சனி, 29 மே, 2010

தோற்றுப் பழகு

யாரேனும்
உள்ளுறுத்தும் படியாய்
ஈனப்பார்வை பார்த்தால்
பதிலுக்கு
ஈரப்பார்வை பாருங்கள்.

வெடிக்க ஒலிக்கும் - பிறரின்
எக்காளச் சிரிப்பைவிட
சலனமற்ற
அடர்த்தியான மெளனம்
சக்தி வாய்ந்தது.

முத்துத் தண்டுவடத்தை - யாரும்
முறித்துப் போடவில்லை.
நிமிர்ந்து பாருங்கள்
தாழ்வு மனப்பான்மை
குனிந்துகொள்ளட்டும்.

நேற்று விழவைத்தவர்களை
இன்று அழவைப்பவர்களைத்
தொழுது வையுங்கள்.
விழவைத்து அழவைத்து - உங்களை
எழவைப்பவர்கள்
அவர்கள்தான்.

செந்தணலாய் எரியும்
அவமானச் சிவப்பை - உன்
கன்னங்களில்
காணத் துடிப்பவர்களுக்குக்
குளிர்நிலவாய் காட்சிகொடுங்கள்.

பள்ளம் பறித்தால்
இரண்டையும் கற்றுக்கொள்ளுங்கள்
விழுவதையும் எழுவதையும்.

சரமாரியாய் - உங்களை
குறிவைத்துப் பாயும்
சரங்களை சேமித்து
செய்துகொள்ளுங்கள்
உங்களுக்கான வலிய கேடயம்.

உங்கள் மீது
கல்லெறிகிறவர்களைக் கைத்தொழுங்கள் - அந்த
கற்களை அடுக்கிவைத்தால்
இமயம் செய்யலாம்.

யாரேனும்
சொற்களை முள்ளாக்கி
கீறினால் - இதயத்தில்
உழவு நடப்பதை
வலியுடன் மகிழுங்கள்.

நகுதல் ஒலிகளை
நாத கீதமாய்
நுகர்ந்து பாருங்கள்.
திட்டுமொழிகள் கூட
தித்திக்கும் மொழியாய் இனிக்கும்.

பொடிவைத்து பேசினால்
படி வைத்து பேசுங்கள்.

உளைச்சல்களே
விளைச்சல்கள் தரும்
வருத்தங்களே
திருத்தங்களைத் தரும்.

கை கொட்டிச்சிரித்தால்
கெட்டிச்சிரிப்பை கொடுங்கள் .

எல்லோருக்கும் பிடிக்காத சனம்
பிடித்தசனம் ஆகட்டும்
'விமர்சனம்'.

சிக்கிக் கொள்ளாதீர்கள்
கவலைகள்
வலைகள் வைத்திருக்கின்றன.

வலியோனாய் வாழ்ந்து
எளியோனாய் காட்சிக்கொடு

வாழ்க்கையில் பயணப்படுகிறபோது
பாதங்களைப் பதம்பார்க்கும்
கூரிய முட்களை
ஊசியாக்கிக் கொண்டால்
உதிரிப்பூக்கள்
மாலையாகிக்கொள்ளும்.

தோற்பதும் வெல்வதும்
வீரனுக்கு அழகு.
முதலில்
தோற்றுப்பழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக