தந்தையின் முத்திரை கிருஷ்ணாவின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது.உள்ளங்கைகளை மடக்கி அதற்கு உதட்டுச்சாயம் பூசி கிருஷ்ணாவும் நிலாவும் கைகளால் பேசிக்கொள்ளும் காட்சிகள் பாசத்தின் பரவசச் சாரல்.கண்களிலிருந்தும் விரல்களிளிருந்தும் முகபாவனைகளிளிருந்தும் இத்தனை அடத்தியான நேசத்தின் பாசைகளை ஒரு நிலாவால் வெளிப்படுத்த முடிந்ததற்கு

நிலாவிற்கு பாராட்டு,அந்த மழலையிடமிருந்து மகத்தான அந்த வெளிப்பாட்டினை வெளிக்கொண்டு வந்தமைக்கு இயக்குஞர் விஜய் அவர்களுக்கு கைத்தட்டல்கள்.





நீதிமன்ற காட்சிகளை தமிழ் சினிமாக்கள் தள்ளிவைத்து பத்துவருடங்களுக்கு மேலாகும் சூழலில் ஒரு பாதி திரைப்படத்தை நீதிமன்றத்திற்குள் நகத்தி பார்வையாளர்களை கூர்ந்து கவனிக்கவும், மெளனமாக அழவும்,ரகசியமாய் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளவும்,மனது இளகவும் செய்திருந்தது அற்புதம்.மேலும் தேவையான இடத்தில் இசை,பளிச்சென்ற எதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் வசனங்கள் இயல்பான காட்சியமைப்புகள் இவை அனைத்துமே தெய்வத்திருமகளுக்கு சூட்டப்பட்ட கிரீடங்கள்.நகைச்சுவைக்கு தனியாக தடம் அமைக்காமல் கதையின் ஓட்டத்தில் நகைச்சுவை உணர்வை குபீரென்று வெடிக்கச் செய்திருப்பது திரைக்கதையின் புத்திசாலித்தனத்திற்கு சிறந்த உதாரணமாகிறது



பசுமையான வனங்கள்,உயரமான மலைகள், செழிப்பான தேயிலைத் தோட்டங்கள்,வளைந்து நெளிந்த சாலைகள்,மரவீடுகள், ஜில்லென்ற மேகங்கள் மற்றும் குறிப்பாக கள்ளம்கபடமில்லாத மனிதர்கள் என்று அத்தனை அழகின் சிரிப்புக்களையும் நீலகிரிமாவட்டத்தின் பின்னணியோடு இணைத்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.ஜில்லென்ற தேசத்தில் வாழ்ந்த கிருஷ்ணாவின் தகிக்கும் வாழ்க்கை பாடுகள் வெப்பம் தணியாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன . நல்ல களம் நல்ல கதை நல்ல கதாபாத்திரங்கள் நல்ல படிப்பினை என்று பல்ல நல்லவைகளை அடுக்கிக்கொண்டே போகமால்.



உண்மையாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட கிருஷ்ணா அளவிற்கு எதார்த்தமான உடல்மொழி வெளிப்பாடுகளை தரமுடியும்என்பது சந்தேகம்.மேனி இளைத்து ,கன்னம் வற்றி, உடல் கோணி,மொழி குழறி, மழலையாய் வாழ்ந்திருக்கும் கிருஷ்ணாவிற்கு பாராட்டுக்களை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பிசகாமல் அந்த அசட்டுத்தனமான மழலை உணர்வை பரிமாறி இருப்பது கிருஷ்ணாவை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது.தெய்வத்திருமகளாக நிலாவும் தெய்வத்திருமகனாக கிருஷ்ணாவும் தேவ பாசை பேசுகிறார்கள்.நல்ல அன்மாக்களால் மட்டுமே அந்த பரி பாசைகளை செவிமடுக்கமுடியும்.



படம் முடிந்ததும் படித்தவர்கள் நிறைந்த ஒரு கருத்தரங்க அறையில் ஒரு நல்ல நிகழ்வு நடந்துமுடிந்த பிறகு ஆரவாரமில்லாமல் மனது நிறைந்து ஒரே சீராக தட்டிய கைத்தட்டல் இன்னமும் ஏன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.அந்த கைத்தட்டல் இயக்குஞர் விஜய்க்கு உரியது என்பது ஏன் கருத்து.உங்கள் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்





இயக்குஞரிடம் சில கேள்விகள்

1 . பிறந்ததிலிருந்து ஐந்து வயதுவரை சீரோடும் சிறப்போடும் நிலாவை வளர்க்கத் தெரிந்த கிருஷ்ணாவிற்கு அதற்குமேல் வளர்க்கமுடியாது என்ற உணர்வு ஏற்பட்டு நிலாவின் சித்தியிடம் அவளை ஒப்படைப்பது ஒத்துக்கொள்ள முடியவில்லை.

2 . நிலாவின் சித்தி தன் வருங்கால துணியை கரம்பிடித்தாளா? இல்லையா?

3 .கிருஷ்ணாவின் மீது பரிதாபம் கலந்த உணர்வை ஒரு கட்டத்தில் காதல் கொள்ளத் தொடங்கும் அனுராதாவின் முடிவுதான் என்ன?

4 .மதுவிற்கும் மாதுவிற்கும் தன் சட்டத்தை அடகுவைக்க தயாராக இருக்கும் வழக்கறிஞர்களை குத்திக்காட்டி இன்னொரு வழக்கறிஞரை கண்ணியமாகக் காட்டி இருப்பது சப்பைக்கட்டுதானே.

5 .சாக்லேட் நிறுவனம் அமைக்கப்பட்டது செயற்கையாக தெரிகிறது.குறிப்பாக மரவிசிரி கண்களை உறுத்துகிறது.இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

6 .'விழிகளில் ஒரு வானவில்' என்ற பாடல் கதையின் ஓட்டத்தில் மிகப்பெரிய வேகத்தடையாகவே இருக்கிறது.நேரத்தை நிரப்புவதற்காக இந்த முயற்சியா? அந்த ஐந்து நிமிடங்களில் நிலாவை காட்டி இருந்தால் இன்னும் அதிகமாக ரசித்திருப்போம்

7 .வழக்கில் வெற்றிபெற வேறு விதமான வியூகங்களை இளைய வழக்கறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற உங்களின் வழிகாட்டல் நியாயம்தானா?

.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்புதேனம்மை லெக்ஷ்மணன்

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.

விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.

மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் செய்துகொள்வதில் தொடங்கும் ஆச்சர்யம் நூல் முழுமைக்கும் வியாபித்தது. கலைக்கப்படாத வீடு சிந்தனையைத் தூண்டியது. எதற்கு சம்பாதிக்கிறோம் என.

சிபாரிசு என்னை மிகவும் கவர்ந்தது அதன் எளிமையான அர்த்தத்தால். எவனோ தொரட்டி பிடித்து என் வாய்ப்பைப் பறித்டுச் செல்வது போல உணர்ந்தேன். தீண்டாமை பற்றிய தீவிரமான கவிதைகள் சிலவும் உண்டு. வர்ணமும்., சந்தர்ப்பவாதமும்., பஞ்சபூதங்களும் சில.

வர்ணங்களுக்காக
தன் வக்கிரச் சுவடுகளைப்
பதிய வைத்தபடி
எரிகின்றது வேள்வித்தீ.

கருப்புக் காய்கள் இரண்டாம் நகர்த்தலுக்கே தள்ளிவைக்கபடுதலும.. இன்னுமா இதெல்லாம் என வருந்த வைக்கிறது. அதே சமயம் திணிப்பை எதிர்த்துக் கடிக்கும் செருப்புக் கவிதை பலே.

காக்கையி்ன் கூட்டை சங்கீதக்குயில்கள் பயன்படுத்துவது பற்றி நல்ல சாடல். என்றும் வலியோன் ., தந்திரமிக்கவன் அடுத்தவனை ஏய்த்துப் பிழைப்பதான உருவம் கிடைக்கிறது இக்கவிதையில்.

கடவுளையே சாத்தானாக்குவது கவிஞனுக்கு வசப்படுமோ.. உண்மைதான். தோற்ற சாத்தானுக்கு பதிலாக கடவுளோடு சமரிட்டால் கடவுளே சாத்தானாகிறார். ஆண்டானே சூதுக்கு வசப்படுதல் இருக்கலாம். ரகசியங்களை வெளியிடும் நண்பர்களின் துரோகம்வலித்தது.

பலிகளுக்குப் பின் தாமதமாய் வரும் சமாதானம் வெண்புறாக்களாய் உருவகப்படுத்தப்பட்ட விதம்.. வதம்.

அவன் இவன் அடிக்கடி நினைவோட்டத்தில் சிக்கி என் மனரேகை படிந்த கவிதை..

அவனைப்பற்றிய
அபிப்ராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்.
சற்றும்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாயிருந்தான்.

என எண்ணவோட்டத்தின் மாற்றத்தை படம் பிடித்தது துல்லியம். யுத்தத்தில் ஒற்றைச் சொல்லைக் கேடயமாக்கவா ., வாளாக்கவா.. என கவிதைகள் பல முன்னிருப்பவரிடம் கேட்பது போலும் நடந்தது பகிர்வது போலும் உள்ளன.

ஏழையின்., அந்தகனின்., பிச்சைகாரனின். ரோட்டோர ஓவியனின் காதுகள் அலுமினியத்தட்டில் விழும் காசுச் சத்தத்துக்காக பசித்திருப்பதுமான கவிதைகள் தவிக்க வைத்தன..

குளத்தில் கல்லெறிந்து உடைந்த நிலாவும். பானைச் சில்லாய் கிணற்றுள் பயணப்படுவதும்., ரேணுகையின் உலோகக்குடமும்., நாய்க்கு உணவள்ளி வைக்கும் பிச்சைக்காரியும்., அழகு.

பருவமும்., ஒப்பனையும் பொறிக்கும் வாய்ப்பற்ற முட்டையுடைய பறவை விட்டுச் சென்ற இறகும் ., அற்றகுளமும். சாதிகளால் ஆன தேசமும் சிற்றிலும் கொஞ்சம் அதிர வைத்த கவிதைகள். தாகம் என்னுடைய தாகத்துக்காக நான் சேமிப்பதை அடுத்தவர் எடுத்துச் செல்வதும் ., நான் நானாக இருப்பதும் ., காதல் ஏக்கமும்., கசிய வைத்தது.

தூக்கத்தின் வண்ணம்
நிறம் இழக்கிறது
ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப்படுகிறது
இருள்..

இருளைக் கழுவேற்றும் இந்தக் கவிதை ரொம்ப வித்யாசம். யாழியின் கைரேகை படிந்த கற்களை என் கைகளில் வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் என் கையிலும் ரேகைகளைப் படிய வைத்த கற்கள் இவை.. கவிதைகள் இவை..

டாக்டர் அப்துல்கலாம் வடக்கு வாசலில் குறிப்பிட்ட இவர் கவிதையை முடிவில் குறிப்பிடுகிறேன்.

நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரி்யாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்..

தொடரட்டும் .. அந்தப் பக்கங்களிலும் உங்கள் கைரேகை படிந்த கவிதைகள்.. வாழ்த்துக்கள் யாழி. அருமையான தொகுதியைக் கொடுத்தமைக்கு.. தகிதாவுக்கும் மணிவண்ணனுக்கும் கூட.

இல்லைகளில்தான் இருக்கிறது

சிறகுகளால் வரையும் பறவைகள்

வானப்புத்தகத்தில் முகவரிகளை குறித்துவைப்பதில்லை.

ஓய்வெடுத்துச் செல்லும் வண்டுகள்

பூவின்பக்கங்களில் விலாசங்களை எழுதிவைப்பதில்லை

அலைப்படகுகளில் பயணிக்கும் முத்துக்கள்

பயணக்குறிப்புகளை கடல்நீரில் வரைந்துவைப்பதில்லை.

கடந்து செல்லும் காற்று

நடந்துவரும் தடங்களை நினைவில்வைப்பதில்லை

குளிர்ந்து ஒளிரும் நிலா

வெளிச்சங்களை நிரந்தரமாய் எழுதிவைப்பதில்லை

நிமிர்ந்து நிற்கும் மரம்

குனியும் நிழல்களுக்காய் கோபம்கொள்வதில்லை

குலைந்து உருகும் பனி

அடையாளம் தொலைவதற்காய் அழுதுவைப்பதில்லை

பொழிந்து தள்ளும் மழை

வானம் தொலைத்ததற்காய் வருத்தம்கொள்வதில்லை....

திங்கள், 11 ஜூலை, 2011

பேருந்தில் அழுத வீணை( சிறுகதை )


பயணத்தின் ஒரு சாலையில் எனக்கு லேசாக விழிப்புவந்தது.தூங்கி வழிந்த கண்களை விரல்களால் நன்றாக கசக்கி இரட்டைப் பிறவிகளைப் போலிருக்கும் என் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடு பறக்க தேய்த்து அந்த கதகதப்பை குளிர் காற்றால் சில்லிட்டிருக்கும் முகத்தில் அடைகாப்பதைப்போல பரவவிட்டேன்.

பேருந்து மலைப்பாதையில் மெதுவாகவும் நிதானத்தோடும் நகர்ந்து கொண்டிருந்தது..என் கழுத்தோடு விழிகளையும் முடிந்த வரை திருப்பி கலங்கரைவிளக்க விளக்கைப் போல பேருந்துக்குள் நாலா புறமும் நோட்டமிட்டேன்.எல்லோரும் தூங்குகிறார்கள். கடைசி இருக்கையில் கதவருகில் பணப்பையை சட்டைக்கு வெளியில் பூணூலைப் போட்டுக்கொண்டதைப் போல தொங்கவிட்டிருந்த நடத்துநரும் உறக்கத்தில் இருந்தார்.சுமார் ஐம்பத்தேழு இறந்த பிணங்களை சுமந்துகொண்டு ஒரு இயந்திரபல்லாக்கு நகந்துகொண்டிருந்ததைப் போல நான் உணர்ந்தேன்.ஒட்டுஞர் மட்டும் உயிரோடிருந்தார்.

கம்பீரமான மலைகளையும் ,மரகதம் பாவிய இயற்கை எழில்களையும் ரசித்தப்படி சிலாகித்துக்கொண்டிருந்த அந்த ஒரு தருணத்தில் எனக்கு வலது புற இருக்கையில் குழந்தை அழும் சத்தம் வரவே திரும்பிப்பார்த்தேன்.

அப்பாவின் தோளில் அம்மா சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருக்கிறாள்.மனைவியை தன் தோள்களில் உறங்க வசதியாய் தாங்கிக்கொண்ட அந்த நபர் தன் மகள் அழுவது தெரியாமல் அதேசமயத்தில் உறக்கத்தில் கூட இரு கைகளை அணைப்போல வளைத்து வைத்துக்கொண்டு இருந்தது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.

முகாரி மெல்லிசையாகத் தொடங்கிய அந்த குழந்தையின் அழுகை பேருந்து முழுக்க பரவத்தொடங்கியது.மனதைப் பிழியத்தொடங்கிய அந்த மழலையில் அழுகையை நிறுத்த வேண்டுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடலானேன்.

பெருவிரலையும் நடுவிரலையும் ஒன்றாக அழுத்தி உதறி சொடுக்கில் "டிக் டிக் டிக் டிக்" என்று பலமுறை சப்தங்களை எழுப்பியபடி அந்த குழந்தையைப் பார்த்து செய்யத் தொடங்கினேன். அந்த புதுவித சப்தத்தை கேட்டு திருப்பிப்பார்த்த அந்த குழந்தை சொடுக்கை நிறுத்தியதும்,தான் நிறுத்திய தன் அழுகையை மீண்டும் இசைக்கத் தொடங்கிவிட்டது.

குவளை மலர்க்கண்கள் இரண்டும் கண்ணீரில் நனைந்து குளிர்ந்திருந்தன. .கண்களில் ஊற்றெடுத்த அந்த முகாரி வெள்ளம் கன்னப்பாறைகளில் பெருக்கெடுத்து மலர்ப் போன்ற உதடு தொட்டு உடைகளையும் ஈரப்படுத்தி இருந்தது.உதட்டை மேல்பக்கமாய் உயர்த்தி பக்க வாட்டில் இழுத்து இடைவிடாது அழும் அந்த மழலையின் அழுகையை என்னால் பார்க்கமுடியவே இல்லை.

கட்டை விரலை என் காதிற்கு சற்று மேல் முட்டுக்கொடுத்தபடி இருநான்கு விரல்களையும் சிறகடிப்பதைப் போல பாவனை செய்துப்பார்த்தேன்.பல் மருத்துவரிடம் கூட காட்டாத எனது முப்பது சில்லறை பற்களை முதல் முறையாக அந்த குழத்தைக்கு காண்பித்து சிரிப்பை மூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு தோற்றேன்.புருவங்கள் இரண்டையும் நெற்றி தொடும் அளவிற்கு உயர்த்தி விழிகளின் திரையை சற்றே அகலப்படுத்தி ஆனந்தமும் ஆக்ரோஷமும் கலந்த ஒரு கலவைப்பார்வையில் பார்த்தேன்.திகைத்து நிறுத்திய அந்த குழந்தை மீண்டும் தன் அழுகை வீணையை மீட்டத்தொடங்கியது.

கங்காரைப் போல தன் மடியில் உறுதியாய் தாங்கியப்படி தூங்கிக்கொண்டிருந்த அந்த மழலையின் தந்தையை எழுப்பிவிடுவதே சரியாது என்று முடிவெடுத்தேன்.

"சார்" "சார்" என்று மெதுவான குரல் எழுப்பி என் விரல்களால் அவரது இடது தோள்பட்டையை லேசாக தொட்டெடுத்தேன். தவம் கலைந்ததைப் போல விழித்துக்கொண்ட அந்த நபர் ஏதோ ஆபத்து நேர்ந்ததாய் உணர்ந்து எழுந்தததும் தன் மழலையைப் பார்த்தார்,பிறகுதான் என்னைப் பார்த்தார்.புன்னகையால் ஒரு நன்றியை சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டார்.

கணவனின் தோள் தலையணை நகர்ந்த நிலையில் அவளும் உறக்கம் கலைந்து ."என்ன ஆச்சுங்க" என்ற கேள்வியை எழுப்பிய படியே தன் குழந்தையை "நீ வாடா செல்லம்" என்று வேகமாய் புயல் பறிக்கும் பூவைப்போல கணவனின் கைகளிலிருந்து அன்பின் மிகுதியால் வாங்கிக்கொண்டாள்.இப்போது அழுகைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை பெருமூச்சு விட்ட தந்தைக்கு தன் மழலை ஏமாற்றத்தையே தந்தது.

லேசாக அழுதுகொண்டிருந்த அந்த மழலை இப்போது உச்சதாயத்தில் .வீறிட்டு அழத்தொடங்கிவிட்டது மனதை ஏதோ பிசைவதைப் போல இருந்தது.எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியம்மா ஒருத்தி உறக்கம் தொலைத்து திருப்பிப்பார்த்து."இங்கே பாரும்மா...குழந்தைக்கு வெக்கை அதிகமா இருக்கும் ,அதான் உப்பசம் தாங்காமல் அழுதிருக்கு,மேல் சட்டையை எடுத்துடுங்க" என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதைப் போல நடந்தேறியது.குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை.

பக்கத்து இருக்கையில் இருந்த வயதான தாத்தா ஒருவர்."இன்னமும் அழுதுன்னா பூச்சி கீச்சி கடிச்சிருக்கும்,கொஞ்சம் நல்ல பாருங்க" என்று மழலையில் அழுகை தாங்கமுடியாமல் நல்ல ஆலோசனை ஒன்றை உதிர்த்தார்.அப்போதே குழந்தை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.தலை கழுத்து கக்கம் கால் இடுக்கு விரல்கள் என்று எல்லா பாகங்களிலும் தேடுதல் வேட்டையை தாயும் தந்தையும் நடத்தி தோற்றார்கள்.மீண்டும் குழந்தை கதறத் தொடங்கி விட்டது.

இப்போது பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள்.மழலையின் அழுகை பீறிட்ட திசையைப் பார்த்து விழிகளால் மொழிகளில்லாமல் ஆறுதல் சொன்னார்கள்.ஒரு கட்டத்தில் விழித்துக்கொண்ட நடத்துனர்."ஏம்மா குழந்தை காளு காளுன்னு இப்படி அழுது ..சும்மா இருக்கீங்க" என்று தனக்கே உரிய பாணியில் கடிந்துகொண்டார்.அந்த கோபத்தில் எரிச்சலும் அக்கறையும் இருப்பதை உணர்ந்த அவர்கள் எதிர்வினைப் புரியவில்லை.

நடத்துனர் போட்ட சத்தத்தில் ஓட்டுனர் தனது பங்கிற்கு செவ்வகக் கண்ணாடி வழியாக நிகழ்வுகளைப் பார்த்தபடியே பேருந்து ஓட்டுவதில் கவனமாய் இருந்தார்.ஒரு திருப்பத்தில் பேருந்தை ஓரங்கட்டிவிட்டார்.எல்லோரும் என்னவோ ஏதோ என்று முழிக்கத் தொடங்கினர்.அந்த மழலையை பேருந்திலிருந்து கீழே சுமந்த படி வந்த தந்தை இயற்கையின் காற்று பட அனுமதித்துவிட்டு லேசாக மழலையின் முகத்தை ஈராமாக்கப்பட்ட தன் மெல்லிய கைக்குட்டையால் ஒற்றி ஒற்றி எடுத்தார்.இந்த இதத்தில் சொக்கிப்போயிருந்த மழலை முற்றிலுமாக அழுகையை நிறுத்தி இருந்தது, பேருந்தில் இருந்த அனைவருக்கும் பெரிய நிறைவை ஏற்படுத்தியது.

பேருந்து அந்த மலைப்பாதையில் கிளம்பத்தொடங்கிய சில வினாடிப்பொழுதுகளில் குழந்தை இதுவரையில் இல்லாத அளவிற்கு ஏகமாய் வீறிட்டு அழத்தொடங்கியது.இறக்கமில்லாதவர்களையும் கூட அழவைத்துவிடும் அளவிற்கு அந்த குழந்தையின் அழுகையில் ஒரு அடர்த்தியான சோகம் நிழலாடிக்கொன்றுதான் இருந்தது..பயணம் முடியும் வரையில் அந்த மழலையில் அழுகைக்கான காரணத்தை யாராலும் அறியமுடியவில்லை எனபது அவைவருக்கும் ஏமாற்றமாகவே இருந்தது.

ஒவ்வொரு நிறுத்தமாக மனிதவெள்ளம் வழியத்தொடங்கியது.

அழுத குழந்தையோடு அதன் பெற்றோர்கள் இறங்கிய பின்னர் அந்த இடத்தை இயல்பாக நோட்டமிட்ட போதுதான் உரையுடன் கால்களில் மிதிபட்டு சப்பையைக் கிடந்தது ஒரு சாக்கலேட்.இறுதியாக மழலையின் அழுகைக்கான காரணத்தை கண்டறிந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் ,ஒரு மணி நேரத்திற்கு மேலாக கதறி கதறி அழுத மழலையின் அழுகை வெகு நாட்களாக எனது செவியில் முகாரி ராகமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அன்றிலிருந்து இப்போதெல்லாம் பேருந்து பயணத்தில் மிட்டாய்கள் இல்லாமல் நான் பயணிப்பதே இல்லை.

சனி, 9 ஜூலை, 2011

மோர் மேரே-(சிறுகதை)


"பஸ்ஸு ஒரு பத்து நிமிஷம் நிக்கும் ,டீ காப்பி சாப்புடறவங்க சாப்புட்டுவரலா "

கண்டக்டரின் உரத்த குரலின் சில வார்த்தைகள் மட்டுமே உறக்கத்திலிருந்த என் செவிகளுக்குள் நுழைந்து,கிசு கிசுத்தது.பயணத்தின் களைப்பில் லேசாக நினைவு வந்தவனாய் விழித்தேன் .மூக்கின் நுனிவரையில் வந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றிருந்த மூக்குக் கண்ணாடியை சுட்டுவிரலால் மேலே உயர்த்தி கண்ணுக்கு நெருக்கமாக பொருத்தினேன்.

சன்னலோரத்து காற்று கலைத்துப் போட்டிருந்த என் முடியை விரல்களை சீப்பாக்கி இடதும் வலதுமாய் சீவிமுடித்தேன். காண்டாமிருகத்தின் தோலைப் போல போர்த்தியிருந்த ஜர்க்கினை என் உடலிலிருந்து உரித்தேன்.இடது சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல் போனை எடுத்து ஏதேனும் அழைப்புகள் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டேன்.

அடி வயிற்றுப் பகுதி முட்டிக்கொண்டு வரவே இயற்கை அழைப்பிற்கு இசைவு தெரிவித்தவனாய் பேருந்திலிருந்து கீழே இறங்கினேன். ராணுவ வீரர்களைப் போல வரிசையாகவும் ஒழுங்காகவும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை நோட்டமிட்டவனாய் நகர்ந்தேன்.

கடைகளை சுவர்களாக கொண்டிருந்த பெரிய மைதானமாய் அந்த பேருந்து நிலையம் காட்சியளித்தது.பேருந்துகள் வருகிற நேரங்களில் மட்டுமே வர்த்தகம் அங்கு சூடுபிடிக்கும்.மற்ற நேரங்களில் ஈ ஆடிக்கொண்டிருக்கும்.பெருத்த ஆரவாரங்கள் இல்லையாயினும் வியாபாரம் இயல்பாகவே நடந்துகொண்டிருந்ததை கடைகளுக்கு முன் வாசலை அடைத்து நின்றுகொண்டே பொருட்களை வங்கிக் தின்று குடித்து செரித்துக்கொண்டிருக்கும் கூட்டம் சொல்லாமல் சொல்கிறது.

"ஐஸ் சர்பத் ஐஸ்"

"மல்லிகப்பூ மோளம் பத்துரூபா'

"தேங்கா பரப்பி தேங்கா பரப்பி"

"ஆரஞ் ஆரஞ் நாட்டுப்பளம் நாட்டுப்பளம்"

எல்லா பேருந்துகளின் சன்னங்களில் யாரவது வாங்கமாட்டர்களா என்று ஏக்கத்தோடு எட்டிப்பார்த்தபடி அந்த கிராமத்து மனிதர்கள் நம்பிக்கையோடு விற்பனைக்குரிய பொருட்களை கைகளில் நீண்ட நேரம் ஏந்திக்கொண்டு வலிகளை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தவண்ணமாகவே இருந்தார்கள்.

ஒருவர் இருவரைத் தவிர யாரும் அவற்றை சீண்டவே இல்லை.நகரும் அந்த மனித அங்காடிகளை சட்டை செய்யாமல், அசையாத நிலை அங்காடிகளை நோக்கி விரைந்து மொய்த்துக்கொண்டார்கள்.

"அண்ணே ஒரு பெண்டா கொடுங்க"

"பெப்சி டின் ஒன்னு தாங்க"

"மாசா ஜில்லுன்னு இருக்கா"

"கோலா ஒருலிட்டர் பாட்டில் இருக்கா"

கேட்கிறார்கள்.... பெறுகிறார்கள்..... வருகிறார்கள்.பேருந்து கிளம்புவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறது.இந்த கசப்பான அனுபவத்தை இன்னும் பார்க்க சகிக்காத நான் பேருந்துக்குள் வந்து அமர்ந்துகொண்டேன்.இடதுபுற சன்னலுக்குள் நுழைந்த மாலை நேர நெருப்பு வெயில் என்னை வருக்கத் தொடங்கியது.புழுக்கம் தாங்காமல் என் உதடுகளைக் குவித்து நானே பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.சட்டைக் காலரை என் இரண்டு கைகளால் கொஞ்சம் தூக்கிவிட்டபடி பறவை பறப்பதைப் போல சிறகடிக்கச் செய்தேன்.

சிறுநீர்க்கழித்தவர்கள்,நொறுக்குத்தீனி தின்றவர்கள்,உணவருந்தி முடித்தவர்கள், இளைப்பாறிக்கொண்டவர்கள் என்று ஒவ்வொருவராக கிளம்ப இருந்த பேருந்தை நோக்கி படையெடுத்தார்கள்.

மை பூசியதைப் போல கருத்த மெலிந்த தேகம், பழைய அழுக்குப்படிந்த பருத்தி சேலை,ஒடுங்கிய கன்னம்,செருப்பில்லாத நரம்பு புடைத்த சூம்பிய கால்கள்,நெற்றியில் அழிந்தும் அழியாமலும் இருந்த திருநீரு,கலைந்த பரட்டைத் தலையில் சும்மாடு,அதன் மேலே குடத்தின் வடிவத்தில் ஒரு அலுமினிய பாத்திரம் மூடியுடன் இருந்தது.அதன் மீது ஒரு அலுமினிய டம்ளர் மற்றும் ஒரு லோட்டா.எழுபது வயதை தண்டி இருக்கக்கூடு அந்த மூதாட்டி, பேருந்தை நோக்கி நெருங்கினாள் .முதலில் அவரை ஒரு பயணி என்றுதான் நினைத்தேன்.நேராக இடதுபுற சன்னலோரமாக அமர்ந்திருந்த எனது இருக்கைக்கு கீழே நின்றுகொண்ட அவர் தன் தலைச்சுமையை கீழே இறக்கிவைத்தாள்.

.

"மோர் மோரே" " மோர் மோரே"

என்று கூவிக்கொண்டே அலுமினியப் பாத்திரத்திற்குள் லோட்டாவை விட்டு ஒரு லோட்டா மோரை அள்ளி மீண்டும் அந்த பாத்திரத்திற்குள் கைகளை உயரே வைத்துக்கொண்டு டீ ஆத்துவதைப் போல திருப்பி ஊற்றினாள். மோரும் நீரும் கலந்து கறிவேப்பிலை மல்லிதழை இஞ்சி போன்றவை மேல் சுழற்சியில் வட்டமடித்தன.

ஒரு லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக்கொண்டு "கண்ணு மோர் சாப்புடு கண்ணு" "லோட்டா அஞ்சு ரூபாதா" "வீட்லே வளக்குற கரவெ மட்டு பால்லே செஞ்ச மோரு" என்று கேட்டபடியே ஒவ்வொரு ஜன்னலாக பயணிகளின் கைகள் எட்டும் உயரத்திற்கு பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறாள்."மோர் மோரே... மோர் மோரே" என்ற அசட்டுத்தனமான அந்த கிராமத்து வயதான தேவதையின் குரல் பேருந்து நிறுத்தம் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது.

வட்டமடித்து மீண்டும் எப்படியோ நான் அமர்ந்திருந்த ஜன்னலருகில் வந்து நின்றால்.

"கண்ணு வாங்கி சாப்புடு கண்ணு...நல்லா ஜில்லுன்னு இருக்கு ..வீடு போயி செர்ர வரைக்கும் தாகமே எடுக்காது ....வயித்துப் புண்ணுக்கு ரொம்ப நல்லது... நல்லா இல்லாட்டி நீ காசுதர வேணாம்" என்று அவர் சொல்லு முடிப்பதற்குள் பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்."முதல்லே குடி கண்ணு ...அப்பறம் காசு வாங்கிக்கறே" என்று பதிலளித்தபடியே கம்பிகளுக்குள் நுழைத்த லோட்டா மோரை ரசித்து ருசித்து பருகினேன்.ஒரே மூச்சில் பருகியதால் கொஞ்சம் மூர்ச்சையாகி இளைப்பாறிக்கொண்டேன்.

பத்து ரூபாய் தாளை மகிழ்ச்சியோடு நீட்டிய போதுதான் பேருந்து கிளம்பத்தொடங்கிவிட்டது.மூதாட்டிக்கும் எனக்குமான இடைவெளியை நகர்ந்த பேருந்து நீட்டித்துக்கொள்ள சன்னல் வழியாக கழுத்தை நுழைத்து பின்பக்கமாக திரும்பிப்பார்த்து மூதாட்டியை அழைத்தேன்.

