திங்கள், 27 ஜூன், 2011

தேசிய விருதாளர் ஜீவாவும் நானும்


மனதின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் நட்பின் காட்சிகள் விரிகின்றன.ஜீவாவும் நானும் நீண்டகால நண்பர்கள் அல்ல.ஜீவாவைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் ஜீவாவுடனான நேரடி தோழமைக்கு உண்மையில் ஒரு ஐந்து வயதுதான் ஆகிறது.இருந்த போதிலும் ஜீவா ஒரு இனிய நண்பர்.இலக்கியக் கூட்டங்கள் திரையிடல் நிகழ்வுகள் ஓவியக்கண்காட்சிகள் என்று மொழியும் கலையும் சார்ந்தவற்றில் மட்டுமே சந்தித்து சிந்தனைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.என் எழுத்திற்கு இவரது ஓவியத்திற்கும் இடையேயான தொடர்புதான் என்னையும் அவரையும் ஒன்று சேர்த்திருக்கிறது.

மனிதக்குலத்திற்கான மகத்தான வேதமாக விளங்கும் திருக்குறளை இன்னும் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவில்லையே என்ற ஏக்கத்தில் நான் எழுதிய நூல்தான் "காதல் குறட்பாக்கள்" ஆகும். இன்பத்துப்பாலை இன்றைய தலைமுறை படிக்கும் விதத்தில் கவிதைப்பாலாக மாற்றிய அந்த நூலுக்கு தேவையான கோட்டோவியங்களுக்காக பிரத்யேகமான ஒரு கலைஞரைத் தேடிய போதுதான் எனக்கு ஜீவா அறிமுகத்திற்குப் பிறகு நெருக்கமானார். மிக மிக குறுகிய காலக்கட்டத்தில் அழகாய் அர்த்தப்பாடுடைய வள்ளுவக் கவிதைகளை ஓவியங்களாகத் தீட்டி தந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது திருவாளர் ஜீவா அவர்கள். காதலின் எல்லா உணர்வுகளையும் பிசகாமல் என் கவிதையையும் தாண்டி ஜீவாவின் ஓவியங்களே ஆத்மார்த்தமாய் பேசின.ஜீவாவின் இந்த பங்களிப்பு ஜீவாவிற்குள் இருக்கும் ஒரு நேர்த்தியான இலக்கிய வாதியை எனக்கு அடையாளம் காட்டியது.வள்ளுவன் சங்ககாலத்தமிழில் சொன்னதை சிரத்தைஎடுத்து நான் சமகாலத் தமிழில் சொல்லிமுடித்தேன்.ஜீவாவோ மிகவும் இலகுவாக ஒவ்வொரு ஓவியத்திலும் நூறு நூறு செய்திகளை அழகாக உச்சரிக்க வைத்தார்.இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய வானம்பாடிக் கவிஞர் 'சிற்பி' பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை குறித்தும் ஜெவாவின் படங்கள் குறித்தும் சிலாகித்துக்கொண்டது இன்னும் கெளரவம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் உச்சபட்ச துயரங்களை ஒரு அரை நூற்றாண்டிக்கு முன் பேசிய படம் தான் 'பராசக்தி".என் நெஞ்சில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்த இந்த உலகத்திரைப்படத்தை திரைக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற வேட்கையில் நான் படைத்த முதல் நூல்தான் "பராசக்த்தி திரைக்கவிதை" என்ற ஆகும்.ஒரு பகலில் படம் கண்டு ஓரிரவில் எழுதி முடிக்கப்பட்ட நூல்தான் இந்த பராசக்தி திரைக்க்கவிதை ஆகும்.தலைப்புகள் கொடுத்து காட்சி காட்சிகளாக எழுதப்பட்ட இந்நூல் பழைய திரைப்படத்தில் சின்ன சின்ன அடையாளத்தைத் தாங்கிவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் ஓவியர் ஜீவாவை அணுகி என் திட்டத்தை வெளியிட்டேன். முதலில் யோசித்த ஜீவா ,பிறகு சம்மதித்து ஊதியம் பெறாமல் கோட்டோவியங்களை உயிரோவியங்களாகத் தீட்டித்தந்தார்.நெருப்பு வரிகளுக்கு நெய் ஊற்றியதைப் போல ஜீவாவின் கோட்டோவியங்கள் அடர்த்தியாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டிருந்தன. வானம்பாடிக்கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலுக்கு அணித்துரையும் ,கவிக்கோ அப்துல் ரகுமான் இந்நூலுக்கு வாழ்த்துரையும் வழங்கி எங்கள் இருவரையும் சிறப்பித்திருந்தார்கள்.

என் ஆய்வு நூலான "இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைகள்" என்ற நூலும் ஜீவாவின் ஓவியங்களோடு வெளிக்கொண்டுவரப்பட்டது. இலக்கிய காலகட்டங்களில் கவிதைகள் உணர்த்தும் கருப்பொருள்களை உருப்பொருள்களாக கண்ணுக்கு முன்னால் ஓவியர் ஜீவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தினார்.இந்த நூல் கல்வியாளர்கள் மத்தியில் உலக அளவில் பெரிய வரவேற்பை எங்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.இப்படியாக எமது மூன்று நூல்களுக்கும் தேசிய விருதாளர் திருமிகு ஜீவா அவர்களே கோட்டோவியங்களை வரைந்து தந்தது எனக்கு தேசிய விருது கிடைத்ததைப் போன்ற இனிய மாயையை உருவாக்கவே செய்திருக்கிறது.ஒரு தேசிய விருதாளர் எனது நூல்களுக்கு கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார் என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

ஒரு மனிதர் ஏதேனும் ஒரு களத்தில் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதுதான் இயல்பு,ஆனால் ஜீவா அதற்கு விதிவிலக்கு,ஜீவா ஒரு ஓவியர்,ஒரு திரை விமர்சகர்,ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளர்,ஒரு சினிமாகாரர், ஒரு புகைப்பட கலைஞர்,ஒரு கணினி வரைகலைஞர், ஒரு வாசகர், ஒரு தொழிலகத்தின் அதிபர்,ஒரு பன்மொழி வித்தகர், ஒரு பொதுவுடைமைவாதி,ஒரு திறனாய்வாளர்,ஒரு காலாரசிகர்,ஒரு கலைக்குடும்பத்தவர், ஒரு வழக்கறிஞர் ,ஓவியம் குறித்த பல நிலைகளில் சோதனை முயற்சிகள் செய்த தேர்ந்த ஞானி.சித்ரகலா அகாடமியின் நிறுவனர்,கோவை சினிமா குழுமத்தின் பிதாமகன் ,ஒரு வலைப்பதிவாளர், ............என்று இவரின் பன்முகம் விரிகிறது.

தனது கடந்த கால கலைதாகங்களை தன் நெஞ்சத்தில் நெடுநாட்கள் சுமந்து வந்த ஜீவா,தான் பார்த்த ரசித்த உள்ளூர் மற்றும் உலக சினிமாக்களைப்பற்றிய கட்டுரைகளை ரசனை என்ற இதழில் எழுத, அதன் தொகுப்பாய் நெய்யப்பட்டதுதான் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த "திரைச்சீலை"ஆகும்.நாஞ்சில் நாடுக்காரராக இருந்தாலும் கொங்கு நாட்டில் பிறந்து கிளைத்து வளர்ந்து ரசித்து ருசித்து வடித்துதந்த அந்த பொக்கிஷம் இன்று அவரை ஒரு தேசியவிருதாளராக அடையாளம் காட்டி இருக்கிறது.

யாரால் எதுவால் ஒரு நல்ல கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு புறந்தள்ளப்பட்டாலும் காலம் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு சிம்மாசனம் அமைந்தது அந்த கலைஞனை அதில் அமரவைத்து அழகு பார்க்கும் என்பதற்கு ஜீவா ஒரு தித்திப்பான உதாரணம்.

சனி, 25 ஜூன், 2011

'தகிதா ஊடகக் களம்' -தயாரித்த "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம்

தகிதா-வின் புதிய கிளையான 'தகிதா ஊடகக் களம்' -தின் சார்பாக தயாராகியுள்ள நிழற்படங்களால் உருவாக்கப்பட்ட "பூமித் தொட்டில்" என்னும் சூழலியல் சார்ந்த ஆவணகுறும்படம் விரைவில் முகநூல் தோழர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.
காத்திருங்கள்.

பெயர்:

"பூமித் தொட்டில்"


வகை:

நிழற்பட ஆவணம்


காலம்:

பத்து நிமிடங்கள்

கரு:

சூழலியல் சார்ந்தது


ஒலிக்கலவை

மாண்டேஜ் மீடியா ப்ரொடக்சன்


நிழற்படம் மற்றும் நிழற்படத்தொகுப்பு:

நடராஜன் ஆதிலட்சுமி( மலேசியா)



எண்ணம் - எழுத்து - குரல் - தயாரிப்பு

போ. மணிவண்ணன்(இந்தியா)

திங்கள், 20 ஜூன், 2011


"எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா....!
எனக்கும் ஒரு புத்தகம்கொடுங்க பெரியப்பா.....!"
என்று
நான் படிக்கும்போதெல்லாம்
இடைவிடாது கேட்கும்
இரண்டு வயதாகும்
என் தம்பிமகளின் நச்சரிப்பு
என் பால்யகால மக்குத்தனத்தை
நினைவூட்டி
வெட்கப்பட வைக்கிறது என்னை

ஞாயிறு, 12 ஜூன், 2011

திரைத் திமிங்கிலங்களிடம் சிக்கிக்கொள்ளும் நல்ல மீன்களில் ஒன்று "ஆண்மைத்தவறேல்


மக்களிடம் மசாலாக்களை விற்பனை செய்யும் சினிமா திமிகிலங்கள் நல்ல மீன்களை உயிரோடு வாழவிடுவதே இல்லை.சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஆண்மைத்தவறேல்' திரைப்படம் நல்ல மீன்களின் ஒரு மீன். வெளியான நாளிலிருந்து திரை வணிகக்கடலில் சர்வாதிகார புயல்களுக்கு இடையில் தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது.நல்ல படங்கள் திரையரங்கிலிருந்து விரட்டப்படும் முன்னதாக பார்த்துவிடுவது அந்த நல்ல படைப்புக்கு நாம் கொடுக்கிற

திங்கள், 6 ஜூன், 2011

ஆண்மைத்தவறேல் - திரைவிமர்சனம்


தமிழ்த் திரையுலகின் முதல் இளம் இயக்குஞர் திருவாளர்.குழந்தைவேலப்பன் அவர்களுக்கு கோடித் திரைகலைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.அன்பின் ஆரத்திகள்.'ஆண்மைத்தவறேல்' என்னும் இத்திரைப்படம் ரசிர்களை உணர்வு சார்ந்து சிந்திக்க வைக்காமல் அறிவு சார்ந்து அணுக வைத்திருப்பது தமிழுக்கு புதிது.சிக்கல்களை அறிவியல் பூர்வமாக அணுகுவது எப்படி என்று சொல்லும் அருமையான திரைப்படம் மட்டுமல்ல திரைப்பாடமும் கூட. இதற்காகவே குழந்தை வேலப்பனுக்கு பலத்த கைத்தட்டல்களைத் தரலாம்.

உலகமயமாகி இருக்கும் இந்த நிலையில் பெண்மாமிசப் பசிக்கான வேட்டையில் ஆண்மைத் தவறும் ஆடவர்களையும் ஆண்மைத்தவறாத ஆடவர்களையும் இனம் பிரித்து காட்டியிருக்கும் கோணம் அசாத்தியமானது.ஓவ்வொரு வீட்டில் இருக்கும் யமுனாக்கள் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறார்கள் என்ற குறிப்பு சரியான எச்சரிக்கை. கதை நகர்வு நிஜ நகர்வாகவே பல காட்சிகளிலும் பளிச்சிடுகிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான தகவல் இடைவெளி இப்படத்தில் சரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தந்தையை இழந்து தாயை சுமந்து தன் ஒற்றை ஊதியத்தில் குடும்பத்தை நகர்த்தும் லட்சோப லட்ச யமுனாக்களில் வாழ்வில் ஒரு பாதுகாப்பு வளையத்தை இத்திரைப்படம் வலிமையாக செய்துதந்திருக்கிறது.

இந்த சமூகத்தில் கஞ்சா ஹெராயின் அபின் போன்ற போதை வஸ்த்துக்களின் பட்டியலில் பெண்ணும் இடம்பெறுவது சோகம்.இந்த உலகத்தில் பெரு வணிகங்களில் ஒன்றாக பெண்வணிகம் இருப்பதை இத்திரைப்படம் அடர்த்தியாக எடுத்துக் காட்டியுள்ளது .அதை நாடகத்தனமாக சொல்லாமல்,பூசியும் மெழுகாமல், அதன் பல்வேறு நிலைகளை எடுத்துக்காட்டி அவைகளை வேரறுத்துள்ள ஆண்மை போற்றுதலுக்குரியது.ஒரு கலைஞனுக்கே உரிய துணிவு கம்பீரம் அச்சமற்றத் தன்மையை இந்த படத்தின் இயக்குஞர் குழந்தைவேலப்பனின் நெறியாள்கையில் பார்க்கமுடிகிறது.

'எம் பொண்ணு எங்கடா' என்று யமுனாவின் தாய் கதறும் அந்த சிலவினாடிகளில் கண்கலங்க வைக்கிறார்.ஒரு நடுத்தர குடும்பத்தின் தாயாக வாழ்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பரிதாபத்தையும் அள்ளிக்கொண்டு போகிறார். உண்மையில் .இது யமுனக்களுக்கான கதை மட்டுமே அல்ல ,எத்தனை எத்தனையோ யமுனாக்களின் தாய்களுக்கான கதை. 'என்ன சொன்னானா' என்ற கனத்த குரலில் பேசிக்கொண்டு சிறைக்குள் அட்டகாசமாய் நுழையும் அந்த போலீஸ்காரர் தொடங்கி இறுதிவரையில் வரும் தொடர்ச்சியான காலவர்களை காட்டிய விதம் கண்ணியத்திற்குரியது . இரக்கமும் சமூக அக்கறையும் கண்ணியமும் காவலர்க்கும் உண்டு என்பதை இத்திரைப்படம் திறந்த மனதோடு முன்னேடுத்து வைத்துள்ளது.

தன் காதலியை பறிகொடுத்த கதாநாயகன் தொடக்கம் முதல் இறுதிவரை ஓயாமல் அலைந்து திரியும் ஒவ்வொரு காட்சிகளிலும் பார்வையாளர்களின் இரக்கத்தை ஏகமாய் பெறுகிறார்.நண்பனாக காதலனாக பரிணாமப்பட்ட கதாநாயகன் நாயகியை தேடும் வேட்டையில் ஒரு தந்தையின் ஸ்தானத்திற்கு உயர்ந்ததுதான் அற்புதம்.தனக்கும் நிகழ்விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக நாயகன் போராடவில்லை, தந்தை இல்லாத ஒரு மகளுக்கு உண்மையான காதலன் ஒருவன் தந்தையாக இருக்கமுடியும் என்பதுதான் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ,அண்டை மாநிலம் ,வட இந்தியா, மேலைநாடுகள் என்று எங்கு தொடங்கி எங்கெல்லாம் இந்த பெண் வணிகத்தின் வேர்கள் கிளைகொள்கிறது என்பதையும் எப்படி எல்லாம் சந்தைப்படுத்தப்படுகிறது என்பதையும் வரைப்படத்தொடு வரைந்துகாட்டி இருக்கும் இப்படம் ஆணாதிக்கத்தின் காமத்திரையை கிழித்தெறிந்துள்ளது.இந்த நயவஞ்சக வலைப்பின்னலில் மேலை நாடுகளின் தலையீடு இருப்பதையும் இப்படம் தன் கேமரா கண்களால் குத்திக்காட்டியுள்ளது. கற்பு குறித்த மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பாலியல் பண்டமாக்கப்பட்ட பெண்மை சுற்றுலாதலங்களில் ஆடவர்களின் காமப்பசிக்காக தரம்பிரிக்கப்பட்டு கூவிவிற்கப்படும் சோகம் மனதை பிழிகிறது.

'சம்மதத்தோட கற்பழிக்கரத்துக்கு பேருதா காதல்' என்று திருத்தமாக எதார்த்தம் பேசும் போலீஸ்காரரின் வசனம் இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.நம்பகத்தன்மையற்ற காதல் உறவுகளை நம்பி ஏமாறும் படித்த பெண்கள் இங்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்திய இளைஞர்களின் இரவுகளைத் திருடுவதோடு அவர்களின் வாழ்வியல் கட்டமைப்பைத் தகர்க்கும் மேலை மென்பொருள் நிறுவனங்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிக் கொண்டிருப்பதை இத்திரைப்படம் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் தொடங்கி கோவா கடற்கரை சோலையில் முடியும் இந்த கதையில் யமுனா நதிகள் சீரழிக்கப்பட்டு மாசூட்டப்படுவது கலைதர்மத்தோடு கூடிய குறியீடு. ஓடையாக தவழ்ந்து நதியாக நடந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பெண்நதிகள் கடலில் சங்கமிக்காமல் போகும் துரதிஷ்டங்களுக்கு இந்த ஆண்மைய சமூகமே முழுப்பொறுப்பாகும் என்பதை தவறாமல் சொல்லியிருக்கும் குழந்தையின் ஆண்மை போற்றுதலுக்கு உரியது..சாலையோரத்தில் நடமாடும் ஓராயிரம் மலர்களை பறித்துக்கொண்டு போகும் அந்த ஒற்றை வாகனம் நமக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.அந்த வாகனத்தில் பயணிக்கும் கடத்தல் தலைவன் தொடங்கி கூட்டாளிகள் அனைவரும் வாழ்கிறார்கள்,மிகை எதார்த்தமே இல்லாமல் பார்த்துக்கொண்டது நம்பகத்தன்மையை ஏற்ப்படுத்துகிறது.

'நீங்க பண்ண பெரிய தப்பு என்ன தெரியுமா, பெண்ணா பிறந்ததுதான் அதுலும் கொஞ்சம் அழகா'என்ற வசனம் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்ற எரிச்சலையும் அச்சத்தையும் எல்லா பெண்களிடமும் பற்றவைத்துவிடுகிறது.வெள்ளைக்காரர்களிடம் அன்று நமது தேசத்தை அடகுவைத்தோம் இன்று தேகத்தை அடகுவைக்கிறோம் என்ற கொதிப்பு இன்னும் ஆத்திரத்தை மிகுவிக்கிறது.கோவா உலக சுற்றுலா பயணிகளின் திறந்தவெளி படுக்கையறைகளாக மாறிப்போயிருக்கும் நிலையை துல்லியமான துளைக்கும் எதார்த்தத்தோடு பதிவுசெய்திருக்கிறது இந்த ஆண்மைத்தவறேல்.

இந்தியத் தாயின் மாராப்பிற்கு அந்நியக் கரங்களால் அச்சுறுத்தல் வந்திருப்பதை அவமானத்தோடு பதிவு செய்திருக்கிறது. இன்றைய உலக பெண் வணிகத்திற்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் ஊடகங்களும் இணையங்களும் இருந்து இழிதொழில் புரிவதை சுட்டிக்காட்டி அறிவியலின் கன்னத்தில் பளார் என்று இயக்குஞர் குழந்தை அறைந்திருக்கிறார்.

முதல் காட்சி அடைமழை ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் சோகத்தை சொல்லி அழுவதாய் நமக்கு இறுதியில்தான் உணர்த்துகிறது.போலி வாகனங்கள் போலி மனிதர்கள் போலி வாழ்க்கை என்று போலியாக வாழும் மனிதரில் சில மிருகங்களை ஆண்மைத்தவறேல் வேட்டையாடி இருக்கிறது. பாதகம் செய்பவரைக்கண்டால் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாப்பாக்களுக்கு சொன்ன இந்த வீர வரிகளை குழந்தை நம் அனைவருக்குமே சொல்லி விழிப்படையவும் எதிர்வினைப்புரியவும் செய்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் தோலுறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகளாய் கதாநாயகிகளைக் காட்டும் இன்றைய தமிழ் சூழலில் ,பெண் வணிகம் மற்றும் பாலியல் சார்ந்த கதைக்களமாக உங்கள் ஆண்மைத் தவறேல் இருந்தபோதிலும் அதில் துளியளவேனும் விரசம் கலக்காத உங்களின் கலை நேர்மைக்கு நான் எழுந்து நின்று கைகள் தட்டி தலைவணங்குகிறேன்.அடுத்தது என்ன என்ன என்ற எண்ணத்தை படம் முழுக்க ஏற்படுத்தி இருப்பது உங்களின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கரன்சிகளைப் பெற்றுக்கொண்டு கன்னிப்பெண்களின் கடத்தலுக்கு அடைக்கலம் தரும் கர்நாடகத் தாய், பரிசோதனைக்குப் பிறகு உள்ளூரில் விற்பதற்காய் தரம்பிரிக்கப்பட்ட கேரளத்து பெண் ஆகிய இரு கதாபாத்திரங்கள் மூலம் தமிழ்ப் பெண்ணின் நிலையை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களின் ஆழ்மனப்பதிவு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.உங்களின் கலை அரசியலில் சமரசமும் தேவை.

சுயமரியாதை பாதிக்கப்பட்டதால் 'உயர் போனா மயிரா போச்சு'என்று துணிந்ததை காட்சியாகக்காட்டி ஓடும் வாகனத்திலிருந்து கதவகற்றி பாய்ந்து எதிர்வரும் வாகனத்தால் மோதிவீசப்பட்டு மரணிக்கும் உயர் அதிகாரியின் மகள் கதாபாத்திரம், கதையின் திடீர் திருப்பம்.ஆளில்லா சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அடுத்தடுத்து வந்துபோகும் நாயகன் மற்றும் கடத்தல் தலைவனின் வாகனங்கள் கதையின் பயணத்தில் விறுவிறுப்பை அதிகப்படுத்துகின்றன. கடத்தப்பட்ட வாகனத்திற்கு உள்ளிருந்துகொண்டு துணிச்சலோடு கடத்தல் தலைவனின் அலைபேசியில் அழைப்பைத் தொடரும் காட்சி நடுநடுங்க வைக்கிறது.


