மதில் சுவரைத்
தாண்டிப் பறந்த
செய்தித்தாள் பறவை
பூ பூ
என்று கூவிய
பூக்காரியின்
வாசனை வார்த்தை
அமுதம் சுமந்துவரும்
பால்காரனின்
வெள்ளை அழைப்பு
புள்ளிவைக்கும்
அழகிய கோலப்பெண்களின்
விரல்கவிதைகள்
செவிக்குள் நுழைந்து
ஆன்மாவிற்குள் இறங்கும்
சுப்ரபாதம்
பனிப் பவுடரை
பூசிக்கொண்டு
அழகேற்றும் பூமிப்பெண்
புரிந்தும் புரியாத
குருவிகளின்
ரகசிய பரிபாசைகள்
குளிரில் நடுங்கும் பூமிக்கு
வெப்பமுத்தம் வைக்கும்
சூரியன்
காவி உடுத்தி
துறவுக்கு தாயாராகும்
வானம்
குங்குமம் சந்தானம் திருநீற்றின்
அறிவிப்புபலகையாய்
நெற்றி
பூந்தோட்டம் சுமக்கும்
பூவையரின்
மலர்க்கூந்தல்
நுரையீரல் நிரப்பிவைக்கும்
ஊதுபத்தி வாசனை.
பிரார்த்தனை வழியும்
பூஜையறை வாசற்படி
உறக்கம் தெளியாமல்
அழுகையோடு செல்லும்
பள்ளிக்குழந்தைகள்
உணவு ஊட்டிய
எச்சில் கையேடு
டாடா சொல்லும் அம்மாக்கள்
ஆலயம் சென்று திரும்பும்
செருப்பில்லா
பாதங்கள்
கேட்காமல் வரங்களாய்
நலம்விசாரிப்புக்கள்
உள்ளங்கையையும் உதட்டையும்
இணைக்கும்
தெய்வப் பிரசாதங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக