வியாழன், 29 ஜூலை, 2010

நிரபராத மரங்கள்

கொடூரர்களோடும்
கூர் ஆயுதங்களோடும்
பவனி வந்த -அந்த
நடமாடும் தூக்குமேடை
தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
தூக்குதண்டனை கைதிகளை
பொதுமக்கள் முன்னிலையில்
ஒருவர் பின் ஒருவராக
வெட்டிச் சாய்த்து
கொன்று குவித்தது .

இவர்களின் குருதி
இங்கே வழிய
பெற்ற மகவுகளை
பறிகொடுத்த இயற்கை அன்னை
கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் .

பசுத்தாய் பசித்தாய்

சணல் கயிறுகளால்
கிழிபட்டு குருதிகசிந்து
சீழ் பிடித்திருந்த
உள்நாசி வலிகளையும்;

கூரிய நகங்களால்
பீய்த்தெரியப்படுவதைப் போல
கறக்கப்பட்ட முலைக்காம்புகளின்
ரணங்களையும்;

ஞாபகப்படுத்துவதே இல்லை

தன் கன்றுக்கு
கொஞ்சம்கூட வைக்காமல்
தங்கள் பிள்ளைகளுக்காக
வளர்ப்பவர்கள் வாரிக்கொண்டு போகும்போது

ஞாபகப் படுத்துவதே இல்லை
தாய் பசுக்கள்.

மெய்யெழுத்து

காகிதமும் கிடைக்கவில்லை
எழுதுகோலும் இருக்கவில்லை
கவிதை வர எத்தனித்த நேரம்...
இருந்தபோதும்
ஒரு வழியாக
கவிதை எழுதி முடித்தேன்.

அவள் விழிகளின் மைதொட்டேன்
என் விரல்களை தூரிகையானது .

அவளது தோள்கள்
கவிதை காகிதமாகியபோது.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஒப்பாரி

ஊர்கூடி அழும் சத்தம்
எல்லா ஜீவராசிகளின்
காதுகளில் கேட்கிறது.
யாரோ ஒருவர் இறந்துபோய் இருந்தார்.

அந்த பூதவுடல் மீது
அஞ்சலிக்காக
கோடிமலர்களின் கழுத்துகள்
அறுக்கப்பட்டு போடப்பட்டிருந்தன ..

இப்போது கேட்கிறது
அங்கே
தேனீக்களின் ... ஒப்பாரி

பண்ணி வளர்ப்பு

early morning எழுந்திருந்ததும்
brush பண்ணி
wash பண்ணி
clean பண்ணி
iron பண்ணி
dress பண்ணி
fresh பண்ணி
drive பண்ணி
work பண்ணி
என்றெல்லாம் சொல்லும் தமிழா!
செந்தமிழும் நாப்பழக்கம் எனபது
இதுதானா?

பண்ணி வளர்ப்பை நிறுத்தி
தமிழ் வளர்ப்பது என்று?

சனி, 24 ஜூலை, 2010

கலியுக குறிப்புகள்

பிசாசு வெயில்;
பேய் தாகம்;
அஞ்சு பூதங்களின்
அச்சுறுத்தல் ;
எலும்புக்கூடுகளாய் மரக்கிளைகள் ;
நிழலாடைஉடுத்தாத
நிர்வாண பூமி ;

முற்றாக வறண்டிருந்த நாக்கு;
வெப்ப புகைப்போக்கிகளாய்
தகிக்கும் நாசித்துவாரங்கள்;
காற்றின் விசம்தின்ற
நுரையீரல்;
கங்குகளாய் சுடும் கண்கள்;
எலுப்பு போர்த்த சதை;
இவைகளை எங்கும் காணமுடிகிறது.

பூதங்களைக்கொன்ற மனிதர்களாலும்
மனிதர்களைக்கொல்லும் பூதங்களாலும்

முள்ளும் மலரும்

அன்பே !
உன் புன்னகை மொட்டினை
பூவாக மலர்த்து
என்
கருவேல மரங்களில்
கனகாம்பரங்கள் பூக்கட்டும்

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்