கார் குண்டுவெடிக்க காணாமல் போன முன்னாள் காவல்துறை அதிகாரியின் தோற்றமும்,ஏல வெற்றியும் திரைக்கதையில் புதிய பாய்ச்சல்.கதையின் நகவிற்கேற்ப கேமரா கோணங்கள் தொடங்கி கேமரா அசைவுகள் தொடர எல்லாம் அட்டகாசம்.இசை தேவையான இடங்களில் சோகம் இரங்கல் தனிமை வெறுப்பு காயம் கவலை விரக்தி என்று எல்லா உணர்வுகளையும் அளவாகவும் அழகாகவும் வாசித்திருக்கிறது.தேடுதல் வேட்டையில்'அண்டம் பொடிபட' என்ற பாடல் ஆவேசம் கொப்பளிக்கும் சுனாமி பாய்ச்சல்.

இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் கதாநாயகன் தனியாக மாட்டிக்கொண்டானே என்ற வருத்தமும் அவனுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று எண்ணம் மேலிடலும் கதாபாத்திரப்படைப்பிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.வெற்றியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது

உலகின் இன்றைய எரியும் பிரச்னையை தன் சினிமா கிரணங்களால் கொளுத்தி அதற்க்கு காரணமானவர்களை சுட்டு காயப்படுத்தி தன் ஆண்மையை குழந்தை நிருபித்திருக்கிறார்.கரு கதைக்களம் கதைப்பின்னல் கேமரா நகர்வு அர்த்தமுள்ள இசை கதையோடு கூடிய பாடல் மிகை எதார்த்தம் இல்லாத காட்சியமைப்பு கச்சிதமான படத்தொகுப்பு என்று இன்னும் பல சிறப்பம்சங்களோடு உலகத்தரத்திற்கான உன்னத படமாய் இந்த ஆண்மைத்தவறேல் கம்பீரம் கொண்டிருக்கிறது.வழக்கமான சினிமா சட்டகத்திற்குள் சுருங்கிப்போகாமல் தான் சொல்ல விரும்புவதற்கு ஏற்ப கதையை பரப்பி இருக்கும் போக்கு பாராட்டுக்குரியது




தமிழ் சினிமா வரலாற்றில் சிக்கலை உணர்வுப் பூர்வமாக அணுக வேண்டாம் அறிவுப்பூர்வமாக அணுகுங்கள் என்று சொல்லி இருக்கும் படம்தான் இந்த ஆண்மைத்தவறேல்.சினிமா கனவுகளை மட்டும் ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அல்ல என்பதை குழந்தை நிரூபித்திருக்கிறார். உண்மைகள் கலைஊடகத்தில் கலைதர்மத்தோடு முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளன..ஊடகத்துறை மாணவனாக இருந்து இயக்குஞராக அடையாளப்பட்டிருக்கும் நீ,எதிர்வரும் இளைய படைப்பாளிகளுக்கு கலங்கரைவிளக்கம். நேற்று தோள் தட்டினேன் இன்று கைத்தட்டுகிறேன்.இன்னும் இன்னும் நீ திரைத்துறையில் புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.


.



.

வியாழன், 26 மே, 2011

சாம்பார் - சிறுகதை

கலையும் கருணும் சகோதரர்கள்.இருவரும் பக்கத்திலிருக்கும் அரசுப்பள்ளிக்கு போகிறவர்கள் .கலை ஏழாம் வகுப்பு கருண் ஆறாம் வகுப்பு.தினமும் பேருந்தில் பயணப்படும் இவர்களது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.வழக்கமாக அவர்கள் இருவரும் வீடுவந்து சேர்வதற்குள் மாலை ஆறரைமணி ஆகும். அதுவரையிலும் வீட்டுப்பயிற்சி முடித்து கைகால் அலம்பி பூசைமுடித்து விளையாடத் தொடங்கிவிடுவதர்க்கும் பெற்றோர்கள் வீடுவந்து சேர்வதற்கும் சரியாக இருக்கும். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இருவரும் துணிகளை மடித்து வைத்தல் , வீட்டை பெருக்குதல்,எச்சில் பாத்திரங்களை கழுவுதல் , என்று என்ன எல்லாம் தங்கள் சக்திக்கு செய்ய முடிகிறதோ அவை அனைத்தையும் முடித்துவைப்பார்கள்.ஒருநாள் தவறாமல் அந்த பணிகள் அனைத்தையும் பெற்றோர்களின் சிரமம் அறிந்து மனமுவந்து செய்துவருவதுதான் ஆச்சர்யம்.

ஒரு மாலைப் பொழுதில் எல்லா வேலைகளையும் முடித்துவைத்திருந்த அவர்கள் இருவரும் அடுப்பை பற்றவைப்பது என்று முடிவெடுத்தார்கள்.அண்ணன் சொன்னதைப் போல தம்பி கருண் வெட்டப்பட்டு காய்ந்து போயிருந்த தேயிலைச் செடியின் ஒரு சின்ன பாகத்தை வீட்டின் முன் வாசல் பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த விறகடுக்கிலிருந்து எடுத்து வந்தான்.இலைகளற்று எலும்புக்கூடாக போயிருந்த அந்த காய்ந்து சுருங்கிப் போயிருந்த செடியின் பிஞ்சுக்கிளைகளை கலை தன கை விரல்களால் 'டக் டக்' என்று முறித்து முறித்து போட்டான். கருண் அதை சேகரித்தவனாய் உள்ளங்கை நிரம்பிய விறகு சில்லுகளை அண்ணனின் கைகளில் சேர்த்தான்.கலை அதை மெதுவாக உலையினுள் பாதி நுழைத்து பழைய செய்தித்தாள் ஒன்றை நன்றாக சுருட்டி அதன் கீழ்ப்பகுதியில் இடம்பெறுமாறு திணித்தான்.இப்போது அடுப்பு பற்றவைப்பதற்கு தயார் நிலையில் இருந்தது.'அண்ணா நா பத்தவைக்கிறேன்' என்று முந்திக்கொண்டு தீப்பெட்டியுடன் கருணும் வந்து சேர்ந்தான்.மெளனமாக இருந்த கலையின் சம்மதத்தை பெற்ற ஆனந்தத்தில் தன் ஆள்காட்டி விரல்களால் பெற்றியின் உள்புறம் இருந்த பாகத்தை வேகமாக தள்ளினான்.தீப்பெட்டியின் திறப்பு கீழ்ப்பக்கமாக இருந்ததால் இருந்த நான்கைந்து குச்சிகளும் தரையில் சிதறின. கோபித்துக் கொள்ளாமல் கலை குனித்து இத்தோட்டத்தில் முகம் சிவக்க நிமிர்கிறான். முதல் தீக்குச்சியை எடுத்த கலை கருணை ஒருமுறை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு உரசுகிறார்.பற்றவில்லை.இன்னொருமுறை முயற்சி செய்கிறார்.பற்றவில்லை. மூன்றாவது முறை முயலும்போதுதான் அந்த தீக்குச்சியில் இருக்கும் மருந்து உதிரி இருந்ததை அறிந்துகொண்டான்.இப்படியாக தொடர் முயற்சியில் எல்லா குச்சிகளும் உதவாமல் போயின.மார்கழி மாசத்து பிசு பிசுப்பில் நமநமத்து போயிருந்த அந்த தீப்பெட்டியை வாசல் கதவை திறந்து தூர எறிந்தான். அந்த எறிதலில் கலையின் வெறுப்பும் கோபமும் கொஞ்சம் கலந்திருந்தது.



பின் சமையல் கட்டை நோக்கி நகர்ந்ததும் மஞ்சள் ஒளிவீச ஏரியும் காகிதத்தைத் துண்டையும் அது கருணின் கைகளில் இருப்பதையும் அறிந்து ஆபத்தை தவிர்க்க தன் கைக்கு பத்திரமாக மாற்றிக்கொண்டான்.'தீப்பெட்டிதான் யால்லையே அப்புறம் எப்படி இந்த காகிதத்தே பத்த வச்சே'என்ற கேள்வியைக் கேட்ட கருணிற்கு தான் சாதனை நிகழ்த்திவிட்டதாக பெருமிதம் ஏற்ப்பட்டது.அந்த முடிக்கிலேயே 'அண்ணா நாம இப்பதானே சாமி கும்பிட்டோ ,அதுக்குள்ளே மறந்துட்டியா ...விளக்கிலிருந்து பத்தவச்சிகிட்டேன்'என்று தெளிவாக பதிலளித்தான்.அவனின் அந்த சமாயோசித்த ஞானத்தை மனதிற்குள் பாராட்டியதைப் போல கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டுவிட்டு அந்த காகித நெருப்பைக் கொண்டு ஏற்கனவே உள்ளே வைக்கப்பட்டிருந்த காகிதத்தோடு சேர்த்து அது பற்றி எரியுமவரை அதன் அருகிலேயே கைகளால் பிடித்துக்கொண்டு நின்றான்.

மேட்டுச்சாலையில் வாகன சத்தம் கேட்டு கருணும் அடிக்கொருதரம் வீட்டிற்கு வெளியில் பொய் முகட்டில் தெரிகிற முதன்மைச் சாலையில் வாகனங்கள் போகிறதா என்று பார்ப்பதும் வருவதுமாக இருந்தான்.வாகனமும் பெற்றோர்களும் வந்ததாக தெரியவில்லை.'அண்ணா இன்னும் அம்மாவையும் அப்பாவையும் காணோமே' என்று ஏக்கத்தோடு கேள்விகேட்ட கருணிற்கு 'இப்ப வர்ற நேரமாச்சு'என்று அடுப்பை பற்றவைத்துக்கொண்டே பதிலளித்தான் கலை.

காகிதம் எரிந்து மேலிருந்த தேயிலை செடியின் சில்லுகளை எரித்து கொழுந்துவிடத் தொடங்கிய அந்த அக்கினியோடு புகையும் திடீர் கக்கிவிட, கருணும் கலையும் செய்வதறியாது புகையில் மாட்டிக்கொண்டு 'லோக் லோக் ' என்று இருவரும் மாறிமாறி இருமித் தள்ளினார்கள்.

இதற்கிடையில் கலை சமையலறை சன்னலை திறந்துவிட அடைந்திருந்த புகையில் ஒரு கால் பகுதி மட்டுமே வெளியேறி இருந்தது.கருண் ஐந்தாம் வகுப்பில் படித்த நோட்டு புத்தகத்தின் அட்டையை கிழித்து கொண்டுவந்திருந்தான்.'என்னடா இது , என்ன பண்றே' கலை கேட்டுமுடிப்பதற்கு முன்னதாகவே கருண் நோட்டு அட்டையால் இடத்தும் புறமும் வலது புறமும் மேலும் கீழும் அசைத்து புகையை வெளியேற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டான்.இந்த இருவரின் பிரயத்தனத்தால் புகை ஓரளவிற்கு வெளிநடப்பு செய்திருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஊதுகுழலை எடுத்து கலை புகையும் உலைக்குள் தான் உயிர்க்காற்றை சிதறாமல் கவனமாக செலுத்தினான்.மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நெருப்பு லேசாக உயிர்ப்பெற்று சுடர்விட்டு சுவாலையாய் மேலெழுந்தது.அந்த சில கணங்களில் புகை எங்கோ காணாமலே போயிருந்தது.

பாத்திரம் வைக்கும் வாய்ப்பகுதியில் வழியாக நெருப்பு நாக்கை நீட்டி தனக்கான உணவை கேட்டு நின்றதைப் போல நீண்டு எரிந்தது.இப்போது கலை சோறு சமைக்கும் பாத்திரத்தை அதன் மீது வைத்தான்.கருண் அதற்குள்ளாக தன்னேர்கொண்டு வந்திருந்தான்.கலை கருண் கொண்டுவந்த தண்ணீரை பத்திரமாக பத்திரத்தில் வாய்ப் பகுதியின் வழியாக மிகுந்த எச்சிரிக்கையோடு கவனமாக ஊற்றினால்.தண்ணீரில் நெருப்பை அணைந்தால் மீண்டும் பற்றவைக்க முடியாது என்ற பயம் கலையை விட்டு அகன்றிருக்கவில்லை.அலுமினியப்பத்திரத்தின் முதலடுக்கு வளைவு வரையில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது.அப்போதுதான் இதுவரையிலும் இவர்கள் சோதனை முயற்சி செய்திராத நிலையில் கருண் ஒரு யோசனை சொன்னான்.'அண்ணா தினமும் சாதம் வைப்போம் , அதுக்குள்ளே அம்மா அப்பா வந்திடுவாங்க ,இன்னிக்கு இன்னும் வரலே ,பேசாமே சாம்பார் வைச்சு பாக்கலாமா' என்ற யோசனையை முதலில் பெரிய வேலையாக கலை நினைத்திருந்தாலும் பிறகு , சரி செய்து பார்த்தால்தான் என்ன என்று சோதனை முயற்ச்சியில் இருவரும் களமிறங்கி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் சமையல் குறித்த பார்த்த அனுபவம் மிகவும் அதிகம்.அந்த அனுபவம் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும்.

அதற்குள்ளாக அடுப்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.'கருண் பருப்பு சாம்பார் செய்ய எல்லா பொருளும் இருக்கா, எதுக்கும் போயி கொஞ்சம் பாத்துட்டுவா'என்று கலை கட்டளை இட்டான் . எல்லாம் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் வண்ணமாக தலையை ஆட்டிக்கொண்டு வாத கருண்,'அண்ணா முதல்லெ ஒரு டம்ளர் துவரம் பருப்பை இதுலே போட்டு கொதிக்கவைக்கணும்' ' ம்ம் சரியாதா சொல்றே, சரி ஒரு டம்ளர் பருப்பு எடுத்தா' கருண் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது சில்வர் டம்ளரை வைத்து கவனமாக பிளாஸ்டிக் டின்னில் இருந்த பருப்பை கவனமாக சைத்தான்.பருப்பு அந்த டம்ளரை பிரமிடைப்போல நிறைத்து கொஞ்சம் உதிரிகளை தரையில் சிதறவிட்டது.கருணிடமிருந்த கலை அந்த பருப்பை வங்கி அதை அப்படியே கொதிக்கும் பாத்திரத்திற்குள் போட்டுவிட்டான். வேகும் பருப்பை கவனமாக உளவுபார்த்த படியே இருந்தான் கலை. அதற்குள் கருண் சிதறிய பருப்பு சிதறல்களை சேமித்துவிட்டிருந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் பருப்பின் வாசனை ஆவியின் வழியே நாசியை வந்தடைந்தது,இந்த வாசனைக்கே பாதி சாம்பார் செய்து முடித்துவிட்டதாக இருவரும் திருப்தி பட்டுக்கொண்டார்கள்.ஒரு கட்டத்தில் கலை பருப்பு எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சாம்பார் கரண்டி ஒன்றை உள்ளே நுழைத்தான். நீராவியில் அனல் கலையில் வலது முன்னங்கைகளை பதம் பார்த்தன.விரைந்து எடுத்த அந்த கரண்டியில் ஒட்டி இருந்த சில பருப்பு துண்டங்களை தொட்டு அழுத்திப்பார்த்தான், பருப்பு வந்தபாடில்லை.

' கருண் , பருப்பு வேந்துகிட்டிருக்கு அடுத்து என்ன போடணும்' என்று அடுத்த சமையல் குறிப்பை கருனிடம் கேட்க 'பருப்பு வெந்ததும் கிழங்குதான் போடணும்,என்னண்ணே இதுகூட தெரியாதா?'கருணின் வினா கலையை சமையல் கத்துக்குட்டி என்று குறிப்பிட்டதைப் போல உணர்த்தியது.'அது சரி ஒரு நாலு கெழங்கு கொண்டா'என்றான் கலை.கூடைக்குள் கைகளைத் துழாவி விட்டு என்மாந்தவனாய் நிமிர்ந்த கருண் 'அண்ணா நாம பருப்பு சாம்பார் வைக்க முடியாது 'என்று பேரதிர்வு குண்டை கலையின் முன்னாள் வீசினான்.ஒன்றும் புரியாதவனாய் நின்ற கலை'என்னடா சொன்றே'என்று கேட்டான்.'இல்லண்ணே பருப்பு சாம்பாருளே அம்மா எப்போதும் கிழங்கு போட்டுதா செய்யும், அது இல்லாமே சமைக்கவே முடியாது' என்று சமையல் வல்லுஞனைப் போல திட்டவட்டமாக அறிவித்ததும்,தங்கள் திட்டம் தொல்வியடைத்து விட்டதைப் போல வருத்தமுற்ற கலை 'சரி இப்ப என்னதா செய்யறதா?'மீண்டும் கேள்விகளாய் கருணை துளைத்தான்.'அண்ணா பேசாமே அந்த செம்புலே இருக்குற தண்ணியே வடிச்சி பருப்பே தனியா எடுத்து கொஞ்சம் காய வச்சி அம்மா வர்றதுக்குள்ளே அந்த தப்பியிலேயே போட்டுடலாமா' என்று சொன்னது கலைக்கு நல்ல யோசனையாகப் பட்டது.

குளிக்கும் போது துடைப்பதற்காக கதவில் தொங்க வைக்கப்பட்டிருந்த டவலை எடுத்து வந்த கலை கொதிக்கும் அந்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியைச் சுற்றி அரைவட்டவடிவில் பிடித்து மெதுவாக இறக்கிவைத்தான்.பிறகு வீட்டின் பின்பகுதிக்கு ரகசியமாக சென்று கொதிக்கும் பாத்திரத்தை தரையோடு வைத்து சாய்த்து சுடும் நீரை கால்களில் தெரித்துவிடாதபடி மெதுவாக வெளியேற்றி முடித்தான்.ஈரம் உலராமலும் லேசாக வெந்த நிலையிலும் இருந்த பருப்பு சிதறல்களை சேகரித்துக்கொண்டு அவைகளை பழைய செய்தித்தாள்களுக்குள் வைத்து ஈரம் உரியில் அளவிற்கு சுருட்டிக்கொண்டான்.ஒரு வழியாக பருப்பு பழைய நிலைக்கு இவர்களது முயற்ச்சியால் வந்திருந்ததில் இருவருக்கும் திருப்தி.இதை எங்கு வைப்பது என்று இடம்தேடும் போதுதான் வாசலில் அம்மா அப்பாவின் அரவம் கேட்டது.கருண் ஓடிப்போய் அவர்களை வரவேற்க போயிருந்த அந்த இடைவெளியில் கலை அந்த பருப்புகளை எடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஏற்கனவே இருந்த பருப்புகளோடு போட்டுவைத்துவிட்டான்.ஏதும் நடக்கவில்லை என்பதைப் போல இருவரும் நடந்துகொண்டார்கள். இருந்தாலும் அம்மா கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயமும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.வந்து செய்ததும் அம்மா முதல் வேலையாக அடுப்படிக்குள் நுழைந்து சமையலில் இறங்கி விட்டால். அன்று சுண்டல் கொழம்புதயாரிக்கப்பட்டதால் இருவரும் தப்பித்துக்கொண்டார்கள்.

மறுநாள் அம்மா சமைப்பதற்காக தானியப்பத்திரங்களை எடுத்தபோது பருப்பு டின் பூஞ்சை பிடித்திருந்ததை நோட்டமிட்டாள்.பருப்பை சுற்றிலும் பச்சை பசேலென ஏதோ படர்ந்திருந்தது.அம்மாவால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லை.கருணும் கலையும் வாய்த்திறக்கவில்லை.அம்மா அந்த பருப்பை சமைக்காமல் விட்டுவிட்டாள்.மறுநாள் மாலையில் அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்னதாகவே அந்த ஈரம்படிந்து கெட்டியாய் இருந்த பருப்புதுண்டத்தை மெதுவாக வெளியில் எடுத்து வீசிவிட்டு.சுவையான கமகமக்கும் பருப்பு சாம்பார் வைத்திருந்தார்கள்.பிள்ளைகளில் சாமர்த்தியத்தைப் பற்றி அம்மா அப்பாவிடம் அன்றைய தினம் முழுக்க பெருமை பேசிக்கொண்டே இருந்தாள்.

புதன், 25 மே, 2011

அறை எண் 17 -சிறுகதை

படித்துவிட்டு வேலைதேடும் ஓர் இளம் பட்டதாரி ஆன கண்ணனுக்கு சென்னை என்றாலே அலர்ஜி . கண்ணன் சென்னையைத் தவிர்ப்பதற்கு வெயில்,பரபரப்பு,நெரிசல்,வாகனங்கள்,புகை என்று பலவும் காரணம். .ஆனால் சென்னையை நோக்கி ஓடிவரவேண்டிய நல்ல திருப்பம் கண்ணனது வாழ்வில் நிகழ்ந்தது.



அதிலிருந்து கடந்த ஒருவருடமாக கண்ணன் ஒரு முழுமையான சென்னை வாசி.தனியார் நிறுவனத்தில் சின்ன சம்பளத்திற்கு பெரிய வேலைக்கிடைத்ததில் கண்ணனுக்கு நிறைவுதான்.கண்ணனுக்கு ஊதாரித்தனங்கள் இல்லாததால் அளவான ஊதியம் அவனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவில்லை. ஒருவருடம் முடிந்திருந்த போதிலும் கண்ணனுக்கு நன்கு பரிச்சயம் ஆகாத நகரமாகத்தான் சென்னை இருந்தது.காலையில் வேலைக்கு கிளம்பினால் மாலை நேராக மேன்சனுக்கு திரும்பிவிடும் அவனுக்கு இந்த சகமான வாழ்க்கை பிடித்திருந்தது.



மாத வாடகைக்கு தங்கி இருக்கும் அந்த மேன்சனில் தரைத்தளத்தில் அறை எண் 18 -தான் கண்ணன் தங்கி இருந்தான்.எல்லோரும் மாத வாடகைக்கு இருப்பவர்கள் எல்லா முகங்களும் தினந்தோறும் பார்த்து பழக்கப்பட்ட முகங்களாகிவிட்டிருன்தது கண்ணனுக்கு.ஆனால் யாரிடமும் அதிகம் பேசும் பழக்கம் இல்லாத கண்ணன் எல்லோரிடமும் புன்னகைத்து மெளனமாக வணக்கம் சொல்லிவிடுவது வழக்கம்.



காலையில் எல்லா அறைகளும் பூட்டியே இருக்கும் என்பதை தான் கிளம்பும் நேரத்தில் கதவு தாழிடும் சத்தத்தை வைத்து கண்ணன் உறுதி செய்துகொண்டான்.மாலை திரும்பும்போது சில கதவுகள் திறந்தும் பல கதவுகள் மூடியும் இருக்கும்.இப்படியாக நாட்கள் நகர்ந்த அந்த மேன்சனில் அறை எண் 17 மட்டும் மூடப்படாமல் இருப்பதையை அறிந்த கண்ணுக்கு யார் அங்கு நாள் முழுக்க இருக்கிறார்கள் என்று அறிய ஆர்வம் மேலிட்டது.



மேன்சன் பணியாளர் ஒருவரிடம் அந்த குறிப்பிட்ட அறையில் இருப்பது யார் என்று ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் கேட்டேவிட்டான்.அவரும் பதிலளிக்கவே ட கண்ணனுக்கு அவரை சந்திக்க வேண்டும் பேசவேண்டும் என்ற விருப்பம் எத்தனித்தது.அன்றிலிருந்து மேன்சனுக்குள் நுழையும்போதெல்லாம் அந்த அறையில் இருப்பவரை பார்த்தும் பார்க்காததைப் போல பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம்.காலையில் ஒருமுறையும் மாலையில் மறுமுறையும் என்று ஒருநாளிற்கு இருமுறை அந்த அறையை நோட்டமிடுவது கண்ணனுக்கு வழக்கமாய் இருந்தது.



மேன்சனின் வரவேற்பு அறையை கடக்கும்போது நடை பாதையின் இடது புறமாக இருக்கும் முதல் அறைதான் அது.எப்போதும் குழல்விளக்கின் வெளிச்சத்தின் பளிச்சிடும்.இருவர் தாங்கும் அறைக்கு பொருத்தமான அகலமான வெண்ணிறப் படுக்கை. மெத்தை முழுக்க துவைக்கப்பட்ட துணிகளில் அடுக்கு,ஒரு பிளாஸ்டிக் தட்டில் குவியல் குவியலாய் மாத்திரைகள்,ஒரு தமிழ் மற்றும் மற்றொரு ஆங்கில நாள் இதழ் , என்று இன்ன பிறவும் மெத்தையை ஆக்கிரமித்து இருக்கும்.கட்டிலின் அருகில் சின்னதாய் ஒரு குட்டி மேசை.அந்த மேசையில் டீ பிளாஸ்க் ஒன்றும் இரு ஸ்டீல் டம்ளர்களும் சில பழத்தோல்களும் கட்சிப் பொருளாக இருக்கும்.டீபாயிக்கு முன்பாக ஒரு பிரத்யேக நாற்காலி.அதை முழுக்க நிரப்பியதைப்போல தன் பருத்த உடம்பை பொருத்தி கட்சிதமாக அவர் காட்சித்தருவார்.



சற்று அகலமாக ஏற்றம் கொண்ட நெற்றி,கூர்மையான நீளமான மூக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைக்காட்டும் நரைத்த முடிக்கற்றைகள் ,சதைப்பிடிப்பான உப்பிய கன்னங்கள்,எடையில் சதத்தைத் தாண்டும் பருமனான உடல்கட்டு , அகன்ற தேகத்தில் முன்னுக்கு எட்டிப்பார்க்கும் லேசான தொப்பை,மார்பும் வயிறும் சந்திக்கும் இடுப்பிற்கு சற்று மேல்பகுதியில் தன் வெள்ளை வேட்டியை முட்டுக்கொடுத்ததைப் போல கட்டி இருந்தார் அவர் .வேட்டிக்குள் வெள்ளை நிற கை பனியன் நுழைந்திருக்கும்.அவ்வப்போது கண்கண்ணாடி அவரின் மூக்கின் மேல் ஓய்வெடுக்கும்,பின்னர் இறங்கிக்கொள்ளும்.கூர்மையான கவனிப்பை வெளிப்படுத்தும் வகையில் அகலமான கண்கள் சுவற்றைப் பார்த்து வேறிப்பதைப் போல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரியும் .ஆனால் அவர் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் டிவியைத் தான் அப்படி பார்த்துக்கொண்டிருப்பார்.



அவரிடம் பேசவேண்டும் என்ற என்னத்தை கண்ணனது உள்ளுணர்வு அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டே இருந்ததை கண்ணன் உணரத் தவறவில்லை.ஒரு மாலை பொழுதில் வேலைமுடித்து திரும்பிய போது வரவேற்பரையில் சிறிதுநேரம் மின்விசிறியின் காற்றை கடன்வாங்கியப்படி கண்ணன் அமர்ந்திருந்தான். 'என்ன சார் வேலைக்கு போயி வந்துட்டீங்களா' என்று ரிஷிப்ஷநிஸ்ட் கேட்ட கேள்வி கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது.'ம்ம் முடிஞ்சது.. என்னா வெயில் ' என்று கண்ணன் பதிலுடன் தன் அலுப்பையும் தெரிவித்தான்.''ரூம் நண்பர் 17 லே இருக்கும் சாருகிட்டே பேசினீங்களா' என்று மறுகேள்வி கேட்டான்.' நானு பேசணும் பேசணும்னு இருக்கே, சந்தர்ப்பமே அமையலே' என்று தன் விருப்பை தெரிவித்தான் கண்ணன். கண்ணனின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அந்த மேன்சன் பொறுப்பாளன் 'வாங்க சார் நா அறிமுகப்படுத்தி வைக்கிறேன்' என்று முன்னோக்கி நடந்து என்னை அந்த அறை அருகில் அழைத்துச் சென்றார்.சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஒரு வித சங்கோஜம் கண்ணனை தொற்றிக்கொண்டிருந்தது.



கண்ணனை அழைத்துக்கொண்டு போனவர் அந்த அறையின் வாசலில் நின்றதும் 'வாங்க வருசை ' என்று அவரை அழைத்தார்.தனக்கு பின்னால் நிற்கும் கண்ணனை வருசை திரும்பி பாத்துவிட்டு 'வாங்க சார்' என்று கண்ணனை முன்னிறுத்தினார்.சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க அவரை கண்ணன் தன் இரு கைகளையும் கூப்பி 'வணக்கம்' என்றான். அந்த அறிமுகத்தில் சுவாரஸ்யப் பட்டவராய் முகம் மலர்ந்து 'வணக்கம் உள்ளே வாங்க ..உக்காருங்க' என்று மிக சகஜமாக அழைக்கத் தொடங்கியது கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



கொஞ்சமாக இடமிருந்த அந்த மெத்தையில் ஒரு மூலையில் அமர்ந்து அமராததைப் போல கண்ணன் அமர்ந்துகொண்டான்.அறிமுதத்தை முடித்துவிட்டது வருசை தான் அலுவல்களுக்கு திரும்பிவிட்டார்.இப்போது அந்த அறையில் கண்ணனும் அவரும் மட்டும்தான்.பேராசிரியர் என்பதை அறிந்த கண்ணனுக்கு அவர்மீது இன்னும் மரியாதை அதிகமானது. அந்த பேராசிரியரிடமிருந்து அழகாய் சுவாரஷ்யங்களோடு உரையாடல்கள் தொடங்க மரியாதையும் அக்கறையும் கலந்த பதில்களால் கண்ணன் எதிர்வினை புரிந்துகொண்டிருந்தான். மெய்மறந்த இவர்களின் உரையாடல்களில் நேரம் முன்னிரவை தொடங்கிவைத்திருந்தது.முதல் சந்திப்பு போன பிறவியில் உறவின் தொடர்ச்சியைப் போல இருவரையும் உணரவைத்திருந்தது.