"கண்ணு நாளைக்கு வாங்கிக்கறேன்...நீங்க போங்க...பஸ்ஸு கிளம்பிடுச்சு..." என்று என்னிடம் காசுவாங்காமலேயே வழியனுப்பிவிடுகிறாள்.'நாளைக்கு நான் வரமாட்டேன் பாட்டியம்மா...இதோ வாங்கிக்கோங்க " என்று ஒரு பொய்யைச் சொல்லி பத்து ரூபாய் தாளை மூதாட்டி பார்க்கும் படியாக கீழே போட்டேன்.அந்த தாள் காற்றில் பறந்து அவளருகில் போய்சேருகிறது.

கைகளில் எடுத்துக்கொண்ட அந்த மூதாட்டி ஐந்த ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு பேருந்துக்கு பின்னாலே ஓடிவருகிறாள்.

"கண்ணு இந்தாங்க உங்க அஞ்சு ரூபா" ...." எங்க பச்சே கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க" ...இப்படியாய் திரும்பத் திரும்ப .சொன்னபடியே பேருந்துக்கு பின்னால் ஓடி அலைபறக்க பின்தொடர்கிறாள். காசை சேர்க்கமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு ஓடிவரும் அவளின் பின்தொடரல் நிற்கவில்லை என்பதை கவனித்தவனாய் வரும் என்னையும் அந்த மூதாட்டியையும் ஒரு திருப்பம் பிரித்துப்போடுகிறது.

பல நாட்கள் ஆகியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது "மோர் மோரே மோர் மோரே".

வியாழன், 7 ஜூலை, 2011


செம்மொழிமாநாட்டில் கபிலர் அரங்கிற்கு நான் பொறுப்பேற்றிருந்த போது இயற்கை எய்திய பின்பும் தமிழாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இருக்கும் தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களை நேரில் சந்திக்கிற உரையாடுகிற ஓர் அரிய
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை என் திருக்கரங்களால் நகர்த்திச் செல்கிற பாக்கியமும் கிடைத்தது.அன்னாருக்கு என் ஞாபகக் கண்ணீரும் ஆன்மாவின் இரங்கலும்....

செவ்வாய், 5 ஜூலை, 2011


"ஜனகணமன" என்னும் நமது தேசிய கீதத்தை உலகத்தில் சிறந்த தேசிய கீதமாக UNESCO அறிவித்துள்ளது.நமது தேசிய கீதம் உலகம் பேசிய கீதமானதற்காக பெருமிதம் கொள்வோம்.இந்தியன் என்று இறுமாப்பு கொள்வோம்.வந்தே மாதரம்.(சுத்தமான சுதேசிகள் மட்டும் இங்கு உங்கள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்)

கட்டிப்புடி வைத்தியம்


அவள் கருங்கூந்தல் காட்டுக்குள்

என்விரல்கள் நுழைந்து

அலைந்து களைத்து களிக்கின்றன....



கருத்த பூமியாய் சுழலும்

கண்மணியை

பார்த்ததால் பரவசப்பட்டதால் வேர்த்ததால்

இமைகள் கவறிகள் வீசுகின்றன...



மதுக்கோப்பைகளாய்

செக்கச்சிவந்த உதடுகள் நான்கும்

இதழ்மாறி பரிமாறி தேனூறி தளும்புகின்றன...



பத்துப்பத்தாய் கொத்துக்கொத்தாய்

இருபதுவிரல்கள் பின்னிய புள்ளியில்

மின்சாரம் பாய்கின்றன...



பேசியவார்த்தையில் நாசியில்

பாலைவன வெப்பம் தகிக்கிறது...



எது உடல்? எது உயிர்? என்றறியாமல்

ஆன்மா தவிக்கிறது...



வரம்பையும் மீறி நரம்பின் நாளங்களில்

குருதியும் நிறைகிறது ...



எண்ணையும் ஊற்றவில்லை

தீக்குச்சி கிழிக்கவில்லை

எப்படியோ என்னுடல்

பனியிலும் எரிகிறது ...



அணைக்கிறேன் அணைக்கிறேன்

அணைக்க அணைக்க

இன்னும் கொழுந்துவிடுகிறது...



அவள் மொழி

காற்றில் மிதந்து காதில் நுழைந்து

உயிர்எல்லாம் இனிக்கிறது...



மயிர்

கூச்செறிய

காமன் பூச்சொரிய

உடலெல்லாம் மலர்கிறது...



தாள்களா? தோள்களா?

என்றறியாமல் அதில்

கவிதை நிறைகிறது ...



தூக்கத்தை தகர்த்து

ஏக்கத்தை உதிர்த்து

நிகழ்வில் நிலைக்கிறது...



எல்லா நிலங்களையும்

எனது ஜீவநதி

ஓடி நனைக்கிறது..

.

காமமும் கடவுளும்

ஒன்றுதான் என்றுதான்

இயற்கை சொல்கிறது.