உரையாடிய அந்த பொழுதுகளில் என் கண்களை அதிகம் உறுத்தியவை வகை வகையான மிகுந்திருந்த வண்ண வண்ண மாத்திரைகள், இடத்துபுரத்து சுவற்றின் மூலையில் கொஞ்சம் சாய்ந்தபடி நின்றிருந்த மரத்தால் செய்யப்பட்டிருந்த ஒற்றை கைத்தடி,இன்னும் சிலவும் எனக்கு அவர்மீது இனம்புரியாத இரக்க உணர்ச்சியையும் அன்பின் மிகுதியையும் கண்ணனிடம் ஏற்படுத்தின.எப்போதும் தனிமையில் மருந்துகளோடு வாழும் அவரோடு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆறுதலாய் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தவனாய் அவரிடமிருந்து அன்று விடைப்பெற்றிருந்தான்.இந்த சந்திப்பும் உரையாடல்களும் அவருக்கு மட்டுமல்ல தனியாக இருக்கும் கண்ணனுக்கும் ஒரு நிறைவைத் தந்திருந்தது.தன் தந்தையை விட்டு தொலைவில் இருக்கும் கண்ணனுக்கு அவருடனான தொடர்பு இல்லத்தில் இருப்பதைப் போன்ற ஆறுதலை ஏற்படுத்தியது.



காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பும் வேகத்தில் அந்த அறையை கடக்கும்போது அவரின் முகம்பார்த்து 'வணக்கம்' சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான்.மாலையிலும் அதேதான். இரவில் உணவு அருந்தியபிறகுதான் பதினேழில் கண்ணன் வருகைப்பதிவைக்கொடுப்பான்.



கண்ணனைப்பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்ட அவர் தன்னைப்பற்றியே சொன்னதில்லை என்பது கண்ணனுக்கு ஒரு வெறுமையாக இருந்தது.பிறகு ஒரு சந்திப்பில் கண்ணன் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இயல்பான கேள்விகளில் இயல்பான பதில்களை கேட்டுப்பெற்றுக்கொண்டான்.பேராசிரியர் கண்ணனின் நல்ல குணத்தை அறிந்து திறந்த புத்தகமாகவே தன் மனம் திறந்தார்.பேராசிரியருக்கு திருமணமானது ,துணைவியார் உடல்நலமில்லாமல் உறவினர்வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, தான் சிகிச்சைக் காரணமாக சென்னையில் தங்கி ஓய்வூதியத்தில் மருத்துவம் பார்ப்பது என்று பலவும் கண்ணனுக்கு தெரிய வந்தன.கண்ணன் அவரில் நிலைக்கு தன்னுள்ளேயே வருந்திக்கொண்டான். அவரது பிள்ளைகளைப்பற்றி கேட்கவேண்டும் என்று ஆவல்கொண்டிருந்த கண்ணன் மருநாளைக்காக காத்திருந்தான்.



மற்றொருநாள் மாலைப் பொழுதில் நேரே பேராசிரியரின் அறைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு மேன்சனில் நுழைந்த கண்ணனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.அந்த குறிப்பிட்ட அறை வழக்கத்திற்கு மாறாக பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையைத் தாண்டி கண்ணனுக்கு செல்வதற்கும் கூட மனதுவரவில்லை. தளர்ந்துபோய் தனது அறையில் அடைந்துகொண்டான் கண்ணன்.இரவு முழுக்க அவரின் நினைவாகவேன் இருந்தான். விடிந்ததும் சற்று முன்னரே கிளம்பி நகர்ந்த கண்ணனுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. அந்த அறை திறந்த நிலையில் விளக்கின் வெளிச்சத்தில் நிறைந்து வழிவதைப் பார்த்து மகிழ்ச்சி உற்றவனாய் நெருங்கினான்.வேறுயாராவது இருக்கப்போகிறார்களோ என்ற சந்தேகமும் கண்ணனுக்கு வந்தது.கடக்கும் சாக்கில் வாசலை லேசாக நோட்டமிட்டபோது வழக்கமாக பார்ப்பதைப்போல பேராசிரியர் அமர்ந்திருந்தார்.நான் வினாவை எழுப்புவதற்கு முன்னதாகவே அவர் முந்திக்கொண்டு' ''நேத்தைக்கு எம் பையனே பாக்கலான்னு போயிருந்தே.வர்றதுக்கு ரொம்பவும் நேரமாயிடுச்சு'என்றார். கண்ணனது கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்தில் கண்ணனது மனம் நிறைத்தது .



மறுநாள் வேலைக்காக வேகமாக போய்க்கொண்டிருக்கும்போது மேன்சன் பொறுப்பாளர் வருசை என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.'வாத்தியாரே பாத்தீங்களா' என்று கேட்க 'ஆமா பாத்தே ..பேசினேன்' என்று பதிலளித்த கண்ணனுக்கு 'பிள்ளையைப் பார்க்க போனதா சொன்னாரா'என்று மீண்டும் வினாவினால் தொடர்ந்தார்.'ஆமாம்'.'இப்படி ஒரு வயசுலே இருக்குற தகப்பனே இந்த காலத்து பிள்ளைங்க பாத்துக்கறது பெரிய புண்ணியம்தானே' என்று கண்ணன் நிறைவோடு பதிலளித்ததும்.'இல்லே சார் , நேத்திக்கு அவரு டாக்டர்கிட்டே போனாங்க,பையனே பாக்க போகலே'என்று வருசை சொன்ன பதில் கண்ணனுக்கு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது.'அப்பா ஏ அவர் அப்படியொரு பொய்யே சொல்லணும்'என்று கண்ணன் திருப்பிக்கேட்டான்.வருசை உண்மையைத் திறக்கிறான் 'அவருக்கு உண்மையில் புள்ளங்க இல்லே சார்,வயசான காலத்துலே யாருக்கும் உபத்திரமா இருக்ககூடாதுன்னுட்டு இப்படி வந்து தங்கி இருக்காரு, பென்சன் பணத்தை வாங்கிக்கிட்டு உடம்புக்கு தானே மருத்துவம் பாத்துகிட்டு வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்காரு' என்றதும் கண்ணனுக்கு மனதில் அதிர்ச்சியும் கண்ணில் துளிகளும் நிறைந்துகொண்டன.



அன்றிலிருந்து இப்போதெல்லாம் கண்ணன் அந்த அறைக்கு அடிக்கடி சென்று அதிக நேரம் செலவழித்து ஆறுதல் மொழி பேசி சின்ன சின்ன உதவிகள் செய்து வருகிறான் .தனக்கு பிள்ளை இல்லை என்பது கண்ணனுக்கு தெரியாது என்று அந்த பேராசிரியர் இன்னமும் நினைத்துக்கொண்டார். ஆனால் கண்ணனோ காலப்போக்கில் முழுமையான பிள்ளையாகவே மாறிப்போயிருந்தான